search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram Corporation"

    • மாநகராட்சி மேயருக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
    • மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க. பெண் மேயர் மகாலட்சுமி இருந்து வருகிறார். மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் தி.மு.க.வுக்கு 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு 8 கவுன்சிலர்களும், காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு கவுன்சிலர்களும், 6 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.

    மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 33 கவுன்சிலர்கள் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதன்படி 19 தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர் குமரகுரு நாதன் (காங்கிரஸ்) மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர்.

    மாநகராட்சி உறுப்பினர்களின் இந்த கோரிக்கையை ஏற்று கமிஷனர் செந்தில் முருகன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது அளிக்கப் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்காக நாளை (29-ந் தேதி) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாநகராட்சி உறுப்பினர்களுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.


    இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 19 பேர் நேற்று மாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு ஊட்டிக்கு இன்ப சுற்றுலா சென்றனர். மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் இவர்கள் சுற்றுலா புறப்பட்டு சென்றிருப்பதால் நாளை நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறுமா? மேயர் மகாலட்சுமியின் பதவி தப்புமா? என்கிற கேள்விகள் எழுந்து பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொத்தம் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் 33 பேரில் மேயரை தவிர்த்து 32 பேர் மாநகராட்சி கவுன்சிலர்களாக செயல்பட்டு வரும் நிலையில், இவர்களில் 13 பேர் மேயருக்கு ஆதரவாகவே உள்ளனர்.

    மீதமுள்ள 19 பேரும் மேயருக்கு எதிரான மன நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர மனு அளித்துவிட்டு தற்போது ஊட்டிக்கு இன்ப சுற்றுலா சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுற்றுலா சென்றுள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரை தொடர்பு கொண்டு கேட்ட போது, நாளைய கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எதையும் தெரிவிக்க முடியாது என்றனர்.

    சில கவுன்சிலர்களோ, நாளைய கூட்டத்தில் பங்கேற்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் குழப்பமான சூழலே நிலவி வருகிறது.

    மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் மாநகராட்சி விதிகளின்படி 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஓட்டு போட வேண்டும். இதன்படி மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் கூட்டத்துக்கு வந்து தீர்மானத்தின் மீது ஓட்டு போட வேண்டும்.

    அதே நேரத்தில் நம்பிக்கை தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு 5-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டோர் ஓட்டு போட வேண்டும். இதன்படி பார்த்தால் 10-க்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்தால் மேயர் பதவி தப்பும். தற்போது மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேயருக்கு எதிராக அணி திரண்டுள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களோடு எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் அணி திரண்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் நாளை நடைபெறுமா? என்கிற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.

    ×