என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyakulam"

    • கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.
    • நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). இவருக்கு நதீஸ்வரி, வைத்தீஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நதீஸ்வரிக்கும், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் நெல்லூரைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்து கொடுத்து அவர்களுக்கு நவீன்குமார் (14), நவீனா (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    நதீஸ்வரியின் கணவர் இறந்து விட்டதால் அவர் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று நவீன்குமார் அருகில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.

    அய்யாத்துரை என்பவரது தோட்டத்து கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென நீரில் நவீன்குமார் மூழ்கினார். உடன் சென்ற ஜோதி சிவா மற்றும் கவியரசன் ஆகியோர் அவனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் சிறுவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு புகார் தெரிவித்து கிணற்றில் நவீன்குமாரை தேடினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.
    • ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

    தேவதானப்பட்டி:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர் ஒரு காரில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் தங்களது காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கார் வந்து கொண்டு இருந்தது அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து போடி நோக்கி சரக்கு வேன் சென்றது. 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.

    இதில் காரில் வந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரும் படுகாயமடைந்தார்.

    கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு வெவ்வேறு திசைகளில் விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களும் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களது பெயர் விபரம் தெரியவில்லை.

    இதனிடையே காரில் வந்தவர்களின் செல்போன் உதவியுடன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரியகுளத்தில் வீட்டின் பீரோவை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே லெட்சுமி புரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 33). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது தாயாருடன் பெரிய குளத்துக்கு வந்து விட்டார். அப்போது வீட்டின் சாவியை அருகில் இருந்த மின் மீட்டர் பெட்டிக்கு அருகில் வைத்துச் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்களை திருடிச் சென்றனர்.

    வீட்டுக்கு திரும்பிய கேசவன் பீரோ உடைக்கப்பட்டு கொள்ளை நடந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே வாய்க்காலில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டி வசந்த நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது மகன் அழகுமுருகன் (வயது21). இவர் தனது நண்பர் கெங்குவார்பட்டியை சேர்ந்த சூர்யாவுடன் மோட்டார் சைக்கிளில் சோத்துப்பாறை அணைக்கு சென்றனர். அந்த சாலையில் பாலம் பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இதனை கவனிக்காமல் சென்ற 2 பேரும் மஞ்சள்துறை வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்தனர். படுகாயம்அடைந்த 2 பேரும் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர்.

    உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகுமுருகன் இறந்தார். சூர்யா மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பெரியகுளம் அருகே சொத்து தகராறில் முதியவரை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சின்னமணி (வயது 80). இவரது மகன்கள் அர்ச்சுணன், தர்மலிங்கம். இவர்களுக்கு இடையே சொத்தை பிரித்துக் கொள்வதில் தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று அர்ச்சுணன், தர்மலிங்கம் மற்றும் அவரது மகன் தமிழரசன் ஆகியோர் சின்னமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அர்ச்சுணனை கைது செய்தனர்.

    பெரியகுளம் பகுதியில் தோட்டத்தில் மணல் பதுக்கி விற்பது அதிகரித்து வருகிறது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வராகநதி, சோத்துப்பாறை மற்றும் குளம், குட்டை ஆகியவற்றில் இரவு-பகலாக மணல் கடத்தல் நடந்து வருகிறது.

    போலீசார் மணல் கடத்தும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்தபோதும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை.

    தற்போது மணல் திருட்டில் ஈடுபடும் கும்பல் தோட்டம், புறம்போக்குநிலம் ஆகியவற்றில் மணல் குவியலை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவது அதிகரித்துள்ளது.

    பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் மணல்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் தலைமையில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். புறம்போக்குநிலத்தில் தார்பாயை கொண்டு மூடப்பட்டு மணல் குவியல்கள் விற்பனைக்கு வைத்துள்ளது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்து மணல் கடத்தும் கும்பலை தேடி வருகின்றனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் மணல் கொள்ளை மற்றும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கும்பல் நடமாட்டத்தால் பெரியகுளம் பகுதியில் இயற்கை வளம் குறைந்து வருவதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கிய தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள சருக்குபட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி பாப்பா (வயது 48). தங்கமுத்துவுக்கும் அவரது தம்பி அன்னக்கொடி (42) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தங்கமுத்து இறந்து விட்டார். அதன் பிறகும் அன்னக்கொடியும், அவரது மனைவி கலா ஆகிய இருவரும் பாப்பாவிடம் தகராறு செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று பாப்பாவை அன்னக்கொடியும், அவரது மனைவியும் தரக்குறைவாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த அவர் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னக்கொடியை கைது செய்தனர்.

    பெரியகுளம் அருகே ஒர்க்ஷாப்பை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள மேல் மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 41). இவர் தாமரைக்குளம் செல்லும் சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ஒர்க்ஷாப் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது டிரில்லிங் மிஷின், கட்டிங் மிஷின், வெல்டிங் மிஷின், பைப் ரிஞ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து பிரகலாதன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இரவு நேரத்தில் பனி காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் இதனை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது.

    எனவே இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பெரியகுளம் அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த நபர் குடும்பத்துடன் மாயமானார். புகாரின் பேரில் மாயமான செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    பெரியகுளம் அருகே அட்டணம்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் அழகிரிசாமி (வயது 65). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 35) என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அழகிரிசாமி செந்தில்குமாரிடம் 1 லட்சம் மதிப்புள்ள 3 ஏலச்சீட்டுகள் போட்டு கடந்த 16 மாதங்களாக பணம் கட்டி வந்துள்ளார்.

    செந்தில்குமாரிடம் தன்னுடைய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செந்தில் குமார் பின்பு தருவதாக கூறி அவரை அலைக்கழித்துள்ளார்.

    சம்பவத்தன்று செந்தில் குமாரிடம் பணத்தை கேட்பதற்காக அழகிரிசாமி சென்றுள்ளார். ஆனால் அவர் குடும்பத்துடன் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரிக்கும்போது இது போன்று பல நபர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அழகிரிசாமி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாயமான செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    பெரியகுளத்தில் வாலிபரை கல்லால் தாக்கி கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பெருமாள் (வயது 25). நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஞானசேகரன் (19) என்பவர் காமராஜர் மகன் கார்த்திக் ராஜாவுடன் போதையில் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதை பார்த்த கருப்பையாவும், அவரது மனைவி பழனியம்மாளும் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என கேட்டு அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சத்தம் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் ராஜபாண்டி (19) உள்பட 4 பேர் சேர்ந்து பழனியம்மாளை தென்னை மட்டையால் தாக்கினர்.

    இதை பார்த்த பெருமாள் எனது அம்மாவை எதற்காக தாக்கினீர்கள்? என தட்டி கேட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து பெருமாள் தலையில் போட்டனர்.

    படுகாயமடைந்த பெருமாள் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கருப்பையா தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மதனகலா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஞானசேகரனை கைது செய்தனர்.

    இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தகராறை தட்டிக் கேட்ட சம்பவத்தில் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டது பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியகுளத்தில் குடும்பத்தகராறில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் வடகரை ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி லட்சுமி(வயது34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கோவித்துக்கொண்டு காரைக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

    உறவினர்கள் சமரசப்படுத்தி மீண்டும் பெரியகுளத்திற்கு அனுப்பி வைப்பார்கள். சம்பவத்தன்றும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் லட்சுமி வீட்டைவிட்டு வெளியேறினார்.

    ஆனால் லட்சுமி தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமி மாயமானாரா? அல்லது யாரேனும் கடத்திச்சென்றனரா? என்று விசாரித்து வருகின்றனர்.

    செல்போன் மூலம் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். #BulletNagarajan
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். போலீஸ் தரப்பில் இவரை பிரபல ரவுடி என்று சொல்லப்படுகிறது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அவருடைய மற்றொரு ஆடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்த முறை தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருந்தார்.

    தினம் தினம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரவுடி நாகராஜன், தேனி பெரிய குளம் டி.எஸ்.பி. ஆறுமுகத்தால் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் தென்கரை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BulletNagarajan
    ×