என் மலர்
தமிழ்நாடு

பங்குனி உத்திரம் நெருங்குவதையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் களை கட்டிய ஆடுகள் விற்பனை
- பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.
- கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டையபுரம் சந்தைக்கு அடுத்து பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் விற்பனை நடந்து வருகிறது.
இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படும். அதனை வாங்க அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள்.
இதனால் இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் கூடுதலாக விற்பனை நடக்கும்.
இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். தற்போது பங்குனி உத்திரம் வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு, கிடாய் உள்ளிட்டவற்றை பலியிடுவார்கள். இந்த திருவிழா நெருங்கி வருவதால், இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.
இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தரத்துக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலானோர் கிடாய்களை தான் கோவில்களில் நேர்த்திக்கடனாக பலியிடுவார்கள் என்பதால் இன்று கிடாய்களுக்கு மவுசு ஏற்பட்டது.
அதே நேரம் இளம் ஆடுகளின் கறி சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்பதால் குட்டி ஆடுகளையும் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.