search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி கவுரவ டாக்டர் பட்டமளிப்பு விழாவில் 40 பேருக்கு விருது: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- துணைவேந்தர் விளக்கம்
    X

    போலி 'கவுரவ டாக்டர்' பட்டமளிப்பு விழாவில் 40 பேருக்கு விருது: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- துணைவேந்தர் விளக்கம்

    • அண்ணா பல்கலைக்கழக வளாகம் பழமையும், பெருமையும் புனிதம் வாய்ந்ததாகும்.
    • நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளர் தேவா, ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், சினிமா டான்ஸ் மாஸ்டர் சாண்டிம் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் உள்பட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரனும் இந்த விருதை பெற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

    சினிமா, சமூகப்பணி, அரசியல் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு வராததால் நேரில் சென்று சந்தித்து டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி போலி பட்டம் மற்றும் விருதுகள் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை மோசடியான தில்லுமுல்லு செயலாகவே அண்ணா பல்கலைக்கழகம் கருதுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இன்று, 'விரிவாக விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    இதுபோன்ற தனியார் அமைப்பினர் ஓட்டல்கள் மற்றும் தனியார் இடங்களில் வைத்தே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அண்ணா பல்கலைக்கழத்தில் நடத்துவார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

    சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஜனவரி மாதமே வந்து அனுமதி கேட்டுள்ளனர்.

    வெளியாட்கள் நடத்தும் நிகழ்ச்சி எந்தமாதிரியான நிகழ்ச்சி என்பதை அலசி ஆராய்ந்த பிறகே அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதியை 'டீன்' கொடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் கடிதம் வாங்கிக்கொண்டு வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.

    இதனால் நிகழ்ச்சியை நடத்துவதற்கு டீன் அனுமதி அளித்துள்ளார். போலியான கவுரவ டாக்டர் பட்டங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நிகழ்ச்சி நடத்தி வழங்கி இருக்கும் சம்பவம் தொடர்பாக கவர்னரின் செயலாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது போன்ற விருதுகலை வாங்கும் பிரபலங்களும் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும்.

    இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழக வளாகம் பழமையும், பெருமையும் புனிதம் வாய்ந்ததாகும். ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் வழங்கியதாக கூறப்படும் கடிதம் போலியானதாக இருக்கும் என்று கருதுகிறோம். அவர் எழுதி இருக்க முடியாது.

    நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தினத்தில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

    இந்த செயலுக்கு வருந்துகிறோம். கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கூறும்போது, பட்டமளிப்பு விழாவை நடத்திய தனியார் நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அழைப்பிதழின் பெயரிலேயே விழாவில் பங்கேற்றேன் என்றார்.

    Next Story
    ×