என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    • கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும்.
    • உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.

    தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.

    மற்ற மதுவகைகளை விட தற்போது குளிர்ந்த பீருக்கு தான் தேவை அதிகமாக உள்ளது. பார்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குளிர்ந்த பீர்களை வாங்கி குடிக்கிறார்கள்.

    வெயில் தாக்கத்திற்கு பீர் இதமாக இருப்பதாக கருதி பெரும்பாலான மதுபிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். கோடை காலத்தில் எப்போதுமே பீர் விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது விற்பனை சூடுபிடித்து உள்ளது.

    பீர் குடிப்பதால் உடலுக்கு நல்லதா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    மது குடிப்பது உடலுக்கு தீங்கானதாகும். இதனால் கல்லீரல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தொடர்ந்து மது பழக்கத்திற்கு ஆளாகி குடிப்பதால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்.

    கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும். உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.

    மற்றொரு பாதிப்பு வயிற்றுப் பகுதியாகும். மது அருந்துவதால் வயிறு புண்ணாகி அதில் இருந்து ரத்தம் வரக்கூடும். 3-வதாக உடல் உறுப்பான கணையம் பாதிப்படையும். கணையம் பாதிக்கும் போது உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பல்ஸ் குறையும். இதனால் நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் பாதிக்கும்.

    4-வது வகை மதுவுக்கு அடிமையாகுதல் ஆகும். தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களால் ஒரு நாள் கூட குடிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற மது போதைக்கு அடிமையானவர்கள் குடிக்காமல் விட்டு விட்டால் ஒரு வலிப்பு வரும்.

    திடீரென மதுபழக்கத்தை நிறுத்தும் போது இந்த பாதிப்பு ஏற்படும். இது மூளையையும் பாதிக்கும்.

    5-வது வகையான பாதிப்பு தொடர்ந்து மது குடிப்பதால் கை, கால், நரம்புகள் பாதிக்கும். கை, கால் பகுதி உணர்ச்சியற்றதாகி விடும். பாதம் எரியும் அல்லது மறத்து விடும். இது போன்ற பாதிப்புகள் குடியை நிறுத்த முடியாமல் தினமும் குடிப்பவர்களுக்கு ஏற்படும்.

    அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 10 முதல் 20 பேர் வரை மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள். இளம் வயதில் மது பழக்கத்திற்கு ஆளாகி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை தற்போது அதிகரித்து உள்ளது. பெண்கள் கூட சிலர் மதுவுக்கு அடிமையாகி சிகிச்சை பெறுகிறார்கள்.

    கோடை காலத்தில் பீர் அதிகளவில் குடிப்பதால் உடலுக்கு நல்லது எதுவும் இல்லை. அவை குளிர்ச்சியும் கிடையாது. பீர் குடிப்பதும் உடல் நலத்திற்கு பாதிப்பு தான். பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளை விட பீரில் ஆல்கஹால் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

    பீர் தினமும் குடிப்பது பாதிப்பை உண்டாக்கும். வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் இருதயத்திற்கு நல்லது.

    குறைவாக குடிக்கும் போது ரத்தக் குழாய் விரிவடையும். குளிர்ந்த பீர் குடிப்பதனாலும் எந்த நன்மையும் இல்லை. கோடை காலத்திற்கு என்றோ குளிர்காலத்திற்கு என்றோ பீரை வகைப்படுத்தக் கூடாது.

    எல்லா மதுபானங்களும் உடலுக்கு தீமைதான். ஆனால் பீர் வகைகள் அடிக்கடி எடுக்காமல் குறைவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது.
    • டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.

    பெண்களின் மனதுக்கு நெருக்கமான பட்டுப்புடவையில் கறை ஏற்படும்போது, அவர்கள் கலங்கிவிடுவார்கள். ஆனால், அதிகம் அலட்டிக்கொள்ளாமல், பட்டுப் புடவை கறைகளை நீக்க முடியும். அதுகுறித்து...


    பூஜை போன்றவற்றின்போது பட்டுப் புடவையில் எண்ணெய் பட்டு விடலாம். அப்படி எண்ணெய்க் கறை பட்டால், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக ஈரம் இல்லாத சுத்தமான காட்டன் துணியை கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். துணி கிடைக்காவிட்டால், 'டிஷ்யூ' பேப்பர் கொண்டும் குறிப்பிட்ட இடத்தில் ஒற்றி எடுக்கலாம்.


    மிகவும் கவனமாக இதை செய்ய வேண்டும். கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது. அழுத்தி தேய்த்தால் மற்ற இடங்களுக்கும் கறை பரவும் வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை எண்ணெய் பட்ட இடத்தை மட்டும் மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.

    இந்த மாதிரி துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்த பின்னர், அந்த இடத்தில் டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும். பவுடர் தூவியதும், கறைபட்ட இடத்தை குழாயில் ஓடும் நீரில் அலசினால் போதும். படிந்துள்ள எண்ணெய், அழுக்குகள் எல்லாமே நீங்கிவிடும். மறந்தும் கூட வெந்நீரில் கறையை நீக்க முயற்சி செய்ய வேண்டாம். வெந்நீர் பட்டால் கறை நீங்கவே நீங்காது.


    சோப்பு கரைசலை வைத்தும் பட்டுப்புடவையில் உள்ள கறைகளை நீக்க முடியும். இதற்கு கடின சோப்பை பயன்படுத்தாமல் மென்மை தன்மை கொண்ட லிக்விட் சோப்பை உபயோகிக்கலாம்.

    லிக்விட் சோப்பை குளிர்ந்த தண்ணீரில் கரைத்து, அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் நனைத்துக்கொள்ள வேண்டும். இதை, விடாப்பிடி யான கறையின் மீது மெதுவாக வைத்து தேய்க்க வேண்டும். வேகமாகவோ அல்லது அழுத்தி துடைத்தாலோ பட்டுப்புடவையில் உள்ள நூலிழைகள் அறுந்துவிடும் வாய்ப்புள்ளது.

    எனவே, மெதுவாக தேய்க்க வேண்டும். அடுத்தகட்டமாக, இந்த நுரைகளை நீக்குவதற்கு கறை உள்ள இடத்தை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். அப்போது கறை நீங்கி, பட்டுப் புடவை பழைய நிலைக்கு வந்துவிடும்.

    • கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன.
    • ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    வயதாகும்போது தசையின் நிறை, வலிமை, செயல்பாடுகள் படிப்படியாக பலவீனமடைய நேரிடும். இந்த நிகழ்விற்கு என்ன பெயர் தெரியுமா? இது மருத்துவ துறையில் `சர்கோபீனியா' என அழைக்கப்படுகிறது.

    வயது ஏற ஏற தசை இழப்பு ஏற்படும். இதனால், நடையின் வேகம் குறையும். கைகளை ஊன்றாமல் எழுந்திருக்க முடியாது. இதன் தாக்கத்தின் தன்மை மனிதர்களுக்குள் மாறுபடும். முதுமை தவிர, புகைப்பிடித்தல், மது பழக்கம், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, வைட்டமின் டி, புரதச்சத்து குறைபாடு ஆகியவையும் காரணிகளாக கூறப்படுகிறது. சர்கோபீனியாவை எவ்வாறு தடுப்பது என்று பார்ப்போம்.

    சுறுசுறுப்பாக இருங்கள்

    தசை இழப்பை தடுக்க எப்பொழுதும் உடலானது இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். வயதானவர்கள் முடிந்தவரை நிற்க முடிந்தால் நில்லுங்கள், உட்கார முடியுமாயின் சிறிது நேரம் உட்காருங்கள். எப்பொழுதும் படுத்தே இருக்க அனுமதிக்காதீர்கள். தசை இழப்பை தடுப்பதற்கு சிறந்த வழி இயங்கி கொண்டே இருப்பதுதான்.


    வயதானவர்களை நடக்க ஊக்கப்படுத்துங்கள்

    வயதானவர்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்களை எப்பொழுதும் படுத்தே இருக்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ ஊக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் தடுமாற்றமின்றி நடப்பதற்கு உதவுங்கள். இல்லையெனில் அவர்கள் முன்பை விட மிகவும் பலவீனமாகிவிடுவார்கள்.


    ஒரு வாரம் அவர்கள் படுக்கையில் இருந்தால், தசை நிறையில் 5 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். மேலும் அவர்களால் இந்த இழப்பை மீண்டும் முழுமையாக மீட்டெடுக்க முடியாது.

    ஆஸ்டியோபோரோசிஸை விட பாதிப்பு அதிகம்

    எலும்பின் வலிமை குறைந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறும் ஒரு நிலைக்கு `ஆஸ்டியோபோரோசிஸ்' என்று பெயர். இதனால் அவர்கள் எளிதில் கீழே விழுந்து எலும்பை உடைத்துக் கொள்வார்கள். ஆனால் இதை விட சர்கோபீனியா அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தசை நிறை குறைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுத்துவிடும்.


    ஓய்வில் இருந்தால் விரைவான தசை இழப்புக்கும் வழிவகுக்கும்

    கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன. எனவே உடலின் இயக்கத்திற்கு அவை மிகவும் முக்கியமானவை. வயதானவர்கள் உட்கார்ந்து அல்லது படுத்தே இருப்பதால் கால்களின் இயக்கம் குறைகிறது. இது கால்களின் தசையை பலவீனப்படுத்துகிறது.

    கால்களில் உள்ள தசைகள் எப்பொழுதும் ஓய்வில் இருந்தால், அது மோசமான விளைவை சந்திக்கிறது. நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் தசை நிறையை சரியாக பராமரிக்க உதவும் சிறந்த வழிகளாகும்.


    வயதாகி முதுமை எட்டும்போது, கால்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தசைகள் வலிமைப்படும். இரண்டு வாரங்களுக்கு கால்களை அசையாமல் வைத்திருந்தால், பத்து வருட காலத்திற்கு அதன் வலிமையை இழக்க நேரிடும்.

    சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் தசை வலிமையை பராமரிக்க உதவிடும். எனவே கால்களின் வலிமையை பராமரிக்க ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களில் 5 முதல் 13 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 முதல் 50 சதவீதம் பேரும் சர்கோபீனியா பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த 40 ஆண்டுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இது பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தசை இழப்பை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், சுறுசுறுப்பாக இருந்தால் அதன் தீவிரத்தைக் குறைக்கலாம்.

    • கிராமப் புறங்களில் வசிப்பவர்களைத் தவிர, நகரங்களில் வசிக்கும் மக்கள் நீச்சல் குளங்களுக்குச் செல்கிறார்கள்.
    • பல மணி நேரம் தண்ணீரில் குளிக்கிறார்கள்.

    கோடை காலம் வந்துவிட்டால், சிலர் வெயிலைத் தாங்க முடியாமல் தங்கள் உடலைக் குளிர்விக்க ஏதாவது தேடுகிறார்கள். இன்னும் சிலர் நீச்சலை நாடுகிறார்கள்.

    கிராமப் புறங்களில் வசிப்பவர்களைத் தவிர, நகரங்களில் வசிக்கும் மக்கள் நீச்சல் குளங்களுக்குச் செல்கிறார்கள். பல மணி நேரம் தண்ணீரில் குளிக்கிறார்கள்.

    நீச்சல் குளங்களில் நீந்துவது, மணிக்கணக்கில் தண்ணீரில் இருப்பது கூட ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கண் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
    • ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன்களில் திரையை தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

    ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்கள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

    இதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

    இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .

    இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

    அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

    ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைய தலைமுறையினர் இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கும் அதன் காரணம் மற்றும் விளவுகளை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் ஏற்படுகிறது.
    • தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.

    சென்னை:

    சென்னையில் மெட்ராஸ் - ஐ கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    கோடை காலம் தொடங்கி இருப்பதால் தற்போது சென்னையில் மெட்ராஸ் - ஐ எனப்படும் கண் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கண் எரிச்சல், வெளிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ்-ஐ பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

    இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சென்னையில் கண் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


    இதுகுறித்து, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் யஷ்வந்த் ஆர்.ராஜகோபால் கூறியதாவது:-

    மழை மற்றும் வெயில் காலத்தில் காலநிலை மாறும்போது மெட்ராஸ் - ஐ பாதிப்பு பரவுகிறது. அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் இது ஏற்படுகிறது. தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.

    நோய் பாதிப்பு ஏற்பட்டவரின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது. தொடுதல் மூலமாகவே பரவும். மெட்ராஸ்-ஐ தொண்டை மற்றும் கண் ஆகிய 2 உறுப்புகளையும் பாதிக்கும்.

    10 முதல் 14 நாட்களில் இது தானாகவே சரியாகிவிடும். இதை தடுக்க கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிவது, சத்தான உணவுகளை எடுத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    மெட்ராஸ் - ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. சிலர் கண்களுக்கு தாய்ப்பால் ஊற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்து அதை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்தால் பாதிப்பு அதிகரித்துவிடும்.

    கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும். தற்போது பள்ளி மாணவர்கள் மூலம் அதிகமாக பரவுகிறது. எனவே, மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பது அவசியம். மெட்ராஸ் - ஐ பாதிப்பு அறிகுறி தெரியும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.

    கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் `தக்காளி காய்ச்சல்' பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

    உடலில் சிவப்பு நிறத்தில் தக்காளி போல் சிறிய கொப்புளங்கள் தோன்றுவதால் இந்த பாதிப்பை தக்காளி காய்ச்சல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர்.


    இதுதொடர்பாக குழந்தைகள் நல டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    கை, கால் மற்றும் வாய் நோயால், குழந்தைகளுக்கு தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல், அதிக காய்ச்சல் மற்றும் சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாகவே சரி ஆகிவிடும்.

    மேலும், இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கை, கால் மற்றும் வாய் நோய் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.

    பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும் அவர்கள் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த காய்ச்சலை தவிர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது.
    • பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும்.

    உடலில் ஏற்பட்ட ஒரு காயத்தை, ஒரு புண்ணை திறந்து விட்டு மருந்து போட்டுக் கொண்டிருப்பது சரியா அல்லது மருந்து தடவி கட்டு கட்டி மூடி வைத்திருப்பது சரியா?


    காயம் ,சாதாரண புண், அடிபட்டு தையல் போட்ட இடத்தில் ரணம் இவை எல்லாமே நமது உடலின் ஏதாவதொரு இடத்திலுள்ள தோலில் தான் ஏற்பட்டிருக்கும். தோல் நமது மொத்த உடலையும் மூடியிருக்கும் ஒரு மிகப்பெரிய உறுப்பு ஆகும். தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது. மேல்தோல், நடுத்தோல் மற்றும் அடித்தோல் ஆகும்.

    மேலோட்டமான காயம் அதாவது வெறும் மேல்தோலில் மட்டும் தோல் கிழிந்து காயம் ஆகியிருக்கிறது, உதாரணத்திற்கு- சுடுதண்ணீர் உடம்பில் கொட்டி அதனால் ஏற்பட்ட காயம் என்றால் அதை திறந்து விடுவது தான் நல்லது. அதே நேரம் ஒரு ஆழமான காயம் என்றால் மருந்து வைத்து கட்டுகட்டி மூடி வைப்பதுதான் நல்லது.


    சில புண்களிலிருந்து சீழ், ரத்தம், நீர் போன்றவை வடிவதுண்டு. இம்மாதிரி ரணங்களை மூடி வைப்பதுதான் சிறந்தது. சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு தினமும் மருந்து தடவி மூடாமல் விட்டுவிட்டால் சீக்கிரம் ஆறிவிடும்.

    ஆனால் அந்த காயம் அழுக்கு, தூசி படாமல், துணி உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விபத்தினால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள், செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் கடித்ததினால் ஏற்பட்ட காயங்களை திறந்து வைத்து சிகிச்சை அளித்தால் சீக்கிரம் ஆறிவிடும்.


    கடுமையான தீப்புண் முதலியவைகளை கிருமிகள் சுத்தமாக நீக்கப்பட்ட பேண்டேஜ் கொண்டு மூடிவைப்பது நல்லது. ஆழமான காயங்களை கிருமிநாசினி சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் நன்கு பலமுறை கழுவி பின் பாக்டீரியா எதிர்ப்பு ஆயின்ட்மென்டை தடவி சுத்தமான பேண்டேஜ் வைத்து கட்டு கட்டி விடுவதுதான் மிகவும் நல்லது.

    மருந்து தடவி பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும். தூசி அழுக்கு படாது. கிருமிகள் உள்ளே நுழையாது.

    காயம் மேல்தோல், நடுத்தோல், அடித்தோல் தாண்டி மிக ஆழமாக தசைகளுக்கு போய்விட்டிருந்தால் கட்டு கட்டி மூடி வைப்பதுதான் சிறந்தது.

    • புளிப்பான உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

    ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய் என்பது சித்த மருத்துவத்தில் 'வளி அழல் கீஸ் வாயு' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு நோய்.

    நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களை சேதப்படுத்துவதால் வருவதாகும். கை, கால், மணிக்கட்டு, கணுக்கால், விரல்கள் ஆகிய இடங்களில் நாள்பட்ட அழற்சியுடன் வீக்கத்தை ஏற்படுத்தும்.


    மேலும் அவ்விடங்களில் வெப்பம், சிவப்பு நிறம், எரிச்சல் அல்லது வலியையும் உண்டாக்கும். இந்நோய் எளிதில் மருத்துவத்திற்கு அடங்காமலும், மருத்துவத்திற்கு அடங்கினும் மீண்டும் திரும்பி வருவதுமாயிருந்து, பாதிக்கப்பட்ட கீல்கள் கரடு கட்டினது போல நீட்டவும், நன்றாய் மடக்கவும், முடியாத வண்ணம் நிலைத்து விடச் செய்வதுண்டு.


    இந்நோயில் தூக்கமின்மை, சிறு சுரம், காலையில் எழுந்தவுடன் கை விரல்கள், மூட்டுகளில் விறைப்புத்தன்மை, விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.


    இந்நோயை ஆர்.ஏ மற்றும் 'சைக்ளிக் சிட்ருலினேடட் பெப்டைடு' (சி.சி.பி), 'நியூக்ளியர்' (ஏ.என்.ஏ) போன்ற ரத்த பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

    இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது, புளிப்பான உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவர்களது உடலில் வாதமும், பித்தமும் அதிகரித்திருக்கும். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

    • ஆண்களை விட இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
    • உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும்.

    மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்பது தமிழில் 'வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்று அழைக்கப்படு கிறது. இதற்கு சிண்ட்ரோம் எக்ஸ், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் சிண்ட்ரோம், டிஸ்மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.

    வளர்சிதை மாற்றம் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டசத்துக்களை உறிஞ்சி, அதனை ஆற்றலாக மாற்றி உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது.


    இந்தியாவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர் வளர்சிதை மாற்ற நோய் பிரச்சினையால் (குறிப்பாக இளம் வயதினர்) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நோய் கீழ்குறிப்பிட்டுள்ள ஐந்து நிலைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

    உடல் பருமன் (குறிப்பாக தொப்பையை சுற்றிகொழுப்பு படிதல்), உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக டிரைகிளசரைடு அளவு, இன்சுலின் எதிர்மறை நிலையால் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, ரத்தத்தில் குறைவான அளவு நல்ல கொலஸ்ட்ரால்(எச்.டி.எல்).

    வளர்சிதை மாற்ற நோய்க்குறி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் பிளேக் படிதலை உண்டாக்கி பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படக்கூடிய அபாயத்தை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வளர்சிதை மாற்ற நோய்க்குறி மீள்மாற்றம் சாத்தியம் உள்ள ஒரு நிலையாகும். இந்நோய்க்குறி வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், புரதங்கள் நிறைந்த கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை அதிகம் உண வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


    எண்ணெய்யில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை குளிர் பானங்கள், பேஸ்ட்ரி, சாக்லெட் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும். குறிப்பாக இடுப்பின் சுற்றளவை ஆண்கள் 94 சென்டிமீட்டருக்கு மிகாமலும், பெண்கள் 80 சென்டி மீட்டருக்கு மிகாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.

    யோகா, சுவாசப்பயிற்சி, தியானம் போன்றவையும் நல்ல பலனளிக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ், டிரைகிளசரைடு மற்றும் எச்.டி.எல் அளவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைத்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

    • ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும்.
    • 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.

    ஒவ்வொரு மனிதனும் 100 ஆண்டுகள் முழுமையாக வாழ விரும்புகிறான். ஆனால் பலர் பல்வேறு நோய்களால் 70 வயதிற்கு முன்பே இறக்கின்றனர். சுகாதார அமைப்பான லான்செட் கமிஷன் தனது உலக சுகாதாரம்-2050 அறிக்கையில், தற்போதைய அகால மரணங்களின் எண்ணிக்கையை 2050-ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க முடியும் என்று வெளிப்படுத்தியுள்ளது.

    இது சாத்தியமாக, அந்தந்த நாடுகள் சுகாதாரப் பராமரிப்புக்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

    அனைவரையும் சுகாதார விழிப்புணர்வுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல முறையான மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அகால மரணங்களைக் கணிசமாகக் குறைக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது.


    2001 முதல் 2018 வரை இந்தியாவில் சுமார் 37 மில்லியன் மக்கள் அகால மரணமடைந்துள்ளனர். இந்த இறப்புகளுக்கு 4 தொற்றா நோய்கள் முக்கிய காரணமாகும்.

    அதிக எண்ணிக்கை யிலான இறப்புகள் இதய நோய் (58.3 சதவீதம்), புற்றுநோய் (18.6 சதவீதம்), நாள்பட்ட சுவாச நோய்கள் (15.5 சதவீதம்) மற்றும் நீரிழிவு நோய் (5.6 சதவீதம்) ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளன.

    காற்று மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதற்குக் காரணங்களாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இவற்றுடன் சாலை விபத்துகளும் நாட்டில் அகால மரணங்களுக்கு வழிவகுக்கும். தற்கொலைகளும் அதிக அளவில் உள்ளன.

    எச்.ஐ.வி., காசநோய் நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் சாலை விபத்துகள் கடுமையான சுவாச நோய்கள் மற்றும் குழந்தை இறப்பு போன்ற 15 காரணிகள் சராசரி ஆயுட்காலத்தைக் குறைக்கின்றன.

    8 வகையான தொற்றுகள் தாய்வழி சிக்கல்கள் மற்றும் 7 தொற்றாத நோய்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக நிதி செலவிடப்பட வேண்டும்.

    புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்களை விட்டுவிடுங்கள்.

    நீங்கள் ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும். உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் மன அழுத்தத்தைக் குறைக்கவும். குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.


    கார்போஹைட்ரே ட்டுகள் அதிகமாகவும் புரதம் அதிகமாகவும் உள்ள உணவை உண்ணுங்கள் பருவகால பழங்கள். கீரைகள் மற்றும் காய்கறிகள் உணவில் அதிகமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்

    பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.
    • இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.

    கோடை காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். சன்ஸ்கிரீன், பேஷியல், மாய்ச்சுரைசரிங் கிரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். இதில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் விஷயத்தில் நிறைய கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அவை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.


    கட்டுக்கதை:

    மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை.

    உண்மை:

    சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மேகங்கள் வழியாகவும் ஊருடுவும் அபாரசக்தி படைத்தவை. அதனால் சூரியனே தெரியாத அளவுக்கு வெயிலே இல்லாமல் இருள் சூழ்ந்த காலநிலை நிலவினாலும் கூட சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாவிட்டால் பாதிப்புதான் ஏற்படும்.

    முன்கூட்டியே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கும் வழிவகுத்துவிடும். அதனால் மேகமூட்டமான நாட்களிலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள மறக்காதீர்கள்.

    கட்டுக்கதை:

    கருமையான சரும நிறம் கொண்டவர்கள் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தேவையில்லை.

    உண்மை:

    மெலனின் என்னும் நிறமி கருமையான சருமத்திற்கு இயற்கையாகவே பாதுகாப்பு அளிக்கும் என்றாலும் சூரியனிடம் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது. எந்த நிற சருமம் கொண்டவர்களாக இருந்தாலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    அதிலும் கருமை நிற சருமம் கொண்டவர்கள் போதிய சரும பராமரிப்பை மேற்கொள்ளாவிட்டால் சரும எரிச்சல், கரும்புள்ளிகள் தோன்றுதல், சரும புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே ஒவ்வொருவரும் சரும நிறத்தை பொருட்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.


    கட்டுக்கதை:

    அதிக எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் நீண்ட நேரம் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    உண்மை:

    எஸ்.பி.எப் 50 கொண்ட சன்ஸ்கிரீன் 'சூப்பர் பவர்' போல் செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்தான். ஆனால் நாள் முழுவதும் வெயிலில் இருந்து பாதுகாப்பை வழங்காது. அதிக வியர்வை வெளிப்பட்டாலோ, நீச்சல் பயிற்சி மேற்கொண்டாலோ மீண்டும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது அவசியமானது.

    குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.

    கட்டுக்கதை:

    முகத்தில் மட்டும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதும். மற்ற சரும பகுதிகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை.

    உண்மை:

    சன்ஸ்கிரீன் என்பது முகத்திற்கு மட்டுமே உபயோகிக்கக்கூடிய கிரீம் அல்ல. கழுத்து, காது, கை, கால்கள் என எல்லா பகுதிகளிலும் சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தின் எந்த பகுதிக்கும் பாகுபாடு காண்பிக்காது. ஆடை அணிந்த பிறகு மறைக்காத உடல் பாகங்கள் அனைத்திற்கும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும்.

    கட்டுக்கதை:

    எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீன் உடன் ஒப்பனை அணிவது போதுமானது.

    உண்மை:

    மேக்கப்புடன் எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீனை பூசினால் மட்டும் போதாது. பெரும்பாலானோர் போதுமான அளவுக்கு ஒப்பனை மேற்கொள்வதில்லை. மேக்கப் செய்வதற்கு முன்பாக முதலில் பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு மேக்கப் செய்து கொள்வது நல்லது.


    கட்டுக்கதை:

    சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் மட்டுமே போதுமானது.

    உண்மை:

    சன்ஸ்கிரீன் சிறந்ததுதான். ஆனால் அதுமட்டுமே சூரியனிடம் இருந்து பாதுகாப்பு தருவதற்கு ஏற்றதல்ல. சிறந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்திய பிறகு சன்கிளாஸ் அணிந்து கொள்ள வேண்டும்.

    அதுபோல் அகலமான தொப்பி அணிந்து கொள்வதும், பருத்தி ஆடை உடுத்துவதும் அவசியமானது. சூரியனின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.

    கோடை கால மாதங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    ×