என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு: பட்ஜெட் உரையில் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

- ஸ்மார்ட் சிட்டி அமைப்பு ரூ.620 கோடிக்கான திட்ட பணிகளை பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றி வருகிறது.
- புதிய ஒருங்கிணைந்த பஸ் வளாகம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் கைலாஷ் நாதன் உரையாற்றினார். இதற்காக அவர் காலை 9.25 மணிக்கு புதுவை சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்று சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்து சென்றார். அங்கு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தார். காலை 9.30மணிக்கு தமிழ்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்வுகள் தொடங்கியது. தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் தமிழில் உரையாற்றினார். அவரது உரையில் கூறியிருப்பதாவது:-
ஏ.எப்.டி. உதவி திட்டம், நபார்டு வங்கிகள் மூலம் தற்போது நடைபெறும் பணிகளுக்கு ரூ.659 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 467 கோடிக்கான புதிய பணிகளும் மேற்கொள்ளப்படும். பிரதமர் ஏக்தா மால் ஏற்படுத்த ரூ.104 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
புதுவை விமான நிலையத்தின் ஓடுதளத்தை 3 ஆயிரம் மீட்டராக விரிவுபடுத்தவும், ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி அமைப்பு ரூ.620 கோடிக்கான திட்ட பணிகளை பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றி வருகிறது. இதில் ரூ.175 கோடிக்கான பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரூ.445 கோடிக்கான பணிகள் நடைபெற உள்ளது.
புதிய ஒருங்கிணைந்த பஸ் வளாகம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதேபோல ரூ.99 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மக்கள் சேவைக்கு முன்னோடியாக அமையும்.
அரசு எடுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையால் 2020-21ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 418.96 கோடியிலிருந்து மாநில வருவாய், 2023-24ம் ஆண்டில் ரூ.11 ஆயிரத்து 311.92 கோடியாக உயர்ந்து 34.36 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
நமது பொருளாதாரத்தின் அளவு கடந்த 5 ஆண்டில் 46.44 சதவீதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு சராசரி வளர்ச்சி வீதமான 9.56 சதவீதத்தை எட்டியுள்ளது. 2020-21ம் ஆண்டில் 2.21 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 2024-25ம் ஆண்டில் 8.81 சதவீதத்தை எட்டியுள்ளது.
தற்போதைய நிலையில் தனி நபர் வருமானம் 5.33 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டின் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 354ல் இருந்து ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 680ஐ அடைந்துள்ளது. ஒவ்வொரு தனிநபரிடமும் கூடுதலாக ரூ.15 ஆயிரம் வருவாய் தரவுகள் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.