என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepa"

    சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தீபா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். #JDeepa #Sasikala #TTVDhinakaran
    சென்னை:

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று திடீரென்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனது அத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துக்களை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.

    அவர்கள் மீது போலீசில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது.

    அவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.


    எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு.

    எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    எனக்கு பலமுறை சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.

    நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #JDeepa #Sasikala #TTVDhinakaran
    அப்பல்லோவில் வருகிற 29-ந்தேதி ஆணையம் ஆய்வு செய்யும் போது என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்று ஆணையத்திடம் ஜெ. தீபா சார்பில் அவரது வக்கீல் மனு அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அவ்வப்போது குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே ஆஜராகி இருக்கிறார். கடந்த 10 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    வருகிற 29-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆணையம் சார்பில் வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் அப்போது உடன் செல்கிறார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டுகள், அமைச்சர்கள் தங்கி இருந்த இடங்கள், வி.ஐ.பி.க்கள் வந்து சென்ற இடங்கள் என 10 இடங்களை ஆணையம் சார்பில் போட்டோ எடுக்க உள்ளனர்.

    இந்த ஆய்வின் போது அப்பல்லோவுக்கு தன்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்றுஜெ.தீபா கூறி உள்ளார்.

    இது குறித்து விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா சார்பில் வக்கீல் சுப்பிரமணியம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகிய நாங்கள் இருவரும்தான் ஜெயலலிதாவின் ரத்த உறவுகள். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில்தான் இதற்கு முன்பு வசித்து வந்தோம்.


    ஜெயலலிதாவின் இறுதி சடங்கையும் தீபக் நடத்தினார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது ஆஸ்பத்திரிக்குள் என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

    இப்போது ஆணையம் சார்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும், போயஸ் கார்டனிலும் ஆய்வு செய்ய போவதாக அறிகிறேன். இந்த ஆய்வின் போது என்னையும், எனது வக்கீலையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    நான் ரத்த உறவு என்பதால் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டை பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஆணையத்தில் அளிக்க கூடிய சாட்சிகள் சில உண்மை தன்மை இல்லாததால் தன்னை முக்கிய சாட்சியாக ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். #Jayalalithaa #Deepa
    ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக தான் வகிக்க முடியும் என்று கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தீபா பேசினார்.
    கரூர்:

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கரூரில் நடந்தது. கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.கே.துரைசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொது செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டார். அப்போது, தனிக்கட்சி தொடங்கி அ.தி.மு.க.வை வழி நடத்துவதா? அல்லது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்துவதா அல்லது தனிக்கட்சி தொடங்கி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதா என 3 கேள்விகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.

    இதில் தங்கள் விருப்பத்தை தொண்டர்கள் மார்க் செய்து அளித்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

    பின்னர் ஜெ.தீபா பேசுகையில், ஜெயலலிதா இறப்பில் உள்ள சதிகள், சூழ்ச்சிகள், மர்மங்கள் என்ன? என்று இதுவரை தெளிவாகவில்லை. எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் 1½ கோடி தெண்டர்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த சூழ்ச்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார், யாரோ இன்று மகுடம் சூட்டியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மக்களும் சகித்து கொள்கின்றனர்.


    இதை மாற்றுவது தொண்டர்களாகிய உங்கள் கையிலும், மக்கள் கையிலும் உள்ளது. தீய எண்ணம் உடையவர்களிடம் இருந்து கழகத்தை மீட்க வேண்டும். நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம் போன்றவற்றை ஜெயலலிதா இருந்திருந்தால் எதிர்த்திருப்பார். தூத்துக்குடி துப்பாக்கி சூடும் நடந்திருக்காது என்றார்.

    பின்னர் ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க.வினர் தமிழகத்தை அவர்களது வீட்டு வேலைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி புரியும் மற்ற மாநிலங்களில் ஊழல்களே நடக்கவில்லையா? அதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க. பொது செயலாளர்களை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி பதவியேற்றுள்ளனர். இது தவறு.

    நான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றாலும் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக நான் வகிக்க முடியும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ். கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் சட்ட ரீதியாக போராடுவேன். ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர அ.தி.மு. க.வை கைப்பற்றுவதே எனது நோக்கம். இதில் உறுதியாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Jayalalithaa #Deepa
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா படுதோல்வியை சந்திக்கும் என்று கரூரில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கூறினார்.
    கரூர்:

    கரூரில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், டி.டி.வி. தினகரன் கட்சியும் பலமாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் தேர்தல் வந்தால் தான் பலசாலி யார்? பலவீனமானவர் யார்? என்பது தெரியும். மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் அ.தி.மு.க. அரசு இயங்குகிறது. இந்த ஆட்சி கலைக்கப்பட்டால் தமிழக மக்கள் நிம்மதியடைவர்.

    அ.தி.மு.க.வோடு இணைந்து செயல்படுவதற்காகவே அரசியலுக்கு வந்தேன். தேர்தலின் போது தனித்து செயல்படுவதா? அல்லது அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவதா? என்பது குறித்து தெரிவிக்கப்படும். அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பது யார்? என்பது குறித்து தொண்டர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.


    அவ்வாறு எடுத்தால் தான் வரக்கூடிய தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும். டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க. என்கிற தனிகட்சியை தான் நடத்துகிறார். அவருக்கும், அ.தி.மு.க.வுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. அ.தி. மு.க. தொண்டர்கள் பெரும்பாலானோர் அ.ம.மு.க.வில் இருக்கின்றனர் என்பதற்கு உறுதியான தகவல் இல்லை. அதற்கு எந்த புள்ளிவிவரம் இருக்கிறது? எனவே அதனை ஏற்றுகொள்ள இயலாது.

    அ.தி.மு.க.வை கைப்பற்ற வேண்டும் என்பது என் எண்ணமும் இல்லை. ஆனால் தொண்டர்கள் ஆதரவு எனக்கு பெருமளவு இருக்கிறது. எனக்கும், எனது சகோதரருக்கும் சொத்து பிரச்சனை இல்லை. மாறாக சொத்துகளே பிரச்சனையில் தான் இருக்கிறது. ஜெயலலிதாவை போல் ஆளுமை யாருக்கும் கிடையாது. அவரை போல் நான் வர முடியுமா? என்பது காலம் தான் பதில் சொல்லும்.

    18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. 3-வது நீதிபதி தீர்ப்பும் மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதுவே நடக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. படு தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் 8 வழிசாலை அமைப்பது தேவையற்றது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #JDeepa
    இன்னும் சில காலங்களில் தினகரன் கட்சி செயல் இழந்து விடும் என்று சீர்காழியில் நடைபெற்ற கூட்டத்தில் தீபா பேசினார். #Deepa #TTVDhinakaran
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியில் எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.

    இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஜனநாயக ஆட்சி நடக்கும் இக்காலகட்டத்தில் மக்களின் போராட்டத்தை கையாள பல்வேறு வழிகள் உள்ளன.

    பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு 99 நாட்கள் ஆதரவு அளித்தது இந்த அரசுதான். திடீரென போராட்ட மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது. இந்த மக்கள் விரோத ஆட்சி உடனடியாக கலைக்கப்படவேண்டும்.


    நீட் தேர்வினால் ஏற்கனவே மாணவி அனிதா இறந்த போதே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மற்றொரு மாணவி இறந்த பின்னரும் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு அறிவிப்பு கூட வெளியிடவில்லை. மத்திய மோடி அரசு தமிழகத்தை அடக்கி ஆள மட்டுமே நினைக்கிறது.

    கர்நாடகா மீது உள்ள அக்கறைக் கூட தமிழகத்தின் மீது மத்திய அரசிற்கு இல்லை. டி.டி.வி.தினகரன் தற்போது தனி கட்சி ஆரம்பித்துள்ளார். அதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னும் சில காலங்களில் தினகரன் கட்சி செயல் இழந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Deepa #TTVDhinakaran
    சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.#Deepa #Sasikala #AssetsCase
    சென்னை:

    மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    குக்கரில் வேக வைத்து விசில் அடிக்கும் டி.டி.வி. தினகரன் 98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் இருப்பதாக சொல்லியுள்ளார். ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்-தி.மு.க. என கூட்டணியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    2004-ம் ஆண்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்தான் இந்த தினகரன். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளும் பிடுங்கப்பட்டது. அதனால் 98 சதவீதம் இல்லை. 100 சதவீதம் கூலிப்படையினர் மட்டுமே இவர் பின்னால் வருவார்கள்.


    2011-ம் ஆண்டு ஜெயலலிதா சசிகலா குடும்பத்தின் கூட்டு கொள்ளை சதியை முறியடித்து, பத்திரிகையாளர் சோ.ராமசாமி மற்றும் அப்போதைய டி.ஜி.பி. ராமானுஜம் மற்றும் பெங்களூர் உளவு பிரிவு போலீஸ் எச்சரிக்கையின் அடிப்படையில் காவல்துறை உதவியோடு சசிகலா மற்றும் அவரின் கூட்டாளிகள் 100-க்கும் மேற்பட்ட காவலர்களின் உதவியோடு போயஸ் தோட்டத்தை விட்டு போலீஸ் வேனில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த சசிகலா குடும்பம் திக்குமுக்காடி, தி.மு.க.வின் உதவியை நாடியது. அதன்பிறகு சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான். ஜெயலலிதா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பூங்குன்றன் என்னை தொடர்பு கொண்டார்.

    நான் அவரை பெங்களூர் சிறையில் சந்தித்தேன். அத்தை என்னிடம் பேச கூடாது என்று சசிகலா சொன்னதால் காவலர்கள் என்னை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க தாமதித்தனர். அப்போது மாலை 6 மணி வரை காத்திருந்து திரும்பி சென்றேன். ஆறுமுகசாமி கமி‌ஷனை வைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அரை வேக்காடு குக்கரை வைத்து கையாலாகாத தினகரனை வைத்து அ.தி.மு.க.வை ஆளவும் முடியாது.

    இவ்வாறு தீபா கூறியுள்ளார். #Deepa #TTVDhinakaran
    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.#ADMK
    சென்னை:

    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டி.டி.வி.தினகரன் புதிதாக ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட பாசறை செயலாளர் கே.பி.கோபிநாத், ஆலந்தூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் டி.கண்ணன், துணை தலைவர் வாட்டர் கே.சரவணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளர் எஸ்.கவுதம் சுரேஷ், 164-வது வட்ட கழக செயலாளர் புல்லட் கே.ராஜேஷ் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த ஆலந்தூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் வி.ரமேஷ், 156-வது வட்ட துணைச் செயலாளர் பி.சுந்தர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட தீபா பேரவை தலைவர் எம்.ஜி.ஆர்.விமலானந்தர் உள்பட 100 பேர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    ×