search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைத்தேர்தல் புறக்கணிப்பு: அ.தி.மு.க. எதிர்காலத்துக்கு நல்லதா?
    X

    இடைத்தேர்தல் புறக்கணிப்பு: அ.தி.மு.க. எதிர்காலத்துக்கு நல்லதா?

    • தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.
    • இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த முடிவு சரியா? தவறா? கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதுதானா? என்று தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.

    ஏற்கனவே பாராளு மன்றத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து இருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் புறக்கணிப்பு தொண்டர்களை சோர்வடையச் செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த காலங்களில் சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தி.மு.க.வும் புறக்கணித்த வரலாறு இருக்கிறது. எனவே இது ஒரு பிரச்சினையாக இருக்காது. எல்லாவற்றையும் வெற்றிகரமாக சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிறார்கள் அதி.மு.க.வினர்.

    பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறும் போது, `ஆளுங்கட்சியின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகத்தை பார்த்து ஒரு கட்சி இவ்வாறு முடிவெடுப்பது சரியாக இருக்காது.

    இப்போது போட்டிக் களத்தில் இருந்து அ.தி.மு.க. விலகி இருப்பதன் மூலம் பா.ஜ.க. மேலும் வளர வழிபிறக்கும். அதேநேரம் சமீபகாலமாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு விவாதத்துக்குள்ளாகும்.

    தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் தாக்கப்படுகிறது. கட்சிக்குள்ளும் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

    அதனால்தான் புறக்கணிப்பு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பார் என்று கூறுகிறார்கள்.

    இதற்கிடையில் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும் கட்சியை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

    இதை அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு சரியானது என்பது தொண்டர்களுக்கு புரியும். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல. தேவையில்லாமல் தொண்டர்களின் உழைப்பையும் பொருளையும் வீணடிக்க அவர் விரும்பவில்லை.

    அம்மா காலத்திலும் தேர்தல் புறக்கணிப்பு நடந்துள்ளது. 2009-ல் 5 தேர்தல்களை அவர் புறக்கணித்தார். எனவே இதனால் கட்சி பலவீனமாகி விடும் என்ற வாதம் சரியானதல்ல.

    சசிகலாவும் பேசி பேசி பார்க்கிறார். ஆனால் யாரும் அவர் பக்கம் போகவில்லை. எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் அ.தி.மு.க.வுக்கு தலைமை வகிப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார்.

    எழுத்தாளர் துரைகருணா கூறும்போது, ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் இருந்தாலும் அதை எதிர்த்து நின்று ஆளும் கட்சிக்கு எதிராக இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் மூலம் வெளிப்படுத்தினால் தான் கட்சி வலுப்பெறும். மக்கள் நம்பிக்கையை பெறும் என்றார்.

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சமரசம் இந்த கருத்துக்களை மறுத்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பது சரியான முடிவுதான். அ.தி.மு.க.வின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். இடைத்தேர்தல் அல்ல.

    திருமங்கலம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்பது தொண்டர்களுக்கு தெரியும். எனவே தேவையற்ற சிரமத்தை தொண்டர்களும் விரும்பமாட்டார்கள் என்றார்.

    மேலும் சில கட்சி நிர்வாகிகள் கூறும்போது, `ஒரு தொகுதி இடைத்தேர்தலை வைத்து கட்சி பலவீனமாகிவிடும் எனறு கணிக்க முடியாது. தொண்டர்களை பொறுத்தவரை கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை ஆதரிப்பார்கள்.

    முக்கியமாக தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வால்தான் முடியும் என்பது கட்சியினரையும் தாண்டி பொதுமக்களுக்கும் தெரியும். எனவே செல்வாக்கு எந்த வகையிலும் குறையாது' என்றனர்.

    Next Story
    ×