என் மலர்
நீங்கள் தேடியது "Earphones"
- இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள்.
- வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.
தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும் போதும், பஸ், ரெயிலில் பயணிக்கும் போதும் பல பெண்களை இயர்போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதோ பட்டியல்...

இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையை கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப்பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல, இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும்.
இயர்போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவதால் காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு, பாக்டீரியாவின் வளர்ச்சி உள்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.
இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் மட்டும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.