என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kachchatheevu"

    • தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது.
    • தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் ஒரு வார்த்தைக்கூட பிரதமர் மோடி பேசவில்லை என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு பற்றி ஒரு வார்த்தை கூட இலங்கை அதிபரிடம் பேசவில்லை.

    இது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிக முக்கிய தேவையான கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதை அலட்சியம் செய்துள்ள பிரதமர் மோடி, இந்த முக்கிய பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் எதுவும் பேசாமல் திரும்பியுள்ளார்.

    இலங்கை பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளான பின், இந்தியாவின் நிதி உதவிகள், இதர உதவிகளை நம்பியுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் நலன்கள் மற்றும் கச்ச தீவு மீட்பு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகின.

    ஆனால் மோடி அரசு இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள இன்று வரை மறுத்து வருகிறது. இது தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது.

    தமிழகம் இருக்கும் இடத்தில் குஜராத்தும், குஜராத்திகளும் இருந்து, குஜராத் மீனவர்கள் இதே போல பாதிக்கப்பட்டிருந்தால், மோடி இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுகிறது.

    இன்று ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார்.

    புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது ஆகியவற்றை மறைத்து விட்டு, தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

    பண வீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது இயல்பு.

    ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) அடிப்படையில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு விகிதம், மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழத்திற்கு அளிக்கப்படும் விகிதம் போன்ற விகிதங்களை ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.

    புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூபாய் ரூ.36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார்.

    ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் ரூ.226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2028 கோடி செலவு செய்திருக்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.2159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

    இந்த உண்மைகளை பிரமர் மோடி ஏன் பேசவில்லை ? இந்த ஏமாற்று வேலைகள், பொய்கள், துரோகங்களுக்காக பாஜகவிற்கும், மோடிக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்'.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் கடிதம்.
    • தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும்.

    கச்சத்தீவை மீட்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் மீட்டுக் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு தொடர்பாக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அவர்," தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.
    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.

    இதை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.

    அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.

    பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்.

    மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்றப்பட்ட தகவலை அண்ணாமலை வெளியிட்டார்.
    • பிரதமர் மோடியும் காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார். இதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில ஒருவரான ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

    1974-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?

    கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.

    மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது

    சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு.

    இவ்வாறு ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

    • 2014 முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?
    • தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?

    கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து கச்சத்தீவு விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர். கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார். கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பழிக்கு பழி என்பது பழைய ஆயுதம். ட்வீட்டுக்கு ட்வீட் என்பது புதிய ஆயுதம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27-1-2015 தேதியிட்ட RTI பதிலைப் பார்க்கவும். அப்போது ஜெய்சங்கர்வெளியுறவுத்துறை செயலராக இருந்தார் என்று நான் நம்புகிறேன். அந்த பதிலில் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக்கொண்டது.

    இந்நிலையில், வெளிவிவகாரதுறை அமைச்சரும், அவரது அமைச்சகமும் ஏன் இப்போது மாற்றி பேசுகிறார்கள்? ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாக ஜெய்ஷங்கர் பேசிவருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், "கடந்த 50 ஆண்டுகளில் தமிழக மீனவர்களை இலங்கையே கைது செய்துள்ளது உண்மைதான். அதேபோன்று பல இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்துள்ளது.

    இந்தியாவை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது மீனவர்களை விடுவித்துள்ளன. ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தபோதும், வெளியுறவுச் செயலராக இருந்தபோதும், வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் இதுதான் நடந்துள்ளது.

    ஜெய்சங்கர் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் எதிராக ஏன் பேசுகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?

    2014 முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
    • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது.

    கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.

    11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது.தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    இதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? நமது நாட்டிற்குள் ஊடுருவி நமது ஊர்களுக்கு சீனப் பெயர்கள் சூட்டிவரும் சீனாவை கண்டு தொடை நடுங்கும் முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்கவா துடிக்கிறது? என்று பதிவிட்டுள்ளார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது
    • கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை

    காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து இந்திய அரசியலில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளது.

    1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றும் கச்சத்தீவை திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை என்றும் தெரிவித்தார்.

    ஒருவேளை கச்சத்தீவு தொடர்பாக இந்தியா கோரிக்கை விடுத்தால் இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும் என்றும் இலங்கையை பொருத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

    ×