நெல்லையைச் சேர்ந்தவருக்கு துபாய் லாட்டரியில் ரூ.2¼ கோடி பரிசு
- பீர் முகம்மது ஆதம் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
- இம்முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம்.
துபாய்:
துபாயில் தனியார் நிறுவனம் சார்பில் அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கல் வாரந்தோறும் நடந்து வருகிறது.
தமிழகத்தில் நெல்லையை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் (வயது 41). இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அவர் அதிர்ஷ்ட லாட்டரியில் வாங்கிய சீட்டுக்கு 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் கடந்த 2007-ம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவி மற்றும் 4 வயது மகள் நெல்லையில் வசித்து வருகின்றனர். துபாயில் கடந்த 3 ஆண்டுகளாக நானும் என்னுடைய இந்திய, பாகிஸ்தானிய நண்பர்கள் என மொத்தம் 20 பேர் சேர்ந்து மாதந்தோறும் அதிர்ஷ்ட லாட்டரியில் பங்கு பெறுவோம்.
இம்முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம். முதல் முறையாக எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.