search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    Minister Udhayanidhi Stalin
    X

    தமிழக அரசின் சாதனை திட்டங்களை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.
    • மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்சன் மகாலில் இன்று கடலூர் தி.மு.க. கவுன்சிலர் கே.ஜி.எஸ்.டி. சரத் திருமணம் நடந்தது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    மணமக்கள் அமைச்சர் உதயநிதிக்கு செங்கோல் வழங்கினர். தொடர்ந்து தி.மு.க. இளைஞரணிக்கு ரூ.2 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினர்.

    மணமக்களை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தம்பி சரத், நிவேதா திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சரத் இளைஞரணியை சேர்ந்தவர். அவரின் தந்தையும் இளைஞரணியில் பணியாற்றியவர். திருமண விழா கழக நிகழ்ச்சிபோல எழுச்சியுடன் நடக்கிறது.

    திராவிட இயக்கத்தின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். கழகத்தின் முதல் பொருளாளர் நீலமேகத்தின் கொள்ளு பேரன் சரத். அவர் மக்களோடு எளிமையாக பழகக்கூடியவர். அதனால்தான் 23 வயதிலேயே கடலூர் நகராட்சி மாமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

    இளைஞரணி மாநகர துணை அமைப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர, படிப்பதற்கு உரிமை இல்லை. இன்று ஆண்களுக்கு நிகராக சரிசமமாக பெண்கள் வந்துள்ளனர். பெண்கள் ஆண்களை விட அதிகமாக வெளிநாடு சென்று படிக்கின்றனர். இந்த மாற்றத்தை கொண்டுவந்தது தி.மு.க. பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கொண்டுவந்தவர் கலைஞர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.



    ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். 3 ஆண்டில் 520 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு பெண்களும் மாதம் சராசரியாக ரூ.ஆயிரம் வரை இத்திட்டத்தால் சேமிக்கின்றனர்.

    அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை தி.மு.க. அரசு வழங்குகிறது.

    இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் ரூ.1,000 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார். காலையில் மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை முதல்வர் கொண்டுவந்துள்ளார். 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

    கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டில் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை பெற்று பயனடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். நான் முதல்வன் திட்டத்தால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்து வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும், முதல் பயண செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற சிறப்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பணிக்கு செல்லும் பெண்களில் 42 சதவீதத்தினர் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.

    இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும், பெண்களும் தமிழக அரசின் சாதனைகளை பட்டி, தொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசின் தூதுவர்களாக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும். மணமக்கள் இருவரும், பெரியாரும், பகுத்தறிவும் போல, அண்ணாவும், மாநில சுயாட்சியும் போல, கலைஞரும், தி.மு.க.வும்போல, கழக தலைவரும், தமிழக மக்களும் போல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. க்கள் ரவிக்குமார், கவுதம சிகாமணி, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன், புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×