என் மலர்
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் - நாளை பதவியேற்பு
- சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இவர்கள் நாளை காலை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
சென்னை:
உச்ச நீதிமன்ற கொலிஜிய கூட்டம் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது.
இவர்களில் வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் நாளை பதவியேற்கவுள்ளனர். நாளை காலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில் பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி, விக்டோரியா கவுரி ஆகியோர் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.