என் மலர்
தமிழ்நாடு

முல்லையாற்றில் குழாய்கள் பதித்த விவகாரம்- பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மறியல்

- குழாய் இணைப்பை துண்டிப்பதை கண்டித்தும் தாங்களே குழாயை இணைக்க போவதாகவும் தெரிவித்திருந்தனர்
- குழாய் உடைப்பை பார்வையிட்டபோது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள முல்லைபெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து தனியார் நிறுவனங்கள்விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ பால்பாண்டியன் தலைைமயில் அதிகாரிகள் உத்தமபாளையம், சின்னமனூர், ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லையாற்றில் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்த 50 இடங்களை கண்டறிந்து அதன் இணைப்பை துண்டித்தனர். ஆனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுத்து விட்டதாகவும், இதனால் தென்னை, வாழை, திராட்சை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி தமிழக அரசுக்கும், அமைச்சர் இ.பெரியசாமிக்கும் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் குழாய் இணைப்பை துண்டிப்பதை கண்டித்தும் தாங்களே குழாயை இணைக்க போவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் குழாய் துண்டிக்கப்பட்ட பகுதிகளையும், பயிர்சேதமான பகுதிகளையும் பார்வையிட வந்தார். அப்போது போடி டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். சின்னமனூர் நுழைவு பகுதியில் குழாய் உடைப்பை பார்வையிட்டபோது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ பால்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.