என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalaignar Library"

    • 2-ம் தளத்தில்-கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்.
    • 5-ம் தளத்தில்-அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி.

    சென்னை:

    காவிரிக் கரையில் அமைந்த திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக்களஞ்சியமாக அமைந்திடும் என்றும் முதலமைச்சர் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

    அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

    இந்நூலகத்தின் தரைத் தளத்தில் வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்; முதல் தளத்தில்-அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி.

    2-ம் தளத்தில்-கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்.

    3-ம் தளத்தில் தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம்-படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.

    4-ம் தளத்தில்-ரோ பாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.

    5-ம் தளத்தில்-அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி.

    6-ம் தளத்தில் நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம்.

    7-ம் தளத்தில்-காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம். தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

    மேலும், நகரும் படிகட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

    இந்நூலகத்தில், உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் திராவிட தலைவர்களின் நூல்கள், பெண்ணியம், தேசிய இயக்கத் தலைவர் நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம், பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், பொதுப்பணித்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், பொது நூலக இயக்குநர் முனைவர் பொ.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி காணொலிக் காட்சி வாயிலாக கலெக்டர் எம்.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    மதுரை:

    மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

    உலகில் உள்ள பெரிய நூலகங்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி (அதாவது இ்ன்று) திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச்செல்லும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதன்பின் போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளன.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல். நிறுவன தலைவர் ரோஷிணி நாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன் நன்றி கூறுகிறார். விழாவில் 3 ஆயிரத்து 500 கல்லூரி மாணவர்களும், 6 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சுற்றுலா செல்வது போல் குடும்பம், குடும்பமாக நூலகத்திற்கு வரத்தொடங்கினர்.
    • முன்னதாக நூலகத்தை பார்வையிட வருகை தரும் வாசகர்களை கவரும் வகையில் இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர்.

    மதுரை:

    மதுரையில் புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரையில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரை குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக் கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கலைஞரே சிலை வடிவமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மதுரையில் பொழுது போக்கு இடங்கள் என ஏராளம் இருந்தபோதிலும், விடுமுறை தினமான இன்று அதிக கூட்டம் திரண்டது கலைஞர் நூலகத்திற்குத் தான். சுற்றுலா செல்வது போல் குடும்பம், குடும்பமாக நூலகத்திற்கு வரத்தொடங்கினர். ஆறு தளங்களை கொண்ட நூலகத்தை பொது மக்கள், மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு வருகின்றனர்

    முன்னதாக நூலகத்தை பார்வையிட வருகை தரும் வாசகர்களை கவரும் வகையில் இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர். "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்ற வாசகம் வரவேற்பு அறையில் பொறிக்கப்பட் டுள்ளது. தரைத்தளத்தில் உள்ள கலைக்கூடத்தில் மதுரையில் பண்டைய கால வரலாற்றை நினைவுபடுத் தும் வகையில் திருமலை நாயக்கர் மஹால், விளக்குத் தூண், மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு நுழைவு வாயில், வைகை ஆற்றின் தரைப்பாலம், யானைமலை, அமெரிக்கன் கல்லூரி, காந்தி மியூசியம், 1930 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கழுகுப் பார்வை படம், தெப்பக்குளம், யானைக்கல், மதுரை தினசரி சந்தை, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, புலியாட்டம், உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டைய கால கல்வெட்டுக்கள் தமிழ் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி, பொருநை அகழ்வாராய்ச்சிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தனிப்பரிவு செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நூல்களை பார்வையிட வசதியாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளது.

    முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவு உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள் ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டுள் ளது. தற்போது பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. புத்தகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட பின்னர் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவர்.

    நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. தினசரி, வார, மாத, நாளிதழ்கள் கட்சிக்கு வைக்கப்பட்டுளது. முதல் தளத்தில் கலைஞர் பிரிவு செயல்படுகிறது. இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவும் செயல்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக் கான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நூலகத்தை பார்வையிட வந்த பார்வையாளர் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை சென்னை அண்ணா நூலகத்திற்கு அடுத்தபடியாக மதுரையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மாநகராட்சி வளாகம் மற்றும் காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளியில் அமர்ந்து படித்து வந்தனர்.

    தற்போது கலைஞர் நூலகத்தில் அமைதியான சூழ்நிலையையும், தோட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் கலைஞர் நூலகத்தை பயன்படுத்தி ஏராளமானோர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பதவிகளில் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    நூலகத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் கூறுகையில், எத்தனையோ பழமையான நூலகங்களுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு பிரமாண்டமான நூலகத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை. இது ஒரு நூலகம் போல் தெரிவதைவிட, ஒரு சர்வதேச அரங்கிற்குள் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    தொலைக்காட்சிகளிலும், சினிமாக்களிலும் மட்டுமே பார்த்து வியந்த ஒரு கல்வி களஞ்சியமாக திகழும் நூலகத்தில் எங்கள் காலத்தில் நேரில் பார்த்து, பயன் அடைந்தது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றார்.

    காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் திறந்து இருக்கும். பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை தினங்களில் நூலகம் செயல் படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவுக்களஞ்சியமாக திகழும் இந்த நூலகம் வருங்காலத்தில் நிச்சயம் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

    • திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
    • மொத்தம் 7 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது.

    சென்னை:

    திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து நூலகம் அமைவதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை செய்ய தொடங்கியது. இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நூலுகம் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது.

    இந்த நிலையில், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 'காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்' என அறிவித்திருந்தார்.

    அதனை செயல்படுத்தும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு முதலமைச்சர் அரசாணையின் மூலம் வழங்கியுள்ளார்.

    திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார். 



    ×