என் மலர்
தமிழ்நாடு

தொலைக்காட்சி விவாதங்களில் த.வெ.க. அங்கீகரிக்காதவர்கள் கருத்தை மக்கள் நம்ப வேண்டாம் - புஸ்சி ஆனந்த்

- மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
- திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி தலைவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தி தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.
தமிழக வெற்றிக்கழகம் பெயரை கழகத் தலைவர் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்க ளுக்கு பாராட்டு சான்று மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா என தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக்க ழகத்தின் ஆதரவாளர்களாக சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக்கழகத் தலைவரால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலைய செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே அதிகாரப் பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.