என் மலர்
தமிழ்நாடு

வீடு இடிந்து கிடப்பதை காணலாம்.
கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து- ஜே.சி.பி. ஆபரேட்டர் படுகாயம்

- குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரிம்பட்டி கிராமத்திக்கு மாதேசன் வந்துள்ளார்.
- வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாதேசன் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டு இருந்தார்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேசன் (52). இவருக்கு திருமணம் ஆகி மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதேசன் வடமாநிலத்தில் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரிம்பட்டி கிராமத்திக்கு மாதேசன் வந்துள்ளார். இன்று காலை சமையல் செய்வதற்காக சிலிண்டரின் அருகில் சென்றபோது திடீரென வெடித்து சிதறி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மாதேசன் தீக்காயங்களுடன் தூக்கி எறியப்பட்டுள்ளார். வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் சில பகுதிகளும் சேதம் அடைந்தன.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வெளியே ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது மாதேசன் வீடு இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாதேசன் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டு இருந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், துணிமணிகள், மளிகை பொருட்கள், கட்டில், பீரோ என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறை நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.