search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவையில் 16-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம்
    X

    செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவையில் 16-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம்

    • மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றைய தினம் 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்துள்ளார்கள்.
    • சில வாரங்களுக்கு முன்புதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எச்சரித்து இருந்தார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுமைக்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணிச்சேர்க்கைக்கான நாளாக ஜூன் 23-ம் நாள் குறிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும்-கட்சிகளின் உறுதியைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கிறது.

    அதன் அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பல்வேறு பழி வாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புலனாய்வு விசாரணை அமைப்புகளை குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் மீது பயன்படுத்தாமல், தன்னுடைய அரசியல் எதிரிகள் மீது பா.ஜ.க. பயன்படுத்தி வருவதை ஊடகங்கள் புள்ளி விபரங்களுடன் பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது.

    ஆனாலும் பா.ஜ.க. தலைமை திருந்தவில்லை. வெளிப்படையாக-ஆணவமான முறையில் விசாரணை அமைப்புகளை அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள்.

    எல்லா மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம், தமிழ்நாட்டுக்கும் வந்து விட்டது. தமிழ்நாடு என்பது பா.ஜ.க.வை பின்னங்கால் பிடறியில் அடிபட விரட்டும் மாநிலம். இங்கு அவர்களால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, தனியாக நின்று டெபாசிட்கூட வாங்க முடியாது என்பது தெரியும். அதனால் தான் நேர்வழி இல்லாமல் நேர்மையற்ற வழிகளில் பா.ஜ.க. தனது கீழான செயல்களைச் செய்கிறது.

    மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றைய தினம் 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்துள்ளார்கள். நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார்கள். விசாரணைக்கு அமைதியாக ஒத்துழைப்புத் தந்தவரையே இந்தளவுக்கு வேண்டுமென்றே தொல்லையையும், நெருக்கடியையும் கொடுத்திருப்பது பழி வாங்குவதே தவிர, விசாரணை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை-அதுவும் அமைச்சரைச் சித்ரவதை செய்வதன் மூலமாக அச்சுறுத்துவது அரசியலே தவிர, விசாரணை அல்ல.

    மேலும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய பாதுகாப்புப் படைப் போலீசாரை அழைத்து வருவது தான் மாநில ஆட்சியின் மாண்பைக் காக்கும் முறையா? இதன் மூலமாக எங்கும், எப்போதும் நுழைந்து எதையும் செய்வோம் என்ற ஆணவப் போக்கே தெரிகிறது. எச்சரிக்கை விடுக்கிறார்களா? மிரட்டுகிறார்களா? இவை எதற்கும் பயப்படுகிறவர்கள் அல்ல நாங்கள்.

    மூன்று நாட்களுக்கு முன்னால்தான் ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னைக்கு வந்து சென்றார். அவரது பயண நோக்கமும், பிரசாரக் கூட்டமும் படுதோல்வி என்பதை அனைவரும் அறிவார்கள். இதனை மறைப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கையை பாய்ச்சி இருக்கிறார்கள். சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தவுடன் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டே தலைமறைவானவர் அமித்ஷா என்பதை நாட்டு மக்கள் மறக்கவில்லை.

    சில வாரங்களுக்கு முன்புதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எச்சரித்து இருந்தார்கள். இப்படி உச்சந்தலையில் உச்சநீதிமன்றம் கொட்டிய பிறகும் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை திருந்துவதாகத் தெரியவில்லை. திருத்தும் கடமையும், பொறுப்பும் நாட்டு மக்களுக்கே உண்டு.

    பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத-மக்கள் விரோத-பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் "மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்" நடைபெறும். பாஜகவுக்கு இறுதித் தோல்வியைத் தரும் வரையில் நமது மக்கள் பிரசாரம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

    Next Story
    ×