என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல: சிவராஜ் சிங் சவுகானுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலடி
    X

    'அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல': சிவராஜ் சிங் சவுகானுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலடி

    • எனது கூட்டத்திற்கே தமிழக அமைச்சர்கள் வரவில்லை என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் குற்றச்சாட்டு
    • இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது.

    மக்களவையில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நானே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். ஒரு முறை வேளாண் துறை பணிக்காகவும், ஒரு முறை ஊரக வளர்ச்சிக்காகவும் வந்தேன். இப்போது நான் எந்த குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை, ஆனால், இரண்டு முறையும் ஊரக வளர்ச்சி அமைச்சரோ அல்லது வேளாண் அமைச்சரோ எனது கூட்டத்திற்கு வரவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்கு வந்த போது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சமீபத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.அவருக்கு சில தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது

    MGNREGS-கீழ் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் ஒன்றிய அரசினால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 2,839கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கும்,எங்கள் மாநில நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்

    கனிமொழி அவர்களும் நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன? இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

    அவர் தமிழ்நாடு வந்தபோது,குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது. துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியதையும் கூட அறிவார்.

    இது தவிர, காணொலி வாயிலான ஆய்வுக்கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்துகொண்டுள்ளேன்.

    இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் போல பேசியுள்ளது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல

    இந்த கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில் இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால் நாம் பாராட்டியிருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×