என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvENG"

    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் பிரதிஷ் கிருஷ்ணாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
    • ஒரு தொடரோடு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் 27 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவிற்கு இடம் அளிக்கப்படாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. அவர் அறிமுகமான ஒரு தொடரோடு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் உண்மையாகவே பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் தென்னாப்பிரிக்க தொடரை முடித்து நாடு திரும்பிய பிரசித் கிருஷ்ணா இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக விளையாட விரும்பினார். அந்த வகையில் குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் வேளையில் அந்த போட்டியில் கர்நாடக அணிக்காக சார்பாக பிரசித் கிருஷ்ணா விளையாடினார்.

    அப்படி அவர் விளையாடிய அந்த போட்டியின் இடையே காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறிய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசைப்பிடிப்பு மட்டும் ஏற்படவில்லை அதோடு சேர்ந்து குவாட்ரைசெப்ஸ் என்கிற காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த காயம் சரியாக 6 வாரங்கள் வரை ஆகும் என்ற மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாலே அவர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    • இரண்டு அணிக்கும் ஒரே ஆடுகளம் தான் வழங்கப்படுகிறது.
    • அதற்கு பதில் இந்தியா கொடுக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வழியை தான் நாங்கள் கண்டுபிடிப்போம்.

    மும்பை:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் வரும் 25-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓல்லி போப், இந்திய ஆடுகளம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தொடர் நடைபெறும் போது வெளியிலிருந்து பல குரல்கள் வரலாம். ஆடுகளம் குறித்து பல விவாதங்கள் எழலாம். ஆனால் ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு அணிக்கும் ஒரே ஆடுகளம் தான் வழங்கப்படுகிறது.

    எனவே ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்கள் அணியை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது ஆடுகளத்தில் பொருட்கள் கொஞ்சம் வைத்திருப்போம். இதன்மூலம் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருக்கும். இதே போல் இந்தியாவும் அவர்களுக்கு ஏற்றார்போர் ஆடுகளத்தை தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

    முதல் பந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்பினாலும் நாங்கள் ஆடுகளம் குறித்து எந்த புகாரையும் கூற மாட்டோம். அதற்கு பதில் இந்தியா கொடுக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வழியை தான் நாங்கள் கண்டுபிடிப்போம். கடந்த 2021-ம் ஆண்டு தொடரில் ரோகித் சர்மாவும், ரிஷப் பண்டும் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடினார்கள்.

    ஒவ்வொரு பேட்ஸ்மேன் தொடக்கத்திலும் கடும் சவால்களை நாம் கொடுத்து நெருக்கடியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு புது பேட்ஸ்மேனுக்கும் நாம் அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இதுதான் எங்களுடைய பிளான் ஆக இருக்கிறது.

    என்று ஓல்லி போப் கூறினார்.

    • எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள்.
    • கோலி மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் வருகிற 25-ம் தேதி தொடங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலியை அவுட்டாக்க ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து வீரர் ராபின்சன் சவால் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள் அல்லவா? நீங்கள் எப்போதுமே சிறந்த வீரர்களை அவுட் செய்ய விரும்புவீர்கள். விராட் கோலி அது போன்ற ஒரு வீரர். அவர் மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் எதிரணி பவுலர்களை நம்முடைய சொந்த மண்ணில் அதிரடியாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிக்கலாம் என்று அவர் நினைப்பார்.

    இதற்கு முந்தைய தொடர்களிலும் நாங்கள் மோதியுள்ளோம். எனவே இம்முறையும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த சில வருடங்களில் எங்களுடைய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு நான் தலைவராக இருப்பேன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல் பயிற்சிகளை செய்து வருகிறேன். தற்போது நல்ல முதிர்ச்சியடைந்துள்ள நான் இத்தொடரை மற்றுமொரு சாதாரண தொடராக நினைத்து பயிற்சி எடுக்கிறேன்.

    இவ்வாறு ராபின்சன் கூறினார். 

    • ஜனவரி 25-ந்தேதியில் இருந்து மார்ச் 11-ந்தேதி வரை இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியும் (முதல் இரண்டு போட்டி), இங்கிலாந்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது. ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்து அணி எந்தவிதமான பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்க இருக்கிறது.

    2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ந்தேதியும், 3-வது போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15-ந்தேதியும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவிலும் தொடங்குகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பின் தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ஹாரி ப்ரூக் கடைசி நேரத்தில் இந்திய தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலான லாரன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற 25-ந்தேதி தொடங்குகிறது.
    • இங்கிலாந்து பயிற்சி போட்டியில் விளையாடாமல் நேரடியாக களமிறங்க இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது.

    இங்கிலாந்து அணி பிரத்யேகமாக பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை. வலைப்பயிற்சி மேற்கொண்டு நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லாம் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, இங்கிலாந்து பாஸ்பால் முறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் கையாண்டு வருகிறது.

    பாஸ்பால் என்றால் அச்சமின்றி முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான்.

    இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடி இங்கிலாந்து வீரர்களில் ஒருவர் அலைஸ்டர் குக். இந்திய மண்ணில் பாஸ்பால் ஆட்டம் இங்கிலாந்துக்கு கைக்கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து தொடர் குறித்து அலைஸ்டர் குக் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணியின் பிரச்சனை என்னவென்றால், போட்டிக்காக தயாராகுவதில் உள்ள குறைபாடுதான். பயிற்சி ஆட்டம் இல்லாமல் களம் இறங்குவது, நவீன சுற்றுப் பயணத்தின் இயல்புதான். 2012-ல் நாங்கள் இந்தியாவில் தொடரை வென்றபோது, நாங்கள் சிறந்த எதிரணிக்கு எதிராக மூன்று பயிற்சி ஆடடத்தில் விளையாடினோம்.

    யுவராஜ் சிங், ரகானே, முரளி விஜய் உள்ளிட்ட நான்கு முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியா "ஏ" அணியில் இடம் பிடித்திருந்தனர். மற்றொரு ஆட்டத்தில் புஜாரா விளையாடினார். அவர்கள் எதிர்த்து நாங்கள் விளையாடினோம்.

    வெளிநாட்டில் இருந்து வரும் அணிக்காக ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் சில பயிற்சி ஆட்டங்களில் இருந்தால் நன்றாக இருக்கும். தற்போது பெரும்பாலான தொடர்களில் உள்ளூர் அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆரோக்கியமானது என நான் நினைக்கவில்லை.

    பாஸ்பால் கிரிக்கெட்டை இந்தியாவில் செயல்படுத்த இங்கிலாந்து முயற்சிக்கும். இதில் சந்தேகமில்லை. வெற்றி பெற அவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு என நினைக்கிறேன். ஆசியக் கண்டத்தில் டெஸ்ட் போட்டிக்கான பாரம்பரிய விதிகளை பின்பற்ற தேவையில்லை.

    இவ்வாறு குக் தெரிவித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
    • தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஐதராபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அதுபற்றி அணி தேர்விலேயே நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் சிறப்பாக விளையாடினார். தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டும், இங்குள்ள சூழ்நிலையை பொறுத்தும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு மற்ற இரண்டு வீரர்களிடையே (கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல்) போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • இந்த டெஸ்ட் போட்டி எத்தனை நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது.
    • ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள்.

    இந்தியாவுக்கு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் எங்களது யுக்தி இந்தியாவில் சோதிக்கப்படும் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது:-

    இந்திய தொடர் முழுவதும் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். நான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றபோது எங்களால் முடிந்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதுவே வெற்றியையும் தேடித் தந்தது.

    எங்களது அதிரடி பேட்டிங்கை, இந்தியாவுக்கு எதிராக அதுவும் இந்திய மண்ணில் சோதிப்பதை விட ஏதேனும் சிறப்பு இருக்கிறதா என்ன? இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே இது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த டெஸ்ட் போட்டி எத்தனை நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது.

    ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆஷஸ் கிரிக்கெட் போல் இந்த தொடரும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளை எடுப்பது மற்றும் எதிரணியைவிட குறைந்தது 1 ரன்னாவது கூடுதலாக எடுப்பது வெற்றியின் சாரம்சமாகும். எங்களது யுக்தி இந்த தொடரில் பரிசோதிக்கப்படும். இதுவே எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

    இவ்வாறு மெக்கல்லம் கூறினார்.

    • இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார்.
    • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். விராட் கோலிக்கான மாற்று விரைவில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று.
    • ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பும்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எல்லா முடிவுகளிலும் ஈடுபடுவதை நான் மிகவும் விரும்பினேன். கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் செய்ய மாட்டார்கள்.

    ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

    என்று பும்ரா கூறியுள்ளார்.

    மார்ச் 2022-ல் திட்டமிடப்பட்ட எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இந்தியாவின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

    இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி, அனுபம் வாய்ந்த ஜாக் லீச் மற்றும் சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி என இரண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர்களையும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கும் ரெஹான் அஹ்மத் ஆகியோரையும் தேர்வு செய்தது.

    இதில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர். 20 வயதான சோயப் பஷீர்-க்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் நாட்டினர் மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பிற நாட்டினர் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் கடினமான விசா நடைமுறை உள்ளது. குறைந்தது ஏழு நாட்கள் கழித்தே அவர்களுக்கு விசா வழங்கப்படும்.

    இந்த நடைமுறையில்தான் இங்கிலாந்து அணி தவறு செய்து விட்டது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்தியா வர இங்கிலாந்து திட்டமிட்டு இருந்தது. அதனால் விசாவுக்கு விண்ணப்பம் செய்வதிலும் அந்த அணி தாமதம் செய்து இருக்கிறது. அதில் தான் சோயப் பஷீர் சிக்கிக் கொண்டார்.

    இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவரை பயன்படுத்தலாம் என திட்டமிட்டு இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விரக்தியில் உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் மனமுடைந்து போயிருக்கிறேன். அந்த இளம் வீரருக்கு இது விரக்தியான சூழ்நிலை" எனக் கூறி இருக்கிறார்.

    • விராட் கோலி முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணத்துக்காக விளையாடவில்லை.
    • ஹாரி புரூக் விலகியது இங்கிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    ஐதராபாத்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் டெஸ்டில் விளையாடியது. டிசம்பர் 26 முதல் ஜனவரி 4 வரை நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிவடைந்தது.

    இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் ஆஷஸ் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது.

    இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணத்துக்காக விளையாடவில்லை. இது பேட்டிங்கில் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். அவருக்கு பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்ற மாட்டார். எஸ். பரத் அல்லது புதுமுக வீரரான துருவ் ஜுரல் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார்கள். ரோகித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக ஆடுவார். சுப்மன் கில் 3-வது வரிசையில் களம் இறங்குவார்.

    சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடஜா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். வேகப்பந்து வீரர்களில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோரூட் 11,416 ரன் எடுத்துள்ளார். 30 சதமும், 60 அரை சதமும் இதில் அடங்கும். கேப்டன் பென் ஸ்க்ஸ்டோஸ், பேர்ஸ்டோவ், கிரவுலி, பெண் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். ஹாரி புரூக் விலகியது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
    • ஐதராபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் தோற்ற ரோகித் சர்மா "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். பேட்டிங்கோ, பந்து வீச்சோ  திறமை அடிப்படையில் வீரர்கள் அவர்கள் பணியை திறமையாக செய்வார்கள்" என்றார்.

    இங்கிலாந்து அணி:-

    1. ஜாக் கிராவ்லி, 2. பென் டக்கெட், 3. ஒல்லி போப், 4. ஜோ ரூட், 5. பேர்ஸ்டோவ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. பென் போக்ஸ் (வி.கீப்பர்). 8. ரேஹன் அகமது, 9. டாம் ஹார்ட்லி, 10. மார்க் வுட், 11, ஜேக் லீச்.

    இந்தியா அணி:-

    1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. ஜடேஜா, 7. பரத் (வி.கீப்பர்), 8. அஸ்வின், 9. அக்சர் பட்டேல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ்.

    ×