search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 3 இல்லை 30 மொழி கூட கற்றுத்தாருங்கள்., தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள் - மு.க.ஸ்டாலின்
    X

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 3 இல்லை 30 மொழி கூட கற்றுத்தாருங்கள்., தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள் - மு.க.ஸ்டாலின்

    • ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகி விட்டன.
    • தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம்.

    சென்னை:

    முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    என் பிறந்தநாளில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், பல்வேறு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அன்பான வாழ்த்துகளைப் பதிவிட்டிருந்தனர். அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

    பா.ஜ.க. நிர்வாகியான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு 'மும்மொழி'யில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னுடைய பிறந்த நாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், சகோதரி மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய 'பண்பையும்' காட்டியிருக்கிறார். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் 'இந்தி' இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு.

    தமிழ்-ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். எனக்கு தெலுங்கு தெரியாது. நான் படித்ததும் இல்லை. தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த சகோதரி தமிழிசை தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்து கொள்ளவில்லை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார்.

    இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கானப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள தமிழிசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சகோதரி தமிழிசை தெலுங்கு எழுத்துகளில் வாழ்த்துச் செய்தியை எழுதக்கூட அவசியமில்லை என்கிற அளவிற்கு அவருடைய பதிவிலேயே இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிய முடிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னேற்றமும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எழுத்தாகவும் குரலாகவும் மாற்றக்கூடிய வாய்ப்பும் எளிய முறையில் எல்லாரும் பயன்படுத்தும் வகையிலான மென்பொருள்கள் கைபேசிகளிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

    கூகுல் மொழிபெயர்ப்பு போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன. ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகி விட்டன. ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பா.ஜ.க.வும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பைக் கட்டாயமாக்குகிறார்கள்.

    ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகளல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாகச் சொல்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் புரியவில்லை? புரியாமல் இல்லை. புரியாதது போல பாசாங்கு செய்கிறார்கள்.

    உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும் தெலுங்கு, கன்னட மொழிகளும் நம்முடைய கல்விக் கொள்கையின்படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மொழிகள் எதுவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியதல்ல.

    ஆனால், பா.ஜ.க.வின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பது தான். அதனால்தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.

    தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். பரம்பரை பரம்பரையாகவே கல்வி வியாபாரம் செய்யும் பா.ஜ.க.குடும்பத்தினர் பற்றிய பட்டியலை வெளியிட்டு பதிலுக்குப் பதில் பேசுவது நமது நோக்கமல்ல.

    உரிய அனுமதியுடன் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும், எந்தவொரு கட்சியையும் சாராதவர்களும் பள்ளிக்கூடங்களை நடத்த முடியும். தி.மு.க.வினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துகிறவர்களும், ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துகிறவர்களும் உரிய அனுமதியுடன்தான் நடத்துகிறார்கள்.

    தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை தானே தவிர, தி.மு.க.வினரோ வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.

    தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. இந்தி மொழி என்பது கட்டாயமும் இல்லை.

    தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டதுபோல, வட இந்தியாவில் தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா?

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 3 இல்லை 30 மொழி கூட கற்றுத் தாருங்கள். தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள். நாங்கள் கேட்பதெல்லாம் இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்பதுதான். வட இந்தியர்கள் தமிழோ அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழியோ கற்க நாங்கள் வலியுறுத்தியதே இல்லை.

    தமிழ்நாட்டில் தற்போது ஓடும் ரெயில்களுக்கு கூட இந்தி-சமஸ்கிருதப் பெயர்களை வைப்பவர்கள் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×