என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaffer Sadiq"

    • இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    • ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

    சென்னை:

    சூடோபெட்ரின் என்னும் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி டெல்லியில் கைது செய்தனர்.

    அவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்குகள் உள்பட பல முதல் தகவல் அறிக்கைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியர்கள், சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜாபர் சாதிக் பணம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை கண்காணித்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை சினிமா, ஓட்டல் தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்ததும், அரசிய லில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்காக பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    ரூ.7 லட்சம் பணத்தை அவர் ஒரு அரசியல் பிரமுகருக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என 2 தவணைகளில் கொடுத்துள்ளார்.

    மேலும் இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாபர் சாதிக்கை அரசியலில் உயர்ந்த பதவிக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்து அந்த பிரமுகர் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அதனால் அவர் ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரித்து இருக்கிறார். அவர் சினிமா தயாரிப்பாளராக மாற யார் யார் உறுதுணையாக இருந்துள்ளனர் என்கிற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

    திரையுலகில் ஜொலிக்க ஜாபர் சாதிக் பல வகைகளில் பணம் வாரி வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் ஒருவரிடம் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. மேலும் நடிகர்கள் சிலரும் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் ஜாபர் சாதிக் கலந்து கொண்டுள்ளார்.

    அடுத்த கட்டமாக போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள், செல்போன் எண் ஆகியவற்றை வைத்து எந்தெந்த வகையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முறைப்படி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கொடுத்து உள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் மூலம் பணம் வாங்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை அடுத்தடுத்த நாட்களில் இன்னும் வேகம் எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர்சாதிக் ஓட்டல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
    • ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 7 நாள் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர்சாதிக் தி.மு.க. அயலக அணியில் பணியாற்றி வந்துள்ளார். டெல்லியில் இருந்து நியூலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்புவதாக கூறி போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தி வந்துள்ளார். இதன் மூலமாக ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் அவர் பணம் சம்பாதித்து இருப்பதாகவும் வெளியான தகவலையடுத்து அது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போதைப் பொருட்களை கடத்தி சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் ஜாபர் சாதிக் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார் என்பதை பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சொத்துக்களின் பின்னணி பற்றிய முழுமையான விசாரணையில் இறங்கியுள்ளனர். இதன் முடிவில் ஜாபர்சாதிக்கின் சொத்துக்கள் அனைத்தும் விரைவில் முடக்கப்படுகிறது.

    ஜாபர்சாதிக் ஓட்டல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. அது தொடர்பான விவரங்களையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் திரட்டியுள்ளனர்.

    இதனை வைத்து ஜாபர் சாதிக்கின் சட்டவிரோத பண பரிமாற்றங்கள் பற்றிய பட்டியலும் தயாராகி வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு ஜாபர் சாதிக் பணத்தை வாரி இறைத்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தையே அவர் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் வாரி வழங்கியுள்ளார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிடம் பணம் வாங்கிய பிரபலங்களின் பட்டியலும் தயாராகி வருகிறது.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கின் சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் விரைவில் சோதனை நடத்தப்பட உள்ளது.

    • ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
    • ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர்.

    சென்னை :

    டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் அவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன், சலீம் ஆகியோருக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    சென்னை:

    சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட, தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், டெல்லியில், கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில், சென்னை மண்டல துணை செயலாளராக இருந்தார்.

    மற்றொரு சகோதரர் மைதீன், டைரக்டர் அமீர் இயக்கத்தில், ஜாபர் சாதிக் தயாரித்து வரும், `இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தில் நடித்து வந்தார். இவர்கள் 3 பேரும், சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் மிகவும் பக்கபலமாக இருந்து உள்ளனர். தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு, நேற்று `லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் களமிறக்கும் ஏஜெண்டாகவும், முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தியபோது சதா என்கிற சதானந்தம் என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தனக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதற்காக அவர்கள் சென்னை வந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தேடியபோது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது சதா சென்னையில் பதுங்கி இருந்த இடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

    சதாவின் சொந்த ஊர் திருச்சி ஆகும். அவர் போதைப்பொருள் கடத்துவதற்காக சென்னையில் தங்கி இருந்தார். ஜாபர்சாதிக் போதைப்பொருள் கடத்துவதற்கு, சென்னையில் இவர்தான் மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிகிறது. தைப்பொருட்களை மிக்சிங் செய்வது, உணவு பொருட்களுடன் கலப்பது, பேக்கிங் செய்வது ஆகிய வேலைகளையும் சதா தான் செய்து வந்துள்ளார்.

    சென்னையில் இருந்தபடியே இந்த பணிகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்துவதற்காக சென்னையில் குடோன் ஒன்றை வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து சதாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சதாவிடம் விசாரணை மேற்கொண்டால் இதில் தொடர்புடைவர்கள் பற்றிய மேலும் தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கை சதாவையும் சேர்த்து இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களின் பெயர்களை தெரிவித்து வருவதால், அதன் அடிப்படையில் இனிவரும் நாட்களில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் முதலமைச்சரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
    • போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

    ஜாபர் சாதிக்குடன் சினிமா, அரசியல் வட்டாரத்தில் பலர் நெருக்கமாக இருந்திருப்பதாக கூறியிருக்கும் அவர்கள் அதில் தொடர்புடைய நபர்களையும் விசாரணைக்காக அழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது இருவரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

    சென்னையில் கடந்த 8-ந்தேதி பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருட்களை தடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறி விட்டார் என்றும் எனவே அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.


    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் முதலமைச்சரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.

    போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீதும் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் தேவராஜன் சென்னை மாநகர குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இருவரும் பேசியுள்ளனர். எனவே அவர்கள் மீது கிரிமினல் மற்றும் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • குடோன் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குடோனில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லியில் கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு போதை பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியாக செயல்பட்ட சதா என்கிற சதானந்தம் என்பவரை அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர். அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அவரை இன்று அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் அவருக்கு சொந்தமான போதைப்பொருள் குடோன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குடோன் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்தும் போதைப்பொருட்கள் பொட்டலம் போடப்பட்டு கடத்தப்பட்டு உள்ளன.

    இதையடுத்து மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான போதைப்பொருள் குடோனுக்கு சென்றனர். அங்கு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். இங்கிருந்து எந்தெந்த வழிகளில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டது? அதற்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குடோனில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் மூலம் குடோனில் பணி புரிந்தவர்களையும், ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுப ட்டவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • 2013ம் ஆண்டே சதா சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என தகவல்.
    • போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியது விசாரணையில் அம்பலம்.

    ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தியபோது சதா என்கிற சதானந்தம் என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தனக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதற்காக அவர்கள் சென்னை வந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தேடியபோது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது சதா சென்னையில் பதுங்கி இருந்த இடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

    இதில், 2018ம் ஆண்டு ரூ.25 கோடி மதிப்பிலான போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    மேலும், 2013ம் ஆண்டே சதா சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரூ.25 கோடி மதிப்பிலான சூடோபெட்ரின் போதைப் பொருள் 2018ல் மலேசியாவிற்கு கடத்தப்பட்டது குறித்து சதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2019ம் ஆண்டு ரூ.1.3 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • செல்போன்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஜாபர் சாதிக் யார்-யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஜாபர் சாதிக்கின் காவல் முடிவடைந்ததும் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    சென்னை:

    தி.மு.க. அயலக அணியில் பொறுப்பு வகித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை முதலில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணை முடிந்து நேற்று ஜாபர் சாதிக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி கிடைத்தது.

    ஜாபர் சாதிக்கின் இமெயிலில் உள்ள விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறிய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கேட்டிருந்தனர்.

    இதன்படி ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 7 செல்போன்களை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அந்த செல்போன்களில் இருந்து இ-மெயில் மூலமாக ஜாபர் சாதிக் பல்வேறு தகவல்களை வெளிநபர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

    அதுதொடர்பான தகவல்களை செல்போன்களில் இருந்து அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். இதன் மூலமாக ஜாபர் சாதிக்குடன் போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்புள்ளது என்பதை கண்டறிய டெல்லி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    செல்போன்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஜாபர் சாதிக் யார்-யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், அரசி யல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் இந்த செல்போன் தகவல்கள் சேகரிப்பு போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதனால் ஜாபர் சாதிக்கின் காவல் முடிவடைந்ததும் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    • அதிமுக தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.
    • அ.தி.மு.க. நடத்திவரும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைத்த தோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது ஆச்சரியத்தையும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சுமார் 2000 பேர் கைதாகாமல் தப்பியது எப்படி என்று சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, இதுவரை மவுன சாமியார் வேடமிடும் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை.

    தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய இந்த தி.மு.க. அரசைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள், அறிக்கைகள் என்று அ.தி.மு.க. தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.


    மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நூற்றுக்கணக்கான கிலோ கணக்கில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தபின் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தானும் நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த தி.மு.க. அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    அ.தி.மு.க. நடத்திவரும் 'போதைப் பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ் நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத தி.மு.க.-விற்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    • அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.

    கடந்த 9-ந் தேதி அன்று ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முதலில் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் 3 நாட்கள் மீண்டும் காவலில் எடுத்தனர். இந்த காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையின்போது ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கோடி கோடியாக கொட்டிய பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இது தவிர பரபரப்பான மேலும் பல புதிய தகவல்களும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

    டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலையில் விமானத்தில் அழைத்து வந்தனர்.

    பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்திய பணத்தை வைத்து 3 தமிழ்ப்படங்களை தயாரித்து வந்திருப்பது உறுதியாகி உள்ளது. இது தவிர ஓட்டல் மற்றும் கட்டுமான தொழிலிலும் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு ஜாபர் சாதிக் வாரி வழங்கி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    டெல்லியில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாக தனது சினிமா மற்றும் அரசியல் நண்பர்களிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

    இதை உண்மை என்று நம்பியே சினிமா பிரபலங்கள் பலர் அவருடன் நெருக்கம் காட்டி இருக்கிறார்கள். இருப்பினும் போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் யார்-யாரிடமெல்லாம் பங்கு போட்டுள்ளார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையின்போது போதைப்பொருள் கடத்தலில் அவர் யார்- யாருடன் தொடர்பில் இருந்தார்? என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதற்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளனர்.

    இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 4-வதாக ஜாபர் சாதிக் பிடிபட்டார். அதை தொடர்ந்து அவரது நெருங்கிய கூட்டாளியான சதா சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருட்களை சென்னையில் இருந்து பார்சல் செய்து அனுப்புவதில் சதா முக்கிய பங்காற்றி உள்ளார். இதன் மூலம் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் தம்பிகள் 2 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
    • போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    டெல்லியில் 3 தமிழர்கள் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து ஏப்ரல் 2-ந்தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜராகியுள்ளார்.

    • ஓட்டல் ஒன்றையும் இருவரும் கூட்டாக தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.
    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதாக ஏமாற்றி ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்படி போதைப்பொருள் கடத்தலில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஜாபர் சாதிக் சுருட்டி இருப்பது பற்றி தெரிய வந்ததால் இதன் பின்னணி பற்றி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அவரோடு சேர்ந்து 'இறைவன் மிகப்பெரியவன்' என்கிற திரைப்படம் ஒன்றையும் தயாரித்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர் சாதிக்கும் இயக்குனராக அமீரும் இருந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓட்டல் ஒன்றையும் இருவரும் கூட்டாக தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதனால் இயக்குனர் அமீருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் எந்த மாதிரியான தொடர்புகள் இருந்தன? என்பது பற்றி இயக்குனர் அமீரிடம் டெல்லியில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்காக சம்மன் அனுப்பி இயக்குனர் அமீரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் வரவழைத்திருந்தனர். டெல்லியில் உள்ள போதைப்பொருள் அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் அமீர் சென்று இருந்தார்.

    ஆனால் அதிகாரிகள் அவரை 11.30 மணி அளவிலேயே விசாரணைக்காக அழைத்தனர். இதன் பின்னர் அமீரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். இரவு 10.20 மணிக்கு அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.

    இதன் மூலம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர்.

    ஜாபர் சாதிக்குடன் ஏற்பட்டிருந்த பழக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் அமீர், சினிமா வட்டாரத்தில் மற்றவர்களுடன் பழகியது போலவே ஜாபர் சாதிக்குடன் பழகி வந்ததாகவும், போதைப்பொருள் கடத்தலில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது பற்றிய ஆலோசனையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இயக்குனர் அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, அமீர் மீது கைது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அமீர் சென்னை திரும்பியுள்ளார்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சினிமா மற்றும் அரசியலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ள அதிகாரிகள், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

    ×