search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் ரவுடி கொலையில் 5 பேர் சிக்கினர்- உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
    X

    நெல்லையில் ரவுடி கொலையில் 5 பேர் சிக்கினர்- உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

    • கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தீபக்ராஜா உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக்ராஜா (வயது 28).

    பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

    இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது வருங்கால மனைவியுடன் பாளை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தபோது 6 பேர் கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து போக்சோ வழக்கில் பக்கப்பட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர் விடுதலையான நிலையில் அவர் வாகைகுளம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அவரை முன்விரோதத்தால் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தனர்.

    அதில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீபக்ராஜா உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்றும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்து 2-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.

    இதனால் தீபக்ராஜா உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தற்போது 5 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளதால், அவரது உறவினர்களிடம் தீபக்ராஜா உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×