என் மலர்tooltip icon

    வழிபாடு

    மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா
    X

    மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா

    • காவிரி தாய்க்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் மயிலாடுதுறையில் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் புனித நீராடி பாவங்களில் இருந்து விடப்பட்டதாக ஐதீகம். முன்பு ஒரு காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுக தீர்த்தவாரி விழா நடந்துள்ளது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு புனித நீராட வெளியூரை சேர்ந்த நடக்கமுடியாத பக்தர் ஒருவர் விரும்பினார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை.

    அவர் வருவதற்குள் கடைமுக தீர்த்தவாரி விழா முடிவடைந்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்தபக்தர் இறைவனை நோக்கி வருத்தத்துடன் பிரார்த்தனை செய்தார். அப்போது அவரது முன்பு தோன்றிய சிவபெருமான் உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனைப் பெறுவார்கள் என்று அருளாசி வழங்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல நேற்று மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு விழா நடந்தது.

    இதையொட்டி காவிரி தாய்க்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×