என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyrus Mistry"

    • டாக்டரின் கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலேயிடம் வாக்குமூலம் பெற்றனர்.
    • டாக்டர் அனஹிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    மும்பை:

    டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார். மும்பை அருகே பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. விபத்தில் சைரஸ் மிஸ்திரி, அவரது நண்பர் ஜகாங்கிர் ஆகியோர் பலியானார்கள்.

    இந்த விபத்தின்போது காரை ஓட்டிய பெண் டாக்டர் அனஹிதா மற்றும் அவரது கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலே ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இந்த விபத்தின்போது காரை ஓட்டிய பெண் டாக்டர் அனஹிதா பந்தோலே(வயது 55) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலேயிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அவரின் வீட்டில் வைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அனஹிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரை வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    அனஹிதா இப்போதும் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை.

    • டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

    மும்பை :

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு தொழில் அதிபர் ஜகாங்கிர் பண்டோலேவும் பலியானார். ஜகாங்கிர் பண்டோலேவின் சகோதரர் டாரியஸ் பண்டோலே (60), இவரது மனைவியான டாக்டர் அனகிதா (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டாக்டர் அனகிதாதான் விபத்துக்குள்ளான காரை ஓட்டினார்.

    பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் குஜராத் மாநிலம் வாபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் நேற்று மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

    கார் விபத்தில் பலியான சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். ரத்தன் டாடா பதவி விலகியதை அடுத்து 2012-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பதவி ஏற்று, அந்த பொறுப்பில் 2016-ம் ஆண்டு வரை நீடித்தார்.

    பிரபல தொழில் அதிபரான அவர் கார் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சைரஸ் மிஸ்திரியுடன் காரில் உடன் பயணம் செய்தவர்கள் அவரது நண்பர்கள். இவர்கள் அனைவரும் பிரபல தொழில் அதிபர்கள். மேலும் அனகிதா மும்பையில் பிரபல மகப்பறு மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர்கள் குஜராத் மாநிலம் உடவா பகுதியில் உள்ள ஒரு பார்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மும்பை திரும்பி உள்ளனர். காரை பெண் டாக்டரான அனகிதா ஓட்டி உள்ளார். அவரது கணவர் டாரியஸ் முன் இருக்கையில் இருந்துள்ளார். சைரஸ் மிஸ்திரியும், ஜகாங்கிரும் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளனர்.

    கார் மும்பையை நெருங்கி கொண்டு இருந்தபோது பால்கர் அருகே ஆற்றுப்பால தடுப்புச்சுவரில் மோதியபோதுதான் இந்த துயர சம்பவம் நேர்ந்தது.

    இதற்கிடையே காரின் அதிவேகம், சீட் பெல்ட் அணியாதது, காரை ஓட்டிய பெண் டாக்டரின் தவறான கணிப்பு போன்ற காரணங்கள் சைரஸ் மிஸ்திரியின் உயிரை பறித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கார் அதிவேகமாக சென்று உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, கார் சரோட்டி சுங்கச்சாவடியில் இருந்து, விபத்து நடந்த பகுதிக்கு 20 கி.மீ. தூரத்தை 9 நிமிடங்களில் கடந்து உள்ளது. முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கர வேகத்தில் மோதி விட்டது.

    மோதிய வேகத்தில், பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜகாங்கிர் ஆகிய 2 பேரின் தலையும் முன் இருக்கையில் மோதி உள்ளது. இவர்கள் 2 பேரும் சீட் பெல்ட் அணியவில்லை. மேலும் உடனடியாக ஏர் பலூனும் விரியவில்லை. இதனால் முன் இருக்கையில் தலை மோதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.

    காரை ஓட்டிய பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் சீட் பெல்ட் அணிந்து உள்ளனர். மேலும் முன் இருக்கையில் ஏர் பலூன் விரிந்ததால் அவர்கள் உயிர் தப்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி பற்றி மராட்டிய முன்னாள் துணை கலெக்டரும், தொழில் அதிபருமான கணேஷ் ஜக்தாப் கூறியதாவது:-

    சைரஸ் மிஸ்திரி எனக்கு மிகவும் நெருக்கமானவர். விமான பயண வசதிகள் இருந்தாலும் அவர் சாலை பயணத்தையே அதிகம் விரும்புவார். அவர் விரும்பிய சாலை பயணமே அவரது உயிரை பறித்துள்ளது.

    பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் சாலையோர உணவு கடைகளில் விற்கப்படும் வடபாவ், பாவ் பாஜி ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவார். சாலையோர டீக்கடைகளில் டீ குடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சைரஸ் மிஸ்திரி பயணித்த சொகுசு கார், சாலையின் தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்
    • சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மும்பை:

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

    அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பியபோது, பால்கர் மாவட்டம் சாரோட்டியில் உள்ள சூர்யா ஆற்றுப்பாலத்தில் சென்றபோது இன்று பிற்பகல் 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர் பயணித்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி உள்ளது.

    விபத்தில் உருக்குலைந்த கார்

    விபத்தில் உருக்குலைந்த கார்

    இந்த விபத்தில் காயமடைந்த கார் டிரைவர் உள்ளிடட் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, மத்திய மந்திரி பியூஷ் கோயல், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சைரஸ் மிஸ்திரி, 2012 முதல் 2016 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்திற்கு எதிராக தொடர்ந்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.
    மும்பை :

    டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது(தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் உள்ளார்).

    பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப் போராட்டம் தொடங்கியது. டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்திலும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திலும் 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.

    இதற்கிடையே, சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு அவர் தடை வாங்கக்கூடும் என்பதால் மிஸ்திரிக்கு எதிராக டாடா குழுமம் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்தது.

    இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் டாடா சன்ஸ் - மிஸ்திரி வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், பதவி நீக்கத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. டாடா குழுமம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நம்பிக்கையை மிஸ்திரி இழந்ததால் அவர் நீக்கப்பட்டதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
    ×