search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓ.பி.எஸ். கருத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் அதிருப்தி
    X

    ஓ.பி.எஸ். கருத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் அதிருப்தி

    • ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு கட்சியின் அனைத்து தரப்பிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
    • இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்குள் எழுந்துள்ள அதிகார போட்டியில் கட்சியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    பெருவாரியான நிர்வாகிகளும், தொண்டர்களும் தன்பக்கம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறது. கோர்ட்டு தீர்ப்புகளும் அவருக்கு சாதகமாக அமைந்ததால் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார்.

    அடுத்த கட்டமாக பொதுச்செயலாளர் தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரையும் தன்பக்கம் இழுத்து கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். தங்கள் பலத்தை நிரூபிக்க மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்தார்.

    இந்த போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. எல்லா மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    அதேபோல் சென்னை வடபழனி உள்பட சில இடங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடந்தன. இந்த கூட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டார்கள்.

    இதன் மூலம் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்தி ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளது.

    ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஓ.பி.எஸ். வரவேற்றுள்ளார்.

    தமிழக அரசு தனது கடமையை செய்கிறது. எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இவரின் இந்த கருத்துக்கு கட்சியின் அனைத்து தரப்பிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்கள்.

    எதிரி கட்சியான தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசலாமா? என்று ஓ.பி.எஸ். அணியினரே பேசிக் கொள்கிறார்கள்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயன்று வருகிறார்கள்.

    Next Story
    ×