என் மலர்
நீங்கள் தேடியது "Hormonal Change"
- பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம்.
- பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையே 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிறுத்தமாகும். வயது முதிர்ச்சியின் காரணமாக பெண்களின் உடலில் பாலியல் ஹார்மோன்களின் அளவு குறையும். கருப்பையில் இருந்து வெளிவரும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பின் அளவு குறைவதோ அல்லது நிறுத்தப்படுவதோ இதற்கு காரணமாகும்.
பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து மாதவிடாய் நிறுத்தத்திற்கான வயது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். சில பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான சராசரி வயது 45 முதல் 55 வரையாகும். ஒருசில பெண்கள் 40 வயதிற்குள்ளேயே மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்து விடுகிறார்கள். இதனை "மூன்கூட்டிய கருப்பை செயலிழப்பு என்கிறோம்.
முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்: பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இந்த கருமுட்டைகள் முதிர்ச்சி அடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் ஒரு கருமுட்டை வெளியேற்றப்படும்.
பிறக்கும் போதே குறைவான அளவு கருமுட்டைகள் கொண்ட பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்.
இதுமட்டுமில்லாமல் குரோமோசோம் குறைபாட்டுடன் பிறப்பவர்களுக்கும். இளம் வயதிலேயே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவோர், கருப்பையை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்வோர் மற்றும் முன் அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படக்கூடும். சிலருக்கு இது மரபு வழியாகவும் ஏற்படலாம்.
முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள்:
6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையற்ற மாதவிடாய் ஏற்படும், தாமதமாக மாதவிடாய் வருவது, குறைந்த அல்லது அதிகப்படியான நாட்கள் ரத்தப்போக்கு ஏற்படுவது போன்றவை மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கியமான அறிகுறிகளாகும்.
இதுதவிர முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் அதிக வெப்பத்தை உணர்தல், பிறப்புறுப்பில் வறட்சி, தூக்கமின்மை, தோல் கருமை அடைதல் அல்லது வறண்டு காணப்படுதல், தலைவலி, உணர்வு ரீதியான மாற்றங்கள், அதிக அளவு முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவைகளும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளாகும்.
முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான தீர்வுகள்:
45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடலில் வெப்பம் குறைந்து ஹார்மோன் சுரப்பு சீராகும்.
- தினமும் 6 முதல் 8 மணிநேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும்.
- ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.
மனிதர்களுக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. தினமும் 6 முதல் 8 மணிநேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் அப்படி யாரும் தூங்குவதில்லை. ஏனென்றால் அனைவரும் அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் இரவு 10 மணிக்கு மேல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் போனில் இருந்து வரும் வெளிச்சத்தினால் மூளையில் மெலாட்டோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.
நீங்கள் சரியாக தூங்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் அல்லது ஸ்மார்ட் போனில் வேலைபார்க்கிறீர்கள் என்றால் அது மாரடைப்பு வருவதற்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் நெஞ்செரிச்சல் பிரச்சினையும் ஏற்படும்.
இரவுநேரத்தில் நீங்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்திவிட்டு காலையில் அதிகநேரம் தூங்கினால் அதை சரியான தூக்கமாக உங்களது உடல் ஏற்றுக்கொள்ளாது. இதுமாதிரி தொடர்ந்து நீங்கள் செய்தால் ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
தொடர்ச்சியாக இரவில் நீங்கள் மொபைல் போன் பயன்படுத்திவிட்டு பகல் நேரங்களில் தூங்குவீர்கள் என்றால் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உங்களுடைய ஆயுட்காலம் குறையவும் வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை நீங்கள் மொபைல் போன் பயன்படுத்தினால் தூங்க செல்வதற்கு முன்பு 10 நிமிடம் மட்டும் பயன்படுத்துங்கள் மற்றும் நீங்கள் படுத்து இருக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் இடைவெளிவிட்டு மொபைல் போனை வைக்க வேண்டும்.
- சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை.
- உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது.
ஒரு நாளைக்கு அனைவரும் மூன்று முறை சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் பல காரணங்களினால் ஒரு வேலை உணவையாவது தவிர்த்து விடுகின்றனர். இன்னும் சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

உயிரினங்களுக்கும் உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது. எனவே, இதனை நாம் ஒழுங்காக உட்கொள்ளவில்லை என்றால் உடலானது பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறது.

ஒருவேளை சாப்பிடாமல் இருந்தால் கூட உங்கள் மூளை உங்கள் பேச்சை கேட்காது. எதைப்பார்த்தாலும் கோபமாகவும், வெறுப்பாகவும் இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்காமல் இருக்கும் நேரத்தில் உடலானது முழு ஆற்றலையும் இழக்கிறது. இதனால் கோபமும், எரிச்சலும் உண்டாகும்.
உணவினை சாப்பிடாமலோ அல்லது குறைவாக சாபிடுவதன் மூலம் உடலில் ஹார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

தினமும் ஒருவேளை உணவை தவிர்ப்பதன் மூலமாகவோ அல்லது ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பதன் மூலமாகவோ உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதாவது நீங்கள் குறைவான அளவில் சாப்பிட்டு வருவதால் நாளடைவில் உங்கள் ஊட்டச்சத்தின் அளவு குறைந்து உடல் வலிமையற்று காணப்படும்.
தொடர்ந்து உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடலில் மெட்டபாலிசத்தின் அளவு பாதிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறையத்தொடங்குகிறது. குறிப்பாக காலை உணவையும், இரவு உணவையும் தவிர்ப்பதன் மூலம் உடலில் உள்ள ஒட்டுமொத்த மெட்டபாலிசமும் பாதிக்கப்படுகிறது.
- ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
- இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். வறுத்த கோழிகளை சாப்பிடும் போது உடலுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்ச்சி அடைய அதற்கு தீவனமாக ஹார்மோன்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் நிறைந்த பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடும் போது உடல் எடை அதிகரித்து உடல்நல பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறது.
பிராய்லர் கோழியில் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடலில் கொழுப்புகள் அதிகரித்து இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பிராய்லர் கோழியில் உள்ள ரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் பிராய்லர் கோழியை தவிர்ப்பது நல்லது. பெண்களும் பிராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தான் பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். பிராய்லர் கோழியை வறுத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் அதிக எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடலாம்.
குறைந்த பட்சம் 165 வெப்பநிலையில் இறைச்சியை சமைக்க வேண்டும். மேலும் பிராய்லர் கோழியில் சமைத்த உணவை மறுநாள் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
- உடல்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம்.
- தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல் அவசியம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்.
* முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாய்தானா அல்லது அது ரத்தக் கசிவா எனக் கண்டறிவது அவசியம்.
* மாதவிடாய் போன்று உதிரப்போக்கு வந்துகொண்டிருந்தால் அது மாதவிடாய்தான். அவ்வாறு அல்லாமல் சிறிது உதிரம் மட்டுமே வந்து, நெப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில், அது ரத்த கசிவதாக இருக்கலாம்.
* பிறப்புறுப்பில் இருந்து ரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல், கருக்கலைதல் அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் நிகழும். இதுதான் காரணம் என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.
* உங்களுக்கு மாதவிடாயாக இருக்கும் பட்சத்தில் அது ஒவ்வொரு மாதமும் தொடர்கதையானால் சில பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு தைராய்டு அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ இந்த பிரச்சினை வரலாம்.
* ஒருவேளை நீங்கள் மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்த பிரச்சினை வரலாம்.
* நீங்கள் அதிகம் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்கிறீர்கள் என்றாலும் இரண்டு முறை மாதவிடாய் வரலாம். மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.
* திடீரென உடல்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம். மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால், இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.
- தானாகவே சரியாகிவிடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை.
- இரவில் உள்ளாடை அணிவதை தவிர்க்கவும்.
மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் பிரச்சினைதான் காரணம். மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.
இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து, மாதவிலக்கின் போது உச்சத்தை அடைந்து, பிறகு தானாகவே சரியாகிவிடக்கூடியவை. பயப்படத்தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.
எவை எல்லாம் சாதாரணமானவை?
* வீக்கம்
* மென்மையாதல்
* வலி* எரிச்சல்
மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்?
* கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.
* கஃபைன் உள்ள கோப்பி, டீ, சொக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்கவும்.
* மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.
* மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.
* உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக்கொள்ளவும்.
எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?
* மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால்...
* மார்பகங்களில் இருந்து திரவமோ, ரத்தமோ கசிந்தால்...
* உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பின்பற்றிய பிறகும் ஒருவித அசெளகரியத்தை
உணர்ந்தால்...
* தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தால்...
* மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்...
* மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்...
* மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்...
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக இது தொடர்பான மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.
என்ன செய்யலாம்?
* மார்பகங்களில் வலியோ வீக்கமோ இருக்கும் நாட்களில் இரவில் உள்ளாடை அணிவதை தவிர்க்கவும்.
* மருத்துவரின் ஆலோசனையின் பேரில் விட்டமின் மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம்.
* நடைப்பயிற்சி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளியல் போன்றவையும் இதமளிக்கும்.
சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
* வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ்
* பசலைக்கீரை
* ஆலிவ்
* சோளம்
* கேரட்
* வாழைப்பழம்
* பழுப்பரிசி
* அவகோடா
- தைராய்டு அதிகம் பெண்களிடையே நிலவுகிறது.
- மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது.
தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.

தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.
ஒரு வகையில் மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது. ஒருவேளை இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்னை உண்டாகிறது.
மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் எனப்படுகிறது. சொல்லப்போனால் பொம்மையில் பேட்டரி தீர்ந்து போனது போலத்தான். ஹைபோ-தைராய்டிசம் வந்தால் மனித உடலில் எந்த அளவு ஆற்றலுடன் இயங்க முடியுமா அதை விடக் குறைவாகவே இயங்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அயர்ச்சி அடைந்துவிடுவார்கள்.
ஒருவேளை தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் எனப்படுகிறது. இவர்கள் அதிகளவில் 'காஃபைன் ' எடுத்துக் கொண்டவர்களைப் போன்றவர்கள். அதாவது அதிக பசி, அதிக வியர்வை போன்றவை உண்டாகும்.
மூன்றாவது பாதிப்பு தைராய்டு சுரப்பி வீக்கமடைவது. 'கழுத்துக் கழலை' எனும் இந்த குறைபாடு 'Goiter' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மருந்துகளால் தீர்க்க முடியாவிட்டால் இதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை.
ஹைப்போ-தைராய்டிசம் அறிகுறிகள்:
உடல் பருமன் அடைவது, முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது, சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது, பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் பிரச்னை போன்றவை ஹைப்போ-தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள்.

ஹைப்பர்-தைராய்டிசம் அறிகுறிகள்:
போதுமான அளவு பசியிருந்தும் நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல், கை - கால் நடுக்கம், திடீர் திடீரென மனநிலை மாறுவது, கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது, உறக்கத்தின்போது மூச்சு சீரற்று இருப்பது, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது, மூளை மூட்டம் உள்ளிட்டவை ஹைப்பர்-தைராய்டிசம் குறைபாட்டின்
அறிகுறிகள். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் அதைக் கண்டுபிடிக்க, அதற்கென குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் தனியாக இல்லை.
தைராய்டு குறைபாடு உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருக்கும். ஆனால் அவர்களில் பாதி பேருக்குத்தான் அப்படியொரு குறைபாடு இருப்பதே தெரியவருகிறது. ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்குமே இதற்கான அறிகுறிகள் ஒன்றாக இருந்தாலும் பெண்களுக்கே விரைவில் இந்த நோய் கண்டறியப்படுகிறது.
வழக்கமாக 80 முதல் 90 சதவீதம் தைராய்டு நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்பு குணமடைகிறார்கள். ஆனால், சிலருக்கு இது முற்றிலும் குணமாவதில்லை. தைராய்டு பிரச்னை ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் உண்டாகிறது.

T3, T4, TSH ஹார்மோன்கள் - தைராய்டு நோயுடன் என்ன தொடர்பு?
ஹைபோ தைராய்டிசம் என்றால் T3 (ட்ரை-அயோடோதைரோனைன்), T4 (தைராக்சின்) ஆகிய ஹார்மோன்கள் குறையும் என்று பொருள். அதே சமயத்தில் TSH (தைரோட்ரோபின்) ஏனும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பிற ஹார்மோன்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது என்பதால் இது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு குறைபாடு இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதைத் தடுப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. பிரச்னை உண்டான பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.
ஹைப்போ-தைராடிசம் உண்டானால் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் அதிகம் சுரக்கப்படும் என்பதால் இதயத்துடிப்பு விகிதத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் உண்டாகும்.
இதேபோல ஹைப்போ-தைராய்டிசம் சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை என்றால் சில நேரங்களில் மூளையில்கூட பிரச்னை உண்டாகும். அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு.
- ஐந்தில் நான்கு பெண்கள் கர்ப்ப காலத்தின்போது பாதிக்கப்படுகின்றனர்.
- தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் ஒரு கட்டத்தில் குமட்டல் மற்றும் வாந்தி நோயை அனுபவிப்பார்கள். இது சில பெண்களுக்கு மிக மோசமாக இருக்கும். எப்போ வரும், எப்படி வரும் என்று தெரியாது. ஆனால், கர்ப்பகாலங்களில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண்ணுக்கு வாந்தியும், அதற்கான அறிகுறிகளும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இது போன்ற அறிகுறிகள் இல்லாமல்கூட இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் எப்போதும் சோர்வாகவும், வாந்தி எடுத்துக்கொண்டும் இருப்பதை `மார்னிங் சிக்னஸ்' என்று மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர்.
ஐந்தில் நான்கு பெண்கள் கர்ப்ப காலத்தின்போது இதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் இரண்டு சதவிகிதத்தினருக்கு தொடர்ச்சியான வாந்தியால் உடல் எடை குறைந்து, உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஹைபர் எமிசிஸ் கிராவிடரம் என்ற தீவிர நிலைக்கும் உள்ளாகின்றனர்.
இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது GDF15 எனப்படும் ஹார்மோன்தான் மார்னிங் சிக்னசுக்கு காரணம் என்பதை விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஹார்மோன் அனைத்து மக்களிடமும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கரு வளரும்போது, அது அதிக அளவு GDF15ஐ உற்பத்தி செய்கிறது. இது தாயின் ரத்த ஓட்டத்துக்குச் சென்று குமட்டலைத் தூண்டுகிறது.
சில பெண்கள் மற்றவர்களைவிட மோசமான மார்னிங் சிக்னசால் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருக்கும். ஆனால், ஒரு கர்ப்பத்தில் இந்த நிலையால் பாதிக்கப்பட்டால் அடுத்த கர்ப்பத்தில் இது இருக்காது.

எப்படியென்றால், உடல் இயல்பைவிடக் குறைவான அளவு ஹீமோகுளோபினை உருவாக்கும் பீட்டா தாலசீமியா போன்ற பாதிப்புடையவர்களுக்கு இயற்கையாகவே GDF15 ஹார்மோனின் அளவு அதிகம் இருக்கும். இவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தையின் கரு உருவாக்கும் ஹார்மோனால் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், சில பெண்களுக்கு GDF15 ஹார்மோன் குறைவாக இருக்கலாம். அவர்கள் கருத்தரிக்கையில் கரு உண்டாக்கும் ஹார்மோனின் அதிக செறிவால் பாதிக்கப்படலாம்.
தாயின் வயிற்றில் வளரும் குழந்தை, தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோனுக்கு அந்தப் பெண் எவ்வளவு உணர்திறன் உடையவராக இருக்கிறாரோ, அவ்வளவு நோய்வாய்ப்படுவார்.
விஞ்ஞானிகள் சில பெண்களிடம் ஒரு ஜீன் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். குழந்தை அதே ஜீனை பெற்று இருந்தால், GDF15 மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் மார்னிங் சிக்னஸ் இருக்காது.
அதுவே தாயின் ஜீனை கரு பெறவில்லை என்றால் GDF15 ஹார்மோனுக்கு அதிக உணர்திறன் கொண்டவராக இருப்பார். இதனால் கடுமையான மார்னிங் சிக்னசுக்கு உள்ளாக நேரிடும்.
- துரித உணவுகள் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது.
- துரித உணவுகளில் அதிகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும்.
தற்போதைய வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளே பெரும் இடத்தை பிடித்துள்ளன. அலுவலக பணி செய்பவர்கள் அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்றால், அங்கு அதிகரிப்படியாக நிறைந்திருப்பவை துரித உணவுகளாகவே இருக்கிறது. இன்று மட்டும்தான் என்று நாம் தினமும் எடுக்கும் சிறிய சிறிய துரித உணவுகள் கூட உங்கள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
வீட்டில் சமைப்பதை விட கொஞ்சம் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லாருக்குமே இருக்கும். அதனால்தான் ஹோட்டலுக்கு சென்று பர்கரோ அல்லது பீட்சாவோ சாப்பிடுகிறோம்.
ஆனால், இதுபோன்ற துரித உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நம் உடல்நலத்தை மோசமாக பாதிக்கும். அதிக கலோரிகளை கொண்ட உணவையோ அல்லது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு குறைகிறது. நாளடைவில் இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome disease) வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், டயாபடீஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக ட்ரைகிளீசரைட், நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பது மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் வயிறு உப்புசம், சோர்வு, குடல் அழற்சி போன்றவை ஏற்படும்.

துரித உணவுகள் சாப்பிடுவதால் பல வழிகளில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் பல மெடபாலிக் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது கல்லீரல். துரித உணவுகளில் அதிகமாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும். இது கல்லீரலை பெரிதாக்கி குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.
இந்நோய் மோசமானால் சிரோசிஸ் தாக்கும் அபாயம் உள்ளது. துரித உணவுகளில் அதிகமாக இருக்கும் சுத்திகரிகப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைடரேட்ஸ் கல்லீரலில் அழற்சியை உண்டாக்குகிறது. மேலும் துரித உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தை தடை செய்கிறது.
- ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும்.
- மெனோபாஸ் வயது என்பது 50 தான்.
* மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹோர்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்து பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
* 50 வயதிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பொப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
* 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.

* மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹோர்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரிமெனோபாஸ் நேரத்திலும் வரும்.
* ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தவறில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
* பத்து பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிடுகிறது. இது, சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.
* அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவ ரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
* இந்த காலத்தில் கால தாமதமான திருமணம் காரணமாக நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாம் பார்த்து வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சர்க்கரை பானங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.
- நல்ல தூக்கம் எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது.
அனைத்து பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் வயது ஏற ஏற உடலில் பல வகையான மாற்றங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும். 40 களை கடக்கும் போது மெட்டபாலிச சக்திகளின் மாறுபாடு, ஹார்மோன் மாற்றங்கள் என பலவகையான மாற்றங்கள் ஏற்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் பல கண்டுபிடித்துள்ளன. இதுபோன்ற மாற்றங்கள் நமது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்றாலும், வேறு வகையில் இன்னும் பிற உடல் நல பிரச்சினைகளையும் இழுத்து விடும்.
குறிப்பாக பெண்களுக்கு, 40 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிய தாக்கத்திற்கு ஆளாகிறார்களாம். இங்கு, 40 களை கடக்கும் பெண்கள் தங்களது மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கவும் ஹெல்தியான முறையில் எடையை பராமரிக்கவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

பெண்களுக்கு வயதாகும்போது, தசைகள் இலகுவானதாக மாறி தளர்வடைய ஆரம்பிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு வழக்கமான வலிமையான பயிற்சியை அவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியமானதாகும்.
எடை தூக்குவது, பேண்டுகளை வைத்து இழுத்து ட்ரெயின் செய்வது போன்ற பயிற்சிகள், உங்கள் தசைகள் வலுவடைய உதவுகிறது. இது மெட்டபாலிச சத்துகள் அதிகமாவதற்கு உதவுவதோடு மட்டுமன்றி ஒட்டுமொத்த உடல் பலத்திற்கும், எலும்புகளை வலுவாக்குவதற்கும் கூட உதவி புரிகிறது.

தீவிர உடற்பயிற்சி:
உயர்-தீவிர இடைவெளி பயிற்சி என்பது கொழுப்பை குறைப்பதற்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் பயனுள்ள உடற்பயிற்சி முறையாக பார்க்கப்படுகிறது. தீவிர உடற்பயிற்சியின் குறுகிய கால இடைவெளிகளைத் தொடர்ந்து சிறிது ஓய்வு நேரத்தை சேர்த்துக்கொள்வது வொர்க்அவுட்டை முடித்த பின்னரும் கலோரிகளை எரிக்க உதவும். HIIT உடற்பயிற்சிகளை பல்வேறு உடற்பயிற்சி நிலைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும். 40 வயதை கடந்த பெண்களின் விருப்பமான உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்றாக உள்ளது.
நல்ல தூக்கம்:
போதுமான மற்றும் நல்ல தூக்கம் எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது. தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது அதிக உணவுகளை நாம் உட்கொள்வதற்கும் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கும் வழி வகுக்கிறது. உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்கும் செயல்முறைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்காக தினமும் 7-9 மணிநேர தடையற்ற தூக்கத்தை கடைப்பிடிப்பது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கவனமான உணவு முறை:
அனைவருக்கும் வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் இயற்கையாகவே குறைவதால், எந்த உணவை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமன்றி சாப்பிடும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உணவின் போது ஒவ்வொரு வாய் உணவையும் ருசித்து, பொறுமையாக சாப்பிட வேண்டும். மேலும், உணவு கட்டுப்பாட்டு பயிற்சியை செய்வது அதிகப்படியான உணவைத் தடுக்கும் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மெல்லிய புரதங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எடை நிர்வாகத்தை நாம் ஆதரிக்க உதவும்.
நீர்ச்சத்து:
தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். மேலும், எடையை பராமரிக்க உதவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. இது, முழுமையான உணர்வுக்கும் பங்களிக்கிறது, அதிகப்படியான உணவை உட்கொள்வதை தடுத்து, கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்க, சர்க்கரை பானங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.
- பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் மாற்றங்கள் வருவதுண்டு.
- சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.
சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் வருவதுண்டு. அந்த மனநிலை, இரண்டு, மூன்று வாரங்களுக்குத் தொடரலாம். சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.
பிரசவமாகி 2-3 வாரங்களுக்குப் பிறகும் டிப்ரெஷன் தொடர்ந்தால் அதை உளவியலில் 'பேபி ப்ளூஸ்' என்று சொல்வோம். 3-4 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால் அதை 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம். இன்னும் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே டிப்ரெஷன் ஏற்படுவதும் நடக்கும். அது பிரசவத்துக்குப் பிறகும் தொடரலாம். அதை 'பெரி பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம்.
பிரசவத்துக்குப் பிறகான 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனு'க்கு, சிசேரியன் பிரசவம் என்றால் அந்த வலி, தாய்ப்பால் கொடுப்பதில் அசௌகர்யங்கள், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் என பல விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம். அது இயல்பானதுதான். பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும்.

மற்றபடி, 3-4 வாரங்களுக்குப் பிறகும் மன அழுத்தம் நீடிப்பது, குழந்தையைப் பார்த்தாலே வெறுப்பாக இருப்பது, கணவர் அருகில் வந்தாலே பிடிக்காமல் இருப்பது, தனிமை, அழுகை, சோகம் போன்றவற்றை உணர்ந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய மனநிலையைக் கேட்டறிந்து மருந்துகள் தருவார் அல்லது உளவியல் மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுக பரிந்துரைப்பார்.
ஒருவேளை அந்த டிப்ரெஷனுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் அவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானவையாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் நீங்கள் கவலைப்படத் தேவை இருக்காது.
முக்கியமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதை வீட்டாருக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் உதவி கேளுங்கள். இப்படிச் சொன்னால் உங்களைத்தவறாக நினைப்பார்களோ, நல்ல அம்மா இல்லையோ என்பது போன்ற குற்ற உணர்வுகளில் இருந்து வெளியே வாருங்கள்.

போதுமான ஓய்வு எடுங்கள். தூக்கமின்மையால்தான் பெரும்பாலான அம்மாக்களுக்கு டிப்ரெஷன் வருகிறது. எனவே, குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வெடுங்கள். மற்ற நேரங்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டாரிடம் உதவி கேளுங்கள்.
பிரசவத்துக்கு முன்பே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதுகுறித்துப் பேசி, மன அழுத்தத்தைத் தவிர்க்க ஆலோசனை பெறுங்கள்.