search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் தமிழக எல்லையோர சாராயகடைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி
    X

    புதுச்சேரியில் தமிழக எல்லையோர சாராயகடைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி

    • கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.
    • கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 85 சாராயக்கடைகளும், 66 கள்ளுக்கடைகளும் உள்ளன.

    இதே போல், காரைக்காலில் 25 சாராயக்கடைகளும், 26 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.

    அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயம் கள்ளுக்கடைகளின் 2024-25-ம் ஆண்டு குத்தகை ஆண்டுக்கான சில்லரை விற்பனை உரிமத்துக்கான ஏலம் இணையதளத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் கிஸ்தி தொகை உயர்வு காரணமாக, சாராயக்கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை.

    அதன் பிறகு சாராய கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. கிஸ்தி தொகை குறைப்புக்கு பின் சாராயக்கடையின் ஏலம் சூடுபிடித்துள்ளது. நேற்று முன்தினம் வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 38 சாராயக்கடைகளும், 35 கள்ளுக்கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் ஏலம்போகாத 72 சாராயக்கடைகள் மற்றும் 57 கள்ளுக்கடைகளுக்கு நேற்று மறு ஏலம் நடத்தப்பட்டது. இதில் புதுவை 29, காரைக்கால் 1 என ஒரே நாளில் 30 சாராயக்கடைகள் ஏலம் போயின. புதுவையில் தமிழக எல்லையோரத்தில் உள்ள சேதராப்பட்டு கடையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    இதற்கு அடுத்தபடியாக திருக்கனூர் கடை ரூ.14,52,783-க்கும், கன்னியகோவில் கடை ரூ.13,03,877-க்கும், லிங்கா ரெட்டிப்பாளையம் கடை ரூ.9.35 லட்சத்துக்கும், குருவிநத்தம் கடை ரூ.6,92,435-க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதில் குறைந்த பட்சமாக ஆரியபாளையம் கடை ரூ.1.54 லட்சத்துக்கு ஏலம் போனது.

    இதேபோல், புதுவை 1, காரைக்கால் 1 என 2 கள்ளுக்கடைகள் ஏலம் போயின. அதிகபட்சமாக மணமேடு கடை ரூ.51,408-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 110 சாராயக்கடைகளில் இதுவரை 68 கடைகளும். 92 கள்ளுக்கடைகளில் 37 கடைகளும் ஏலம் போயுள்ளன. இன்னும் ஏலம் போகாத 42 சாராயக்கடைகள், 55 கள்ளுக்கடைகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) கலால் துறை மூலம் மறு ஏலம் நடத்தப்படவுள்ளது.

    Next Story
    ×