search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gas pipe accident"

    • வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள் (வயது 56) என்பவர் குடியிருப்பு அருகில் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென பறந்து வந்த மர்ம பொருள் ஒன்று காலின் மீது விழுந்து காயம் ஏற்படுத்தியது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து பறந்து வந்து விழுந்த பொருள் எதுவென தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    குடியிருப்பு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சுந்தராம்பாள் மீது பறந்து வந்து விழுந்த கருப்பு நிற பொருள் எதுவென்று தெரியவந்தது.

    அப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தனியார் நிறுவனத்தின் கியாஸ் திட்டத்தில் எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு ள்ளது. வாவிபாளையம் பகுதியில் அதற்கான செக்கிங் பாயிண்ட் அமைந்துள்ளது. செக்கிங் பாயிண்டில் அதிக அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் குழாய் பதிப்பில் இருந்த உபகரணம் பறந்து வந்து மூதாட்டியின் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

    தொடர்ந்து எரிவாயு குழாய் பராமரிப்பு பணியில் உள்ள ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பாள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கியாஸ் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி., காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குடியிருப்புக்கு அருகாமையில் இது போன்ற தரை வழியாக எரிவாயு கொண்டு செல்லும்போது அதற்காக பதிக்கப்படும் குழாய்களைச் சுற்றி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாததே விபத்திற்கு காரணம் . எனவே செக்கிங் பாயிண்ட் பகுதியை சுற்றி கம்பி வேலி அல்லது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×