என் மலர்
நீங்கள் தேடியது "Big Temple"
- தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
- கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும்.
தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
- 500 கிலோ காய்கறி, இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். லிங்கம் 12 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையார் எனப்படும் பீடம் 13 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத்திருமேனியாக மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.
பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று பக்தர்களால் 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
- ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது.
தஞ்சை பெரிய கோவில் விமான கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம், மழைநீரால் பாசி படிந்திருப்பதை அகற்றும் வகையில் ரசாயன கலவையால் வர்ணம் பூசும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு கோவில் குடமுழுக்கு நடைபெற்றதையொட்டி அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன. மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் கோபுரம், விமான கோபுரம், பெரியநாயகி அம்மன், முருகர், நடராஜர், விநாயகர் சன்னதி கோபுரங்களும் ரசாயன கலவை மூலம் வர்ணம் பூசப்பட்டது.
அதன்படி விமான கோபுரத்தில் படிந்திருந்த பறவைகளின் எச்சங்கள், மழைநீரால் படிந்திருந்த பாசிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ததோடு, பழமை மாறாமல் இருப்பதற்காக ரசாயன கலவை பூசும் பணியும் நடைபெற்றது. சிதிலமடைந்து இருந்த சுதை சிற்பங்களும் சீரமைக்கப்பட்டன. இந்த பணிகள் 2018-19-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.
விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விமான கோபுரலத்தில் உள்ள கலசமும் தங்க முலாம் பூசப்பட்டது. கொடிமரம் புதிதாக நடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இதனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தஞ்சை பெரிய கோவில் பழமை மாறாமல் ரசாயன கலவை கொண்டு வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வருகிற நிதி ஆண்டு முதல் (ஏப்ரல் மாதத்திற்கு பிறகு) வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தொல்லியல் துறையினர் நேற்று 216 அடி விமான கோபுரத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். தொல்லியல் துறையை சேர்ந்த 4 பேர் நேற்று கயிறு உதவியுடன் விமான கோபுரத்தின் மீது ஏறி ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். 1 மணி நேர ஆய்வுக்குப்பின்னர் அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.
இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் ரசயான கலவையுடன் வர்ணம் பூசும் பணி வருகிற ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைபெற உள்ளது. மழைநீரால் பாசி படியாமல் இருப்பதற்காகவும், பறவைகளின் எச்சத்தை அகற்றி அதன் பொலிவு மாறாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் கோபுரத்தில் வேறு ஏதும் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதா? சிற்பங்கள் எதுவும் சிதிலமடைந்து உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதனை எவ்வாறு சரி செய்வது? ரசாயன கலவை பூசுவது எப்படி? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான கோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவடைந்ததும் இதர கோபுரத்திலும் பணிகள் மேற்கொள்ளப்படும்"என்றனர்.
- நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு நேற்றிரவு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியபொடி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இன்று காலை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் கோவிலில் வலம் வந்து நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார். முன்னதாக சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையடுத்து மீண்டும் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோவிலுக்கு வந்தார். அப்போது மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 108 பசுக்களுக்கு கோ-பூஜையும் நடத்தப்பட்டது
- மகா நந்திக்கு 16 வகையான தீபாராதனைகள், பூஜைகள் காட்டப்பட்டது.
தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது.
இந்த நந்தி பெருமானுக்கு ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.
காலையில் நந்தி பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதில் கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்களாலும், ஆரஞ்சுப் பழம், வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும் , பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு சோடச உபசாரம் என்கின்ற 16 வகையான தீபாராதனைகள், பூஜைகள் காட்டப்பட்டது.
இதையடுத்து நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடந்தது. மாட்டின் உரிமையாளர்களுக்கும் பட்டு துண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நந்தி பெருமான் அலங்கார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் மகரசங்கராந்தி விழா எளிமையான முறையில் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்தால் பிரமாண்ட முறையில் நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு 108 பசுக்களுக்கு கோ-பூஜை நடத்தப்பட்டது.
- சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் 17-ந்தேதி நடக்கிறது.
- மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் செந்தில், சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 17-ந்தேதியும், அதைத்தொடர்ந்து மே 1-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
- தேரோட்டம் 1-ந்தேதி நடைபெறவுள்ளது.
- தற்போதுள்ள தேர் 2015-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் 4 ராஜவீதிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலையில் பள்ளங்கள் உள்ளதை சரி செய்யவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தேர் திருவிழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேரோட்டத்துக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அனைத்து அரசுத்துறை அதிகாரிகளை கொண்டு ஏற்கெனவே ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்படி அந்ததந்த துறைகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வரும், தேர் வடம் பிடிக்கப்பட்டு பிற்பகல் தேர் நிலைக்கு மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை வந்தடையும். இத்தேர் திருவிழா நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் நடைபெறும்.
தற்போதுள்ள தேர் 2015-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தேரோட்டம் கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் நடைபெறவில்லை. தேரின் சாதாரண உயரம் 19 அடி, தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக இருக்கும். இந்த தேரின் அகலம் 18 அடியாகும். சக்கரத்தின் உயரம் 6 அடி, தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையில் இருக்கும்.
ஆய்வின் போது தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, தாசில்தார் சக்திவேல், உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா, அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- முகூர்த்தக்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
- தேரோட்டம் 1-ந் தேதி நடக்கிறது.
தஞ்சையில் பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டு கால அதிசயமாக பார்க்கப்படும் இக்கோவில் உலக அளவில் பிரசித்திப்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் பெருவுடையார் அருள்பாலித்து வருகிறார். பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலையில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அப்போது தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வருகிறது. தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதி தேர்நிலையில் உள்ள தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
முன்னதாக முகூர்த்தக்காலுக்கு மஞ்சள், பால், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர்கள் செந்தில்குமரன், ரெங்கராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும்.
- அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா, சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது.
தேர் தஞ்சை மேலவீதியில் உள்ள தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து புறப்படுகிறது. தேரை 1-ந்தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். இந்த தேரின் சாதாரண உயரம் 19 அடி ஆகும். அகலம் 18 அடியாகும். தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும். அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும்.
இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன. 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் கொண்டு கட்டப்பட்டு வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேரின் முன்பகுதியில் குதிரை பொம்மைகள் வைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.
தேர் சுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தேரில் உள்ள மணிகளுக்கு வர்ணம் பூசும் பணியும் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. நாளைக்குள்(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பணிகளும் முடிந்து தேரோட்டத்துக்கு தேர் தயாராகி விடும்.
தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். பக்தர்களின் தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் உடைத்து வழிபட ஏதுவாகவும் 14 இடங்களில் தேரை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
தேரோட்டம் நடைபெறுவதற்காக சாலை சீர் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.
- காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் கட்டிட வடிவமைப்பில் தலைச்சிறந்து விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.
அதேபோல வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோற்றத்தில் நந்தியெம்பெருமான் அருள்பாலிக்கிறார். நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷம் ேதாறும் அபிஷேகத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். வராகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.
உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் விநாயகர், ராஜராஜசோழன், பெருவுடையார்-பெரியநாயகி, அம்பாள், முருகன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.
- பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரைத் பெருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கோவிலில் காலை, மாலை என இரு வேளைகளில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்களுடன் தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு, கோவில் வெளியே வந்து மேலவீதியில் உள்ள தேர்மண்டபம் வந்தடைந்தனர்.
அங்கு 3 அடுக்குகள் கொண்ட 19 அடி உயரம், 18 அடி அகலம், 40 டன் எடை கொண்ட தேரில் தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளினர். காலை 6.50 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'தியாகேசா, ஆரூரா' என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை முன்னே நடந்து செல்ல விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே சென்றது. பின்தொடர்ந்து தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் சென்றது. நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர் சப்பரங்கள் தேரை பின் தொடர்ந்தன. கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.
தேர் செல்லும் வழியில் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடியே சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர். மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 ராஜவீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். மதியம் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால் தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது.
இன்று நடந்த தேரோட்டத்தை தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
தேரோட்டத்தையொட்டி 1000-க்கு மேற்ப்பட்ட போலீசார் ஈடுப்பட்டிருந்தனர்.
- தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
- தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடை கொண்டது.
தஞ்சை பெரியகோவில் தேர் 19 அடி உயரத்துடன் 3 அடுக்குகள் கொண்டது. மேல்மட்டத்தில் தேவாசனம், சிம்மாசனம் அமைக்கப்பட்டது. முதல் அடுக்கில் 1½ அடியில் 40 பொம்மைகளும், 2-ம் அடுக்கில் 2½ அடியில் 56 பொம்மைகளும், 3-ம் அடுக்கில் 1½ அடியில் 56 பொம்மைகள் உள்பட மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
முதல் நிலையில் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், வீரபத்ரன், பிச்சாடனமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி போன்ற பொம்மைகள் 4 திசைகளிலும், குதிரை மற்றும் யாழி உருவங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பொம்மைகள் சிவன் கோவிலுக்கு ஏற்ற ஐதீக அடிப்படையிலும், தஞ்சையில் புகழ்பெற்ற சிற்பங்களையும் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.
தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் 2 அச்சும் 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை சாதாரணமாக 40 டன் ஆகும். தேர் அலங்காரத்திற்கு பின் 43 டன் எடையாகும்.
தஞ்சை பெரியகோவில் தேர் 14 இடங்களில் நின்று செல்லும்
தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த பெரியகோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தொடங்குகிறது. தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய சுவாமிகள் அலங்கார சப்பரத்திலும், தியாகராஜருடன் அம்மன் திருத்தேரிலும், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார சப்பரத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக 4 ராஜவீதிகளான மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதியில் வலம் வருகிறது.
4 ராஜவீதிகளிலும் பக்தர்களின் வசதிக்காகவும், சாமி தரிசனத்திற்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் 14 இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது. மேலராஜவீதியில் சந்துமாரியம்மன் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சநேயர் கோவில் முன்பும், வடக்கு ராஜவீதியில் பிள்ளையார் கோவில் (ராணி-வாய்க்கால் சந்து எதிரில்), ரத்தினபுரீஸ்வரர் கோவில் (காந்திசிலை அருகில்), குருகுலசஞ்சீவி கோவில் ஆகிய இடங்களில் நிறுத்தப்படுகிறது. கீழராஜவீதியில் கொடிமரத்து மூலை (மாரியம்மன் கோவில் அருகில்), விட்டோபா கோவில் அருகில் (அரண்மனை எதிரில்), மணிகர்ணிகேஸ்வரர் கோவில் (தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை அருகில்), வரதராஜ பெருமாள் கோவில் (நிக்கல்சன் கூட்டுறவு வங்கி எதிரில்), தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கமலரத்ன விநாயகர் கோவில் (கனரா வங்கி அருகில்), காசி விஸ்வநாதர் கோவில் (இந்தியன் வங்கி அருகில்), காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது.