search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிலுவையில் உள்ள மின்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்- அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
    X

    நிலுவையில் உள்ள மின்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்- அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

    • வடசென்னை அனல்மின் நிலையம்-3 அதன் முழுத்திறனை அடைந்திருந்தால், இதுவரை 600 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கும்.
    • மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தான் சுமைகள் சுமத்தப்படும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை அனல் மின்நிலையம் 6 மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    வடசென்னை அனல்மின் நிலையம்-3 அதன் முழுத்திறனை அடைந்திருந்தால், இதுவரை 600 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கும். ஆனால், இதுவரை வெறும் 68 கோடி யூனிட், அதாவது 11 சதவீதம் அளவுக்குத் தான் மின்சாரம் உற்பத்தி செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.13 செலவாகிறது.

    தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.3 முதல் 4 மட்டுமே செலவாகிறது. ஆனால், வடசென்னை அனல்மின் நிலையத்தின் திட்ட மதிப்பீடு இரு மடங்கிற்கும் மேலாகி விட்டதால், அதில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.6க்கும் கூடுதலாக செலவாகிறது.

    இவ்வாறாக மின்னுற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தை திட்டமிட்டு தாமதப்படுத்துதல், அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குதல் ஆகியவற்றால் தான் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியை நெருங்கும் நிலையிலும் தமிழக அரசும், மின்சார வாரியமும் மாறாமல், அதே அலட்சியத்துடனும், ஊழலுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் செயல்பட்டால் மின்சார வாரியம் இப்போதைக்கு லாபம் ஈட்ட முடியாது. மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தான் சுமைகள் சுமத்தப்படும்.

    எனவே, தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேற்ற வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×