என் மலர்


கூரன்
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 340 |
Point | 60 |
கார் ஏற்றி கொல்லப்பட்ட குட்டிக்காக ஒரு தாய் நாய், நியாயம் கேட்டு போராடும் கதை.
கதைக்களம்
கொடைக்கானல் பகுதியில் வாழ்ந்து வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், சாதனை படைத்த வக்கீலாக இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக எந்த வழக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தன் கண்ணெதிரேயே ஒரு குடிகாரன் ஒருவன் காரை விட்டு ஏற்றிக்கொன்று விட்டு செல்கிறான். அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது. தனக்கான நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது, அங்கே அது துரத்தியடிக்கப்படுகிறது. அதன் பிறகு வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டுக்குச் செல்கிறது. காவலாளி அங்கேயும் அதை விரட்டி அடிக்கவே, மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறது. அதைக் கவனித்த எஸ்.ஏ.சந்திரசேகர், அது ஏதோ சொல்ல விரும்புகிறது என்று அதன் உணர்வுகளைக் கவனிக்கிறார். நாயின் உணர்வுகளை புரிந்துக் கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், கோர்ட்டில் வாதாட முடிவு செய்கிறார்.
இறுதியில் எஸ்.ஏ.சந்திரசேகர், நாய்க்காக வாதாடி ஜெய்த்தாரா? குட்டி நாயை வண்டியில் ஏற்றி கொன்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கூர்மையாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் நிதானமாக நடித்து இருக்கிறார். தெளிவான வாதத்தின் மூலம் நாய் பக்கம் இருக்கும் நியாயத்தை படம் பார்ப்பவர்களிடமும் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
ஜான்சியாக வரும் நாய், படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக வலம் வந்திருக்கிறது. பயிற்சியாளரின் சொல்படி கேட்டு சிறப்பாக நடித்திருக்கிறது. நீதிபதியாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, வழக்கறிஞராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
கார் ஏற்றி கொல்லப்பட்ட குட்டிக்காக ஒரு தாய் நாய், நியாயம் கேட்டு போராடும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நிதின் வேமுபதி. பார்வையற்றவரை சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சியாக சித்தரித்திருப்பது சிறப்பு. நாயிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். தாய்மை உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்று சொல்லி இருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.
இசை
சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ், நாயின் நடவடிக்கைகளை திறமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தயாரிப்பு
கனா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.