என் மலர்
தமிழ்நாடு

சென்னையில் பரபரப்பு சம்பவம்- தி.மு.க. முன்னாள் எம்.பி. உதவியாளர் கடத்தி படுகொலை
- தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
- செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
சென்னை:
சென்னையில் தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளர் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் 2-வது லேன் பகுதியில் வசித்து வந்தவர் குமார். 72 வயதான இவர் சென்னை மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப். உடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தையும் இவர் நடத்தி வந்தார். இந்த சங்கத்தில் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர் தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரில் இவரது மகள் வீடு உள்ளது. அங்கு சென்று இருந்த குமார் கடந்த 16-ந்தேதி மகள் வீட்டில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டு உள்ளார்.
பின்னர் தாம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அதன் பிறகு காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இது பற்றி தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குமாருக்கும் சேலையூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குமார் கடத்தி படுகொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரவியும் அவரது கூட்டாளிகள் 7 பேரும் குமாரை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவி உள்பட 7 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
மும்பையில் வசித்து வரும் குமாரின் உறவினர் ஒருவருக்கு சொந்தமாக கானாத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தண்டியில் ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குமார் தான் பாதுகாத்து வந்துள்ளார். இதன் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அந்த இடத்தை ரவி தனது கள்ளக்காதலியான தனலட்சுமி என்ற பெயரில் போலியாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குமாரின் உறவுக்கார பெண்ணான மகாலட்சுமி பெயரில் ஒரிஜினல் நில பத்திரம் உள்ளது.
இந்த இடத்தில் ரவி மகாலட்சுமி என்ற பெயரில் போலியாக வேறு ஒரு பெண்ணை தயார் செய்து தனது கள்ளக்காதலியான தனலட்சுமி பெயரில் இடத்தை பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக குமாரை கடத்திச் சென்று நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு காரில் வைத்தே தாக்கியுள்ளனர்.
இதற்கு குமார் உடன்படாததால் அவரை காருக்குள் வைத்து சித்ரவதை செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் கொலையுண்ட குமாரின் உடலுடன் செஞ்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் செஞ்சி அருகே காட்டுப்பகுதியில் பெரிய குழியை தோண்டி குமாரின் உடலை போட்டு புதைத்துள்ளனர்.
பின்னர் எதுவும் தெரியாது போல ரவி வெளியில் நடமாடியுள்ளார். ஆனால் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி ரவியையும் அவரது கூட்டாளிகளையும் பிடித்து உள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற குமார் தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மத்தியில் நன்கு அறிமுகமானவராவார். இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தி.மு.க.வினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவி பட்டதாரி வாலிபர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். நிலம் தொடர்பான பிரச்சனை பெரிதாக உருவெடுத்ததால் பயந்து போய் காரில் கடத்திச் சென்று குமாரிடம் இருந்து ஒரிஜினல் பத்திரங்களை வாங்கிவிடலாம் என்று அவர் நினைத்திருக்கிறார்.
ஆனால் நிலைமை விபரீதம் ஆகி கொலையில் முடிந்து விட்டதால் ரவியும் அவரது கூட்டாளிகளும் சிறை செல்ல நேரிட்டுள்ளது.