என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KULITHALAI"

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
    • இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பில்லா பாளையம் முனவாசிப்பட்டி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு மதுபான கடை ஊழியர்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு கடையினை பூட்டி சென்றனர்.

    நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் கடப்பாரையால் துளையிட்டு உள்ளே புகுந்தனர். அங்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 150-க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ. 6030 பணத்தினை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை மதுபான கடைக்கு அரசு குடோனில் இருந்து மது பாட்டில்கள்கள் இறக்க வந்துள்ளனர். அப்போது கடை ஊழியர்கள் கடையை திறந்த போது மதுபான பாட்டில்கள் இல்லாமல் இருப்பதை பார்த்தும், பின் பக்க சுவற்றில் துளையிட்டதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மது பாட்டில்களையும் பணத்தினை திருடி சென்ற மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் மற்றும் மோப்ப நாயிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

    கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

    கடந்த 45 நாட்களுக்கு முன்பு இதேபோல் மேலதாளியாம்பட்டி டாஸ்மாக் கடையில் சுவரைத் துளையிட முயன்று முடியாததால் பூட்டை உடைத்து நீண்ட வாளை(பட்டாகத்தி) கடையில் உள்ளே போட்டுவிட்டு மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
    • போதிய உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாததால்

    கரூர்

    குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் நியமனக்குழு, வேளாண்மை உற்பத்திக்குழு, கல்விக்குழு, பொதுநோக்கக்குழு அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் வாசித்து முடிந்த பிறகு எழுந்த தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை ஒத்தி வைக்கும்படி கூறிவிட்டு வெளியேறினர்.

    பின்னர் வெளியே வந்த தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறுகையில், தற்பொழுது ஒன்றியக்குழுவில் தி.மு.க. உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர். தலைவர், துணைத்தலைவர், ஒரு ஒன்றிய குழு உறுப்பினர் என அ.தி.மு.க.வில் 3 பேர் மட்டுமே உள்ளனர். அ.தி.மு.க.வை காட்டிலும் தி.மு.க. உறுப்பினர்கள் அதிக பெரும்பான்மையில் உள்ளோம்.

    அப்படி இருக்கும் சமயத்தில் தற்போது ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் கூறப்படும் நியமனக்குழு உள்ளிட்ட குழுக்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் வருவதை ஏற்க முடியாது. எனவே கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்று கூறிய வெளியேறியதாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில் போதிய உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாத காரணத்தினால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக ஒன்றிய குழு தலைவர் விஜயவிநாயகம் அறிவித்தார்.

    கடந்த மாதம் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் 7 தி.மு.க. உறுப்பினர்களும் கலந்து கொள்ளாத காரணத்தினால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது."

    • குளித்தலை பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது
    • வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்

    கரூர்:

    குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. ஆங்காங்கே காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் நேற்று முதல் குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்படுவதால், காலையில் வேலைக்குச் செல்லும் விவசாய கூலித் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை தெரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்கை ஒளிர விட்டு வாகனத்தில் செல்கின்றனர். தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்தால் பூக்கள், காய்கறிகள் கருகும் அபாயம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    குளித்தலை அருகே 6-ம்வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை கொட்டாம் பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 21). இவர் தோகைமலை பகுதியை சேர்ந்த 10 வயதான 6-ம்வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

    இதனை அச்சிறுமி அழுதுகொண்டு பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தோகைமலை போலீசில் புகார் செய்தனர். 

    அதன்பேரில் போலீசார் மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×