search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-2)
    X

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-2)

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

    `கருணையின் வாசல் திறக்கப்படும் புனித ரமலான்'

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) புனித ரமலானில் கருணையின் வாசல் திறக்கப்பட்டதன் பின்னணியில் தான் மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வணக்க வழிபாடுகளில் ஈடுபட வழி பிறக்கின்றன. பாவங்களில் இருந்து விலகியிருக்க வாய்ப்பு கிடைக்கின்றன.

    அன்பு மலர்கின்றன, அமைதி நிலவுகின்றன, சாந்தி பரவுகின்றன, சமாதானம் பிறக்கின்றன, சகோதரத்துவம் வளர்கின்றன. ஈவு, இரக்கம், ஈகை ஆகிய பண்புகள் பரிணமிக்கின்றன. இறைவனின் அன்பு, அவனின் தரிசனம், சொர்க்கம் இவையாவும் ஒருவரின் வணக்கத்தினால் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. இதற்கும் மேலாக இறைவனின் கருணை அவசியம் தேவைப்படுகிறது.

    நபி (ஸல்) அவர்கள், 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது, (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்)' என்று கூறினார்கள்.

    மக்கள், 'தங்களையுமா? (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லையா) இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம்), என்னையும் தான்; அல்லாஹ் தனது கருணையாலும், அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி)

    ஆயிஷா (ரலி) கூறுகிறார்: 'நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக! எனக்கு கருணை புரிவாயாக, மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்.' (நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல் லாஹ் கருணையை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்குகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டான் (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால்தான் குதிரை தனது குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'அல்லாஹ் அன்பையும், கருணையையும் படைத்தபோது, அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் 99 வகைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டான் (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப் போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    'ஆனால் எனது கருணை எல்லாப் பொருட்களின் மீதும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும், அதனை பயபக்தியுடன் பேணி நடப்போருக்கும், (முறையாக) ஜகாத் கொடுப்போருக்கும், நமது வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள்செய்வேன்' (திருக்குர்ஆன் 7:156)

    இறைவனின் கருணை கிடைத்திட மேற்கூறப்பட்ட நற்செயல்களையும் சேர்த்து, புனித ரமலானில் நோன்பு நோற்றால் இறைவனின் கருணை கிடைக்கும். இறைவனின் கருணைப்பார்வை நம் மீது விழும் போது பாவ மன்னிப்பும், சொர்க்கமும் உறுதியாகும்.

    Next Story
    ×