என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி: குடும்பத்துடன் தலை மறைவு

- இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
- வாலிபர் காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர்:
விழுப்புரம் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த என்ஜினீயரிங் மாணவி குடும்பத்துடன் தலை மறைவாகிவிட்டார்.
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் பிளஸ்-2 வரை படித்து விட்டு, தனது வீட்டில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய மாணவி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வருகிறார்.
இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனிலும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. காதலுக்கு வாலிபர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே கடந்த சில நாட்களாக வாலிபர், தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்தார். இருப்பினும் அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
ஆனால் வாலிபரோ, இனிமேல் பேசவும் மாட்டேன், உன்னை திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் மாணவி, தனது தோழிகள் மற்றும் உறவினர்களிடம் கூறி புலம்பியுள்ளார். அப்போது, இருவரில் (காதலன்-காதலி) யாரேனும் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்தால் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று யோசனை கூறியுள்ளனர்.
அதன்படி காதலனை தனது வீட்டிற்கு மாணவி அழைத்தார். அவரும் அங்கு சென்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாணவி, தனது காதலனுக்கு டீ போட்டுக்கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. அப்போதுதான் அந்த மாணவி, டீயில் எலி மருந்து (விஷம்) கலந்து கொடுத்ததாக கூறினார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதனிடையே காதலனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்மூலம் மாணவி தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை.
இதனால் யாரிடம் விசாரணை நடத்துவது என போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.