உலகம் (World)

நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு.. உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்கள்

Published On 2023-05-22 14:32 GMT   |   Update On 2023-05-22 14:32 GMT
  • வீட்டின் பின்பகுதியில் இருந்து தீ பரவியதாக தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.
  • அந்த வீடு கடுமையாக சேதமடைந்ததால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லண்டன்:

பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று  நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் நெருப்பில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்கள் அங்குமிங்கும் ஓடியபடி சத்தமாக குரைத்தன.

நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடுகள் தீப்பிடித்து எரிவதை அறிந்து உடனடியாக தன் மனைவியுடன் வெளியேறினார். சிறிது நேரத்தில் வீட்டின் மேற்பகுதி கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகியது. சரியான சமயத்தில் நாய்கள் குரைத்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.

வீட்டைவிட்டு வெளியேறியதும் தீயணைப்பு துணைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். வீட்டின் பின்பகுதியில் இருந்து தீ பரவியதாக தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அந்த வீடு கடுமையாக சேதமடைந்ததால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. தீப்பற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News