என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinnasalem"

    • பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் மற்றும் பாக்கம்பாடி இந்த பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் நேற்று இரவு வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கால சமுத்திரம் பகுதியில் இருந்து பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கள்ளத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. உடனே, அவர்களை மடக்கி பிடித்தபோது வேல்முருகனின் காலில் கள்ள துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் இருவரை பிடித்து உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், அந்த 2 பேரின் பெயர் செல்லக்கண்ணு, சரவணன் எனவும், இவர்கள் எதற்காக கள்ளத் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்பது போன்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகபட்ச மாக உ.கீரனூரில் 35 மி.மீட்டரும்
    • குறைந்த பட்சமாக மாடாம் பூண்டியில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு,

    கள்ளக்குறிச்சி 14, தியாகதுருகம் 32, கச்சிராயப்பாளையம் 9, கோமுகி அணை 7, மூரார்பாளையம் 9, வடசிறுவலூர் 12, அரியலூர் 12, கடுவனூர் 7, கலையநல்லூர் 25, கீழ்பாடி 12, மூங்கில்துறைப்பட்டு 8, ரிஷிவந்தியம் 18, அரியலூர் 12, மணிமுக்தா அணை 17, வானாபுரம் 13, மாடாம்பூண்டி 5, திருக்கோவிலூர் 29, திருப்பாலபந்தல் 7, வேங்கூர் 18, ஆத்தூர் 18, எறையூர் 10, ஊ.கீரனூர் 35 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்ச மாக உ.கீரனூரில் 35 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக மாடாம் பூண்டியில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 327 மி.மீட்டராக வும், சராசரி 13.62 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.

    • சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
    • சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்தர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன் (வயது 40). இவருக்கு நித்தியா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுந்தர் ராஜன் கடந்த 7வருடங்களாக சின்னசேலம் வான கொட்டாய் பகுதியில் உள்ள அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் இளநிலை பயிற்சி அலுவலராக பணியாற்றி வந்தார். சனி, ஞாயிறு விடுமுறையை கழிப்பதற்காக இவரது மனைவியும் குழந்கதைளும் சிதம்பரம் சென்றதாக கூறப்படுகிறது. சுந்தர்ராஜன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே பார்த்தபோது வீட்டின் சந்தில் சுந்தர்ராஜன் கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்த போது சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சுந்தர்ராஜனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பணியின் போது ஏற்பட்ட மோதலால் அலுவலகத்தில் வைத்து பூட்டி சென்றார்.
    • தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தில் சங்கீதா என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு இடையே பணியின் போது ஏற்பட்ட மோதலால் நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    அப்போது தமிழரசி , உதவியாளர் சங்கீதாவை பார்த்து கதவைத் திறந்து விடு. இல்லையென்றால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை செய்தும் உன்னால் முடிந்ததை பார் என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார் உதவியாளர் சங்கீதா.

    இதனைத் தொடர்ந்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து பூட்டி இருந்த கதவை திறந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னசேலம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் தாலுகா வி.அலம்பளம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 42). இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் 30 சென்ட் நிலம் உள்ளது.

    இந்த நிலத்திற்குரிய சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய சின்னசேலம் தாலுகா அலுவலகத்துக்கு சுமதி சென்றார். அங்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஸ்வரி (39) என்பவரிடம் இதுபற்றி கூறினார்.

    அப்போது அவர் சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று சுமதியிடம் கேட்டார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுமதி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை சுமதியிடம் கொடுத்து அதை உமாமகேஸ்வரியிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று மாலை சுமதி எடுத்துக்கொண்டு சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பெண் அதிகாரி உமாமகேஸ்வரியிடம் கொடுத்தார்.

    அவர் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று உமாமகேஸ்வரியை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    சின்னசேலம் அருகே பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னசேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் லட்சுமணபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 50) விவசாயி. இவரது மனைவி சரோஜா (45). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இவரது மகன் தண்டபாணி (26). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அய்யாகண்ணுவும் அவரது மனைவி சரோஜாவும் உணவு சாப்பிட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஊர் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அய்யாக்கண்ணு சென்று விட்டார்.

    சரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் சரோஜா வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டினர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரோஜா பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து அய்யாக்கண்ணுவின் மகன் தண்டபாணி கூகையூர் லட்சுமணபுரம் சாலை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இரவு வந்தார். அவர் வீட்டின் கதவை தட்டினார். கதவு தட்டும் சத்தத்தை கேட்டு மர்ம மனிதர்கள் வீட்டில் இருந்து வெளியே தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அந்த வீட்டில் தப்பி செல்ல வழி இல்லாததால் அந்த வீட்டிற்க்குள்ளேயே பதுங்கி இருந்தனர். தண்டபாணி நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவரது தாய் சரோஜா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது வீட்டிற்குள் இருந்த மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். தண்டபாணியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    பின்னர் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து கீழ்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த மர்ம நபர்கள் 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ் கல்பூண்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    அய்யாகண்ணுவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் சொத்து தகராறு இருந்தது. சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×