search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dietary focus"

    • வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும்.
    • மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிர வைத்துக்கொண்டிருக்கிறது. வெயில் அதிகரித்த சமயத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால் உடல் உஷ்ண பிரச்சினையை எதிர்கொண்டவர்கள், கோடை மழையால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். என்னென்ன விஷயங்களை செய்யலாம்? செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

    உணவில் கவனம்

    உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அது நன்கு சமைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நன்கு வேகவைக்கப்படாத உணவுகள் செரிமானமாவதற்கு கூடுதல் நேரமாகும். சிலருக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். அதனால் துரித உணவுகளை தவிருங்கள். சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதா? என்பதை உறுதி செய்துவிட்டு உட்கொள்ளுங்கள். ஏனெனில் வெயில் சுட்டெரித்த நிலையில் இருந்து ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் கலக்கும் மாசுக்கள் உணவில் படியக்கூடும். அதனுடன் அதிக ஈரப்பதமான சூழலும் சேர்ந்து உணவு கெட்டுப்போக வழிவகுத்துவிடும். இறுதியில் உணவு விஷத்தன்மைக்கு மாறிவிடக்கூடும்.

    வைட்டமின் சி உட்கொள்ளுங்கள்

    வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும். குறிப்பாக கோடை காலம் முடிந்து மாறும் பருவ நிலை மாற்றத்தையும், கோடை மழையையும் எதிர்கொள்ள உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்யும். நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.

    புரோபயாடிக் உணவுகளை உண்ணுங்கள்

    மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற்றம் காரணமாக குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புரோபயாடிக் உணவுகளை உட்கொண்டால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். செரிமான பிரச்சினைகளைத் தடுக்கும்.

    சுற்றுப்புற தூய்மை

    பருவ நிலை மாறுபாடும், மழை நீர் தேங்குவதும் கொசு உற்பத்திக்கு வித்திடும். டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை கொசுக்கள் பரவச் செய்துவிடும். கோடை மழையின்போது தாழ்வான பகுதியில்தான் மழைநீர் அதிகம் தேங்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியை தடுக்க கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். கைகள், உடலை முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுங்கள்.

    தனிப்பட்ட சுகாதாரம்

    வெப்பநிலை குறைந்து ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். உடலை எப்போதும் சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக கால்கள் மற்றும் கை விரல்கள் உலர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் விரல்களுக்கு இடையே பூஞ்சை தொற்று ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும்.

    வடிகட்டிய நீரை பருகுங்கள்

    கோடை காலம் முடிவுக்கு வந்து பருவ நிலை மாறுவதற்கு ஏற்ப பருகும் தண்ணீரையும் மாற்ற வேண்டும். குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்த்து தண்ணீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும். வடிகட்டிய தண்ணீரை பருகுவதும் நல்லது. மழை சமயங்களில் குடிநீரில் அசுத்த நீர் கலந்தால் காலரா, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும். அதனை கருத்தில் கொண்டு தண்ணீர் பருக வேண்டும்.

    மழையில் நனையாதீர்கள்

    மழையில் நனைவதை முடிந்தவரை தவிருங்கள். எதிர்பாராதவிதமாக மழையில் நனைந்து உடல் ஈரமாகிவிட்டால் வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு ஆடையை மாற்றிவிடுங்கள். அது காய்ச்சல் உள்பட பிற நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.

    ×