search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பொதுச்செயலாளரான பின் முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை
    X

    பொதுச்செயலாளரான பின் முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை

    • மியூசிக் அகாடமி சிக்னலில் இருந்து லாயிட்ஸ் ரோடு சிக்னல் வரை கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • வழி நெடுக தோரணங்கள், கட்சி கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டு இருந்தன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எழுந்த கோரிக்கையால் ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இடையே மோதல் வெடித்தது.

    பெருவாரியான நிர்வாகிகளும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவானார்கள். இதையடுத்து கடந்த ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதை ஏற்காததால் அன்றைய தினமே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்தார். இதனால் பெரும் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் தலைமை கழகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

    அதே நேரம் பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்தனர்.

    72 நாட்களுக்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகம் செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் களைகட்டியது. தலைமைக் கழகம் அமைந்து உள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இன்று காலையில் இருந்தே தொண்டர்கள் திரள தொடங்கினார்கள்.

    மியூசிக் அகாடமி சிக்னலில் இருந்து லாயிட்ஸ் ரோடு சிக்னல் வரை கூட்டம் நிரம்பி வழிந்தது. வழி நெடுக தோரணங்கள், கட்சி கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டு இருந்தன.

    எடப்பாடி பழனிசாமி கார் வந்ததும் தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள்.

    கழகத்தை 'கட்டிக்காத்த காவல் தெய்வம்', 'கழக பொதுச்செயலாளர்' என்று முழங்கினார்கள். மக்கள் கூட்டத்தில் மிதந்தபடியே அவரது கார் வந்தது.

    ரோட்டின் இருபுறமும், தாரை தப்பட்டைகள் முழங்கியும், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏராளமானவர்கள் வரிசையாக நின்று திருஷ்டி பூசணிக்காய் சுற்றி உடைத்தனர்.

    கார் தலைமை கழகத்தை அடைந்ததும் தலைமை கழக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இனிப்புகள் வழங்கினார்.

    அதன்பிறகு தலைமை கழகத்துக்குள் சென்று தனது அறையில் அமர்ந்து இருந்தார்.

    Next Story
    ×