என் மலர்
தமிழ்நாடு
தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தனம் மைதானத்தில் ஆய்வு
- நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
- மகளிர் உரிமை மாநாட்டில் இந்திய கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி உள்பட இந்திய கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதற்காக நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேசிய அளவில் தலைவர்கள் வருவதால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் அரங்கங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், இருக்கைகள், மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.