search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G Viswanathan"

    • உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்.
    • உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 39-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், இளநிலை, முதுநிலை மாணவர்கள் 8,205 பேர் பட்டமும், 357 பேர் முனைவர் பட்டமும், சிறப்பிடம் பிடித்த 65 பேர் தங்கப் பதக்கமும் பெற்றனர்.

    விழாவுக்கு தலைமை தாங்கி பல்கலைகழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-

    நாட்டில் 10 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கை உயர்கல்வி விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தெரிவிக்கிறது. இது சாத்தியமாக வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனால், கல்விச் சுமையை பெற்றோரே ஏற்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.


    கவுரவ விருந்தினராக பங்கேற்ற டொயோட்டோ இந்தியா நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி டி.ஆர்.பரசுராமன் பேசுகையில்:-

    உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது. மேலும், இளம் தலைமுறையினர் அதிகமுள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் 29 முதல் 30 சதவீதமாக உயரும்.

    சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 6.8 கோடியிலிருந்து 14 கோடியாக மாற வாய்ப்பு உள்ளது. சைபர் செக்யூரிட்டி, ரோபாடிக்ஸ், ஆட்டோமேஷன், டிரோன்கள், 3-டி பிரிண்டிங், சாட் ஜி.பி.டி., ப்ளாக் செயின் உள்ளிட்ட 15 துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்றார்.


    தேசியக் கல்வித் தொழில்நுட்பமன்றம் மற்றும் தேசிய அங்கீகார வாரியத் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

    உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களும் பங்களிக்க வேண்டும். உயர் கல்வி விகிதத்தை அதிகரிக்க, அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்வியுடன், தனித்திறன்கள் மற்றும் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    உயர்கல்வி படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர். சிவில், ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல் துறை களிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

    நாட்டில் 2014-ல் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. சுய தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதுடன், பலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க முடியும். எனவே, மாணவர்கள் சுயதொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவ நாதன், துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கிராமப்புற மாணவர்கள் வி.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
    • தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா, மத்திய பிரதேசத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கான அறிமுக விழா பல்கலைகழக வளாகத்தில் உள்ள சென்னா ரெட்டி அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சியில், வி.ஐ.டி பல்கலைகழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஸ்டார்ஸ் திட்ட மாணவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வி.ஐ.டி.யில் ஸ்டார்ஸ் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதன் வளர்ச்சியால் கிராமங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

    கிராமப்புற மாணவர்கள் வி.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா, மத்திய பிரதேசத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்ததிட்டத்தின் கீழ் இதுவரை 1,046 மாணவ, மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி அனைவருக்கும் உயர்கல்வி திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் 8,600 மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கல்விக்கு நிதி அதிக அளவில் ஒதுக்க வேண்டும். தற்போது 1 லட்சம் கோடி கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் அதிகமாக ஒதுக்கப்படுகிறது. ராணுவ தடவாளங்கள் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதேபோல, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப் படியாக ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

    அதுவே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்தியா 155-வது இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கான நிதியை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    வேலூர் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் அனைவருக்கும் ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறார். சந்திரயான்-3 அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சந்திரயான்-2 தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு சந்திரயான்-3 உருவாக்கும்போது என்னை, திட்ட இயக்குநராக நியமித்தபோது பல சவாலான விஷயங்களை சந்திக்க வேண்டியிருந்தது. சந்திரயான்-2 தோல்விக்கான காரணத்தை முதலில் கண்டுபிடித்தோம். அந்த குறைகள் சந்திரயான் 3-ல் இல்லாமல் பார்த்துக்கொண்டோம்.

    அதேபோலதான் வாழ்க்கையில் தினந்தோறும் ஏற்ற இறக்கங்கள், மேடு, பள்ளங்கள் உள்ளது. நாம் நம்முடைய வேலையை தெளிவாக செய்ய வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவர்களாகிய நீங்கள் பாடங்களை முதலில் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். மாணவர்கள் ஆராய்ச்சி கூடத்தை பயன்படுத்த வேண்டும்.

    சந்திரயான்-3 திட்டத்தில் கடைசி 19 நிமிடம் ஒரு சவாலாக இருந்தது. லேண்டரை நிலவில் இறக்குவதற்கு முன்பு அதிக பரிசோதனைகளை செய்தோம். அப்போது, அதிக சவால்கள் எங்களுக்கு காத்திருந்தது. சந்திரயானை தென் துருவத்தில் இறக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தினசரி உழைக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். 4 ஆண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் நீங்கள் சாதனையாளர்களாக வருவீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து, மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித் குமார் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, வேலைவாய்ப்பு இயக்குநர் சாமுவேல் ராஜ்குமார், உடற் கல்வி இயக்குநர் தியாகசந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார். முடிவில், திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கோவர்தன் நன்றி கூறினார்.

    ×