என் மலர்
இந்தியா

100 நாள் வேலை திட்ட ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்
- கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வேலை நாட்கள் எண்ணிக்கையை 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக தேக்கமடைந்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்
ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் உண்மையில் ரூ.4,000 கோடி குறைந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை அடைக்கப் பயன்படுத்தப்படும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறைக்கு மத்தியில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தத் திட்டத்தை மேம்படுத்துவது கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். திட்டத்தை நிலைநிறுத்தவும் விரிவுபடுத்தவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.