என் மலர்
நீங்கள் தேடியது "Nikki Haley"
- கடந்த முறை ஜோ பைடனிடம் தோல்வியடைந்த டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்
- நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக அறிவித்ததும், அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக முன்னாள் மாகாண கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியுமான நிக்கி ஹாலே (வயது 51) இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்க உள்ளதாக கூறி உள்ளார்.
'குடியரசு கட்சியினர் கடந்த 8 அதிபர் தேர்தல்களில் 7-ல் மக்கள் வாக்குகளை இழந்துள்ளனர். இது மாற்றப்பட வேண்டும். ஜோ பைடனின் சாதனை படுமோசமானது. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எனவே வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நமது நாட்டை, வலுப்படுத்தவும் புதிய தலைமுறை தலைமையேற்கும் நேரம் இது' என்றும் நிக்கி ஹாலே கூறி உள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 76) ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் கடந்த முறை அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆதரவு திரட்டி வருகிறார். தற்போது நிக்கி ஹாலேவும் அறிவித்துள்ளதால், குடியரசு கட்சியின் வேட்பாளர் யார்? என்பதில் இவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி உள்ளது.
குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிபர் தேர்தலில் நுழைவதற்கு முன், அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் நிக்கி ஹாலே வெற்றி பெற வேண்டும். அதன்பிறகே அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.
- அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியில் உள்ளார் நிக்கி ஹாலே.
- சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என நிக்கி ஹாலே தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே அறிவித்து விட்டார். டிரம்பிற்கு போட்டியாக களமிறங்கப் போவதாக அதே கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் அறிவித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம். அமெரிக்கா சீனாவுக்கான உதவியை நிறுத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, இதுதொடர்பாக நிக்கி ஹாலே அளித்த பேட்டியில் கூறியதாவது:
எந்த ஒரு வலுவான அமெரிக்கரும், தன் பணம் மோசமான நபர்களுக்குச் சென்றடைவதை விரும்ப மாட்டார்கள். இந்த வகையில், நான் அதிபராக தேர்வானால், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி கிடைப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவேன்.
கடந்தாண்டு மட்டும், 3.81 லட்சம் கோடி ரூபாயை பல நாடுகளுக்கு உதவியாக அமெரிக்கா அளித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவோருக்கு தங்களுடைய வரிப்பணம் செல்கிறது என்பது வரி செலுத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
- டிக்டாக் செயலியில் இணைந்து விட்டதாக விவேக் செப்டம்பரில் கூறியிருந்தார்
- அவரது மகளே இதை பயன்படுத்துகிறார் என விவேக் பதில் கூறினார்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் இறங்குவார்கள். தற்போது அங்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார்.
வரவிருக்கும் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் எவரை முன்னிறுத்துவது என அக்கட்சியினர் முடிவு செய்ய, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பங்கு பெறும் பல விவாத நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம். அவற்றில் பங்கு பெறும் ஓவ்வொருவரும் அமெரிக்காவின் முன் உள்ள சவால்களையும், அதனை எதிர்கொள்ள அவர்கள் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குவார்கள். இந்த விவாதத்திற்கு பிறகு கட்சியில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும். அதன் பின் ஒருமனதாக ஜனநாயக கட்சிக்கு எதிராக அந்த வேட்பாளர் களம் நிறுத்தப்படுவார்.
தற்போதைய நிலவரப்படி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுவரை குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பங்கு பெறும் விவாத நிகழ்ச்சிகள் 2 நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாவதாக அமெரிக்காவின் மியாமி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சந்திப்பு நேற்று நடந்தது.
இதில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி, ரான் டிசான்டிஸ், கிரிஸ் கிரிஸ்டீ, டிம் ஸ்காட் ஆகிய வேட்பாளர்கள் பங்கு பெற்றனர்.
விவேக் ராமசாமி, கடந்த செப்டம்பர் மாதம், சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) உருவாக்கிய பிரபல டிக்டாக் (TikTok) எனும் செயலியை பயன்படுத்த அதில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், இதன் மூலம் இள வயது வாக்காளர்களுக்கு தனது கருத்துக்கள் எளிதாக சென்றடையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், சீன மென்பொருள் செயலிகளில் உள்ள பயனர் தகவல்களை சீனா களவாடி, தவறாக பயன்படுத்துவதாக ஒரு பிரச்சாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இச்செயலியை தடை செய்யவும் அங்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், விவேக் இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறித்து நிக்கி ஹேலி விமர்சித்திருந்தார்.
நேற்றைய சந்திப்பில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.
அப்போது பதிலளித்த விவேக், "நான் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை கடந்த விவாதத்தின் போது நிக்கி கேலி செய்தார். ஆனால், அவரது மகளே அந்த செயலியை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவது உண்மை. எனவே நிக்கி அவர்களே, முதலில் குடும்பத்தை சரி செய்ய பாருங்கள்" என கூறினார்.
அப்போது இடைமறித்த நிக்கி, "என் மகளை விவாதத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் ஒரு கழிவு" என கடுமையாக கூறினார்.
இதனை கேட்ட பார்வையாளர்கள் கை தட்டி இக்கருத்தை வரவேற்றனர்.
அதற்கு மீண்டும் பதிலளித்த விவேக், "அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதனையே நான் குறிப்பிட்டேன்" என பதிலளித்தார்.
மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் விவாதங்கள் மேடை நாகரிகத்திற்கு ஏற்ப கண்ணியமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்கும் சமீப காலமாக தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வைப்பதும், ஒருவரையொருவர் கடும் சொற்களால் தாக்கி கொள்வதும் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
- இரு கட்சி ஜனநாயக முறையை கடைபிடித்து வரும் நாடு, அமெரிக்கா
- 'இப்போது வேண்டாம் டிம்' என மக்கள் கூறுவதாக டிம் தெரிவித்தார்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே அதிபர்களாக மாறி மாறி பதவி வகிப்பது வழக்கம்.
தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
அந்நாட்டு வழக்கப்படி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியின் சார்பில் களமிறங்க விரும்புபவர்கள், நாட்டின் பல இடங்களில் அக்கட்சியின் சார்பாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதனை கையாள தங்கள் முன்வசம் உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து அவர்கள் விளக்க வேண்டும். அது குறித்து வரும் கேள்விகளையும் திறமையாக கையாண்டு சிறப்பான முறையில் பதிலளிக்க வேண்டும். இதற்கு பிறகே யாரை கட்சிகள் அதிபராக களம் இறக்க போகின்றன என்பது தெரிய வரும்.
குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருந்தாலும், அவர் மீது அந்நாட்டின் பல மாநிலங்களில் கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுவதால், அந்த வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.
டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலையில் உள்ளார்.
இவர்களை தவிர, இப்போட்டியில் பங்கு பெற்று பிரச்சாரம் செய்து வந்தவர்களில் ஒருவர், அமெரிக்க செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott). தொடக்கத்தில் பல இடங்களில் அவருக்கு இருந்து வந்த ஆதரவு, நாட்கள் செல்ல செல்ல குறைய ஆரம்பித்தது.
டிம் தற்போது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மற்றொரு குடியரசு கட்சி போட்டியாளரான நிக்கி அதே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"பூமியிலேயே அற்புதமான மனிதர்களான வாக்காளர்கள் என்னிடம் 'இப்போது வேண்டாம் டிம்' என கூறுவதாக தெரிகிறது" என தனது முடிவு குறித்து டிம் தெரிவித்தார்.
மே மாதம் முதல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த டிம், "டொனால்ட் டிரம்ப்பை விட தான் எந்த வகையில் சிறப்பானவர்" என்பதை விவாதங்களில் விளக்க தவறியதால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், டிம் ஸ்காட்டை இதுவரை ஆதரித்து பிரச்சாரங்களுக்கு நிதியுதவி செய்து வந்த தொழில் நிறுவனங்கள் மற்றொரு போட்டியாளாரான நிக்கிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- மீண்டும் அதிபராக விரும்பி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்
- மன்னிப்பதுதான் நாட்டு நலனுக்கு உகந்த முடிவு என்றார் நிக்கி ஹாலே
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெற உள்ளது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் ஜியார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
2020ல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான போது அவற்றை மாற்ற முயற்சித்தது, ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது, ஆபாச பட நடிகை ஒருவருக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கியது உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், ஒரு பேட்டியில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல். 80 வயது மனிதரை சிறையில் வைத்து அதன் மூலம் நாட்டை பிளவடைய விட மாட்டேன். அவரை மன்னிப்பதன் மூலம் அவரை குறித்த பேச்சுக்களையே தொடராமல் செய்து விடுவேன்" என கருத்து தெரிவித்தார்.
நிக்கியின் இந்த கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
சில தினங்களுக்கு முன் இதே கருத்தை மற்றொரு போட்டியாளரான விவேக் ராமசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நான்சி பெலோசி பெயருக்கு பதில் நிக்கி ஹாலே பெயரை டிரம்ப் பயன்படுத்தினார்
- அதிபர் பதவி கடும் மன அழுத்தங்களை தர கூடியது என்றார் ஹாலே
இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களம் இறங்கி வாக்குகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் மீது சில மாநிலங்களில் வழக்கு விசாரணை நடைபெறுவதால், அவர் அதிபர் ஆவதில் சிக்கல்கள் எழலாம் என நம்பப்படுகிறது.
எனவே, குடியரசு கட்சியின் மற்றொரு தலைவரும், முன்னாள் தென் கரோலினா கவர்னருமான நிக்கி ஹாலேயும் போட்டியில் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன், டொனால்ட் டிரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு பேரணியில் 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பேசினார்.
அப்போது பேசிய டிரம்ப், நிக்கி ஹாலேயின் பெயரை குறிப்பிட்டு பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பை நிக்கி சரிவர கையாளவில்லை என குற்றம் சாட்டினார்.
ஆனால், டிரம்ப் பேச முற்பட்டது அப்போதைய முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியை குறித்து என்பது பின்னர் தெளிவாகியது. பெயர்களை மாற்றி டிரம்ப் உரையாற்றியது விமர்சனத்திற்கு உள்ளானது.

நிக்கி ஹாலே தனது எக்ஸ் கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
ஒரு பேரணியில், 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது நான் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர கவனிக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டி பேசி உள்ளார்.
அப்போது நான் வாஷிங்டன் பகுதியிலேயே இல்லை.
டிரம்ப், நான்சி பெலோசியை குறிப்பிட நினைத்து என் பெயரை பயன்படுத்தி விட்டார் என பிறகு நான் அறிந்தேன்.
ஆனால், அந்த உரையில் "நிக்கி ஹாலே" என தெளிவாக பல முறை என் பெயரைத்தான் அவர் பயன்படுத்தினார்.
கடும் அழுத்தத்தை தர கூடிய அமெரிக்க அதிபர் பதவியில் அமர மிக அதிகமான மன உறுதி வேண்டும். அந்த மன நிலை இல்லாதவர்கள் அப்பதவிக்கு வர கூடாது.
இவ்வாறு நிக்கி பதிவிட்டுள்ளார்.
- நான்கு பேர் போட்டியிட முன்வந்த நிலையில் இருவர் பின் வாங்கினர்.
- டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.
குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். அதேவேளையில் விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
இதனால் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது யார்? என்பதற்கான தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நான்கு பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தேர்தலுக்கான நாள் நெருங்கி வந்த நிலையில் டொனால்டு டிரம்புக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என விவேக் ராமசாமி அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். இதனால் மூன்று பேருக்கு இடையில் போட்டி நிலவியது.
டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாத்தில் ஈடுபட அவருக்கு எதிராக ரான் டி சான்டிஸின் தேர்தல் பிரசாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சான்டிஸும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதனால் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் முன்னிலைப் பெற்று வந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.
இது அவருக்கான முதல் வெற்றியாக கருதப்படும் நிலையில், நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட இரண்டு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 52 வயதான நிக்கி ஹாலே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
- "அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" என்றார் நிக்கி
வரும் நவம்பர் இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களத்தில் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

குடியரசு கட்சியின் சார்பில், டிரம்பை தவிர, இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் தென் கரோலினா மாநில கவர்னரும், ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்கா தூதருமான 52 வயதான நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 2016 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க வழிவகுத்த "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்றுங்கள்" (Make America Great Again) எனும் முழக்கத்தையே இவ்வருட தேர்தலுக்கும் முழக்கமாக கையில் எடுத்துள்ளார், டிரம்ப்.
தற்போதைய நிலவரப்படி, வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள தலைவராக டிரம்ப் பார்க்கப்படுகிறார்.
ஆனால், டிரம்புடன் போட்டியிட முன்வந்த பிற தலைவர்கள் பின்வாங்கி விட்ட நிலையிலும் நிக்கி ஹாலே தொடர்ந்து ஆதரவு தேடி பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரசாரத்தில் நிக்கி தெரிவித்ததாவது:
"அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" (Make America Normal Again).
80-வயதுடைய இருவர் பணியாற்றியதை விட நாம் சிறப்பாக பணியாற்ற முடியும்.
அவர்கள் இருவரின் பரஸ்பர தாக்குதல் மக்களை களைப்படைய செய்து விட்டது. இதில் குழப்பமும் சச்சரவும் மட்டுமே மிஞ்சுகிறது.
தங்களின் சின்னஞ்சிறு நோக்கங்களுக்காக சண்டையிடும் தலைவர்கள் மக்களுக்கு வேண்டாம். அமெரிக்க மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துபவர்களே அவர்களுக்கு அதிபர்களாக வேண்டும்.
நீங்கள் பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் ஒரு அதிபராக நான் நிச்சயம் பணியாற்றுவேன்.
இவ்வாறு நிக்கி கூறினார்.
இதற்கிடையே, "நிக்கி ஹாலே அதிபரானால் அமெரிக்காவை முடிவில்லா போர்களுக்கு தள்ளி விடுவார். ஏனெனில், நிக்கி போர்களையே விரும்புகிறார். தன்னை ஏன் மக்கள் ஏற்க வேண்டும் எனக் கூற அவரிடம் இதுவரை சரியான வாதங்கள் ஏதுமில்லை" என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
77 வயதான டொனால்ட் டிரம்ப் மற்றும் 81 வயதான ஜோ பைடன், இருவருமே முதுமை நிலையை அடைந்து விட்டதால், வேறு ஒரு இளம் தலைவர் அதிபராக வேண்டும் என பல வாக்காளர்கள் கருதுவதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறது.
- அமெரிக்கர்கள் வெற்றி பெறவும், வழி நடத்துவதும் இந்தியா நம்பவில்லை. நாங்கள் பலவீனமாக இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்- இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா முன்னாள் கவர்னருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நிக்கி ஹாலேவுக்கு கட்சி பிரதிநிதிகளிடம் ஆதரவு இல்லை.
இந்தநிலையில் இந்தியா மீது நிக்கி ஹாலே திடீர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறது. ஆனால் தற்போது அவர்கள் (இந்தியா) அமெரிக்கா தலைமை தாங்குவதை நம்பவில்லை. தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா புத்திசாலித்தனமாக விளையாடி ரஷியாவுடன் நெருக்கமாக இருக்கிறது. ரஷியாவிடம் இருந்து ராணுவ உபகரணங்களை வாங்குகிறார்கள்.
நான் இந்தியாவை கையாண்டிருக்கிறேன். அமெரிக்கர்கள் வெற்றி பெறவும், வழி நடத்துவதும் இந்தியா நம்பவில்லை. நாங்கள் பலவீனமாக இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள். சீனா, பொருளாதார ரீதியாக நன்றாக இல்லை. அந்த நாடு அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக போருக்கு தயாராகி வருகிறது. அது அவர்களுக்கு தவறாக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரத்தின்போது நிக்கி ஹாலேவை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று டிரம்ப் விமர்சனம் செய்தார். இதையடுத்து அதை தவிர்ப்பதற்காக இந்தியா மீது நிக்கி ஹாலே திடீரென்று குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதாக கருதப்படுகிறது.
- குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் நிக்கி பின்வாங்கவில்லை
- என்னுடன் நேரடியாக விவாதித்து முகத்திற்கு நேராக கேளுங்கள் என்றார் நிக்கி
2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
குடியரசு கட்சியிலேயே டிரம்பிற்கு மாற்றாக தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னராகவும், ஐ.நா. சபையின் முன்னாள் அமெரிக்க தூதராகவும் பணிபுரிந்த நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும், நிக்கி போட்டியிலிருந்து பின்வாங்கவில்லை.
தென் கரோலினாவில் இருவரும் தங்கள் பிரசாரத்தில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், தனது பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை விமர்சிக்கும் வகையில், "அவரது கணவருக்கு என்ன ஆனது? எங்கிருக்கிறார்? அவர் ஏன் நிக்கிக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு வரவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து நிக்கி தெரிவித்திருப்பதாவது:
தென் கரோலினா பிரசாரத்தில் டிரம்ப் எனது கணவரின் ராணுவ சேவையை கேலி செய்தார். என் கணவருக்காக நான் பெருமைப்படுகிறேன். ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அந்த தியாகம் புரியும்.
டொனால்ட் டிரம்ப் அவர்களே, மைக்கேல் (என் கணவர்) நாட்டிற்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியாது.
உங்களுக்கு என்னை பற்றி ஏதாவது கருத்து கூற வேண்டுமென்றால் என்னுடன் நேருக்கு நேராக விவாதத்திற்கு வாருங்கள். அங்கு என் முகத்திற்கு நேராக கேள்விகளை கேளுங்கள்.
போர்க்களத்தில் நாட்டிற்காக போராடுபவரை நீங்கள் கேலி செய்வீர்கள் என்றால் நீங்கள் – அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல - அமெரிக்க ஓட்டுனர் உரிமம் பெற கூட தகுதியற்றவர்.
இவ்வாறு நிக்கி கூறினார்.
- நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது- டிரம்ப்.
- டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால் பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன்- ஹாலே
அமெரிக்காவில் இந்த வருடம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் யார்? என்பதில் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் நான் அதிபரானால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிக்கி ஹாலே கூறியதாவது:-
டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால், பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன். அவற்றில் ஒன்றுதான் மற்ற நாடுகள் இடையிலான கூட்டணி.
நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நேட்டோ உடனான கூட்டணியை மட்டும் வலுப்படுத்த மாட்டேன். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் உடனான கூட்டணியையும் வலுப்படுத்துவேன். எங்களுடன் அனைவரையும் சேர்த்துக் கொள்வோம். இது அமெரிக்காவின் அதிக நண்பர்களை பற்றியது. குறைப்பதை பற்றி அல்ல."
இவ்வாறு நிக்கி ஹாலே தெரிவித்தார்.
முன்னதாக,
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களுடைய ஆயுத இருப்புகள் குறைந்து வருவதால் நேட்டோ உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் கேட்டிருந்தது. இதுதொடர்பாக டொனால் டிரம்ப் அளித்த ஒன்றில் அவர் கூறியதாவது:
ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம் நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில் ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறிவிடுவேன். நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
- அலெக்சி நவால்னி சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்
- ரஷிய மக்களை எச்சரிக்கும் அதிபருடன் டிரம்ப் கரம் கோர்க்க விரும்புகிறார் என்றார் நிக்கி
கடந்த வாரம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கரோலினா மாநிலத்தில் ஆற்றிய உரையில், அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்படும் நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் அந்த அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தங்களின் நிதி பங்களிப்பை அளிக்காத பட்சத்தில் அந்நாடுகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால் அதில் தலையிட மாட்டேன் என தெரிவித்தார்.
இவரது கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினை தீவிரமாக எதிர்த்து வந்த அலெக்சி நவால்னி (Alexei Navalny) சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்.
இப்பின்னணியில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியின் சார்பில் ஆதரவு கோரி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக களம் இறங்கி உள்ள தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பை விமர்சித்து உரையாற்றினார்.
அப்போது நிக்கி தெரிவித்ததாவது:
தங்கள் பங்களிப்பை தராதவர்களை புதின் தாக்கினால் தடுக்க மாட்டேன் என கூறியதன் மூலம் அந்த கணமே புதினின் கரத்தை டிரம்ப் வலுப்படுத்தி விட்டார்.
தனக்கு உள்ள அரசியல் எதிரிகளை கொல்ல துணியும் புதினை போன்ற ஒருவருடன் டிரம்ப் கை கோர்த்து கொள்கிறார்.
அமெரிக்க ஊடகவியலாளர்களை சிறை பிடிக்கும் ஒருவரின் பக்கம் டிரம்ப் நிற்க முயல்கிறார்.
"என்னை எதிர்த்தால் உங்களுக்கும் இதுதான் (நவால்னியின் மரணம்) கதி" என தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் ஒருவருடன் நட்பாக இருக்க முயல்கிறார்.
இதுவரை நவால்னியின் மரணம் குறித்து டிரம்ப் கருத்து எதுவும் கூறவில்லை. ஏனென்றால், அவர் தற்போது மீதுள்ள பல வழக்குகளில் கவனமாக உள்ளார்.
இவ்வாறு ஹாலே கூறினார்.
அடுத்த வாரம், தென் கரோலினா மாநிலத்தில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஹாலேவும் ஒருவரையொருவர் நேரடியாக எதிர்த்து களம் இறங்கி வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.