என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் குழந்தைகள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி
    X

    சபரிமலையில் குழந்தைகள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி

    • பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் எந்தவித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • கடந்த 2 வாரங்களாக கட்டுக்கடங்காமல் இருந்த பக்தர்கள் கூட்டம், நேற்று வெகுவாக குறைந்தது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்றுமுதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.

    இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. சாமி தரிசனத்துக்கு 10 மணி நேரத்திற்கும் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

    பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் எந்தவித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட் கூறிய அறிவுறுத்தல்களின் படி கூட்ட நெரிசலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சபரிமலையில் நிலவிய கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது.

    இந்தநிலையில் கேரளாவில் பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. சபரிமலை வனப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக பக்தர்கள் வருகை நேற்று குறைந்தது. கடந்த 2 வாரங்களாக கட்டுக்கடங்காமல் இருந்த பக்தர்கள் கூட்டம், நேற்று வெகுவாக குறைந்தது.

    நேற்று மெய்நிகர் வரிசை மற்றும் உடனடி முன்பதிவு மூலமாக 51,638 பக்தர்களும், புல்மேடு வழியாக வந்த 2,104 பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்ததால், அவர்கள் கூட்ட நெரிசலின்று தரிசனம் செய்தனர்.

    மேலும் சபரிமலைக்கு வரக்கூடிய குழந்தைகள் நெரிசலில் சிக்காமல் தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சிறப்பு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியில் சென்று குழந்தைகள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்தார்கள்.

    குழந்தைகளுடன் அவர்களது பெற்றோரும் தரிசனத்துக்கு உடன் அனுப்பப்பட்டனர். இந்த முறையை பக்தர்கள் யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×