என் மலர்
புதுச்சேரி

மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,000- புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
- குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
- ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025- 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "புதுச்சேரியில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்" என அறிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேசன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தற்போது சிவப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாதாரண குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நிற குடும்ப அட்டை என்பது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1,20,000 வரை மட்டுமே பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.