என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinese woman"

    • குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜ் பால் மிட்டாய் போலவே இருக்கும்.
    • பெண் ஒருவர் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டுள்ளார்.

    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு பகுதியில் வு என்ற பெண்மணி வசித்து வருகிறார். அவர் பால் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டதாக தெரிவித்தார்.

    ஷுவாங் பாவோ என அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜிங் பால் மிட்டாய்களைப் போலவே இருக்கும்.

    ஒருநாள் அவரது உறவினர் பட்டாசைக் கொண்டு வந்து வீட்டில் வைத்துள்ளார். அதை வூ மிட்டாய் என நினைத்துச் சாப்பிட்டுள்ளார்.

    ஸ்மாஷ் பட்டாசு என பொருள்படும் ஷுவாங் பாவோ நெருப்பை பயன்படுத்தாமல் பற்றவைக்க முடியும். தரையில் விழும்போது அல்லது அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அது உரத்த சத்தத்துடன் வெடிக்கும். இது சீன நாட்டில் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பெரிய விழாக்களின்போது பயன்படுத்தப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், பால் சாக்லேட் என நினைத்து வூ வெடியை பல்லைப் பயன்படுத்தி கடித்தபோது வெடித்தது. இதனால் அந்தப் பெண்ணின் வாயில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் வீட்டின் ஹாலில் விளக்கை அணைத்துவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாக்கெட் ஒன்று இருந்தது. அது பார்ப்பதற்கு சிறுவயதில் நான் ரசித்த டாரோ பால் மிட்டாய்போல இருந்தது. எனவே அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்தபோது அது திடீரென வெடித்தது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
    • விற்பனைக்கு வந்துள்ள அந்த தங்கப்பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.84 லட்சம்.

    சீனப் பெண் ஒருவர் தங்கப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஷென்சென் எனப்படும் அந்த இளம்பெண் 2 தங்க நகைக் கடைகளை நடத்தி வருகிறார். அவர் தனது நண்பரின் பட்டறையில் 1 கிலோ தங்கத்தில், தங்கப் பாத்திரத்தை செய்யச் சொல்லி வாங்கினார்.

    அதில் தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

    வீடியோவில் "இந்த தங்கப்பாத்திரம் விற்பனைக்குத்தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால் வாடிக்கையாளர்களிடம் அனுமதி கேட்டுத்தான் அதில் சமைத்து சாப்பிட்டு காட்சிப்படுத்தி உள்ளேன். தங்கம் அதன் சிறந்த கடத்து திறனால், உணவை சீக்கிரம் சமைக்க உதவுகிறது. ஆனால் உணவின் சுவையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று கூறி உள்ளார்.

    விற்பனைக்கு வந்துள்ள அந்த தங்கப்பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.84 லட்சம். அந்த வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர். பலரும் கலவையான கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.

    • விலா எலும்புகள் உடைந்ததால் இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.
    • கட்டிப் பிடித்ததால் தான் இப்படி ஆனது என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என நண்பர் கேட்டதால் நீதிமன்றத்தை நாடினார்

    பீஜிங்:

    அன்பு மிகுதியால் கட்டியணைப்பது எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் சரியான நபரிடமிருந்து சரியான சமயத்தில் அந்த அரவணைப்பை பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனால், அதுவே விலா எலும்புகளை உடைக்கும் அளவுக்கு முரட்டு அணைப்பாக இருந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய வலி நிறைந்த அனுபவத்தை பெற்றுள்ளார் சீனாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்.

    சீனாவின் ஹுனான் மாகாணம், யுயாங் நகரைச் சேர்ந்த அந்தப் பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார்.

    தொடர்ந்து வலி அதிகமாக இருந்ததால் 5 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.

    இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த அந்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான பில்களை காட்டி பணம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர், ``நான் கட்டிப் பிடித்ததால் தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது?" எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்து விட்டார்.

    அதையடுத்து இளம்பெண் கோர்ட்டை நாடியிருக்கிறார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், ``மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்த அந்த 5 நாட்களில் எலும்பு முறிவு ஏற்படக் கூடிய எந்தச் செயலிலும் அந்தப் பெண் ஈடுபட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்" என உத்தரவிட்டனர்.

    விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    பீஜிங்:

    சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.

    இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார்.

    அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.

    வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.

    சில நிமிடங்கள் மட்டும் நடந்துவிட்டு பின்னர் அவர் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினார்.

    வாங் யாபிங் சீன விமானப்படை வீராங்கனையாக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 41 வயதான நிலையில் அவர் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.



    ×