என் மலர்
நீங்கள் தேடியது "Mini India"
- பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார்.
- இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
குவைத்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்நிலையில், குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு 4 மணி நேரங்களே ஆகும். ஆனால், இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருவதற்கு 4 தசாப்தம் ஆகி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளீர்கள். இங்கு அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மினி இந்தியா கூடியுள்ளது போல் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இங்கு வருகின்றனர். இந்திய வம்சாவளி டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், குவைத் மருத்துவ உள்கட்டமைப்பின் பெரிய பலமாக உள்ளனர். இந்நாட்டின் எதிர்கால தலைமுறையை கட்டமைப்பதில் இந்திய ஆசிரியர்கள் உதவுகின்றனர்.
குவைத் தலைவர்களிடம் பேசுகையில், அவர்கள் இந்திய சமூகத்தினரைப் புகழ்கின்றனர். உங்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் திறன் ஆகியவற்றை பார்த்து குவைத் குடிமக்கள் உங்கள்மீது பெரிய மரியாதை வைத்துள்ளனர்.
வர்த்தகம் மற்றும் புதுமைகள் மூலம் ஊக்கத்தைத் தூண்டும் பொருளாதாரத்தை விரும்புகிறது. இந்தியாவும் புதுமையிலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. புதிய குவைத்திற்கு தேவையான திறன், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மனித வளம் இந்தியாவிடம் உள்ளது என தெரிவித்தார்.
