search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Protocol"

    • 17 வயது சிறுவன் 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை.
    • விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை (Porsche car) அதிவேகமாக (150 கி.மீட்டர் வேகத்தில்) ஓட்டி வந்தபோது, அந்த கார் இரு சக்கர வாகனத்தில் மோதி இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குடிபோதையில் கார் ஓட்டிய அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 15 மணி நேரத்தில் சிறார் நீதி வாரியம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், சாலை விபத்து குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத உத்தரவிட்டது.

    குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமினா? என கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் சிறார் நீதி வாரியம் அந்த சிறுவனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்துள்ளார். மேலும், சிறார் காண்காணிப்பு மையத்தில் ஜூன் 5-ந்தேதி வரை அடைக்க உத்தரவிட்டுள்ளது.

    வாரியத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், குற்றம் கொடூரமானதால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை வயது வந்தவராகக் கருதுவதற்கும் அனுமதி கோரி போலீசார் மீண்டும் வாரியத்தை அணுகினர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார். 

    அந்த சிறுவன் ஓட்டி வந்த சொகுசு காரான 'Porsche Taycan'-க்கான நிரந்தர வாகனப் பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவுக் கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த சொகுசு காரை அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது. விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இந்த வழக்கில் கடமை தவறியதற்காக ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    காவல் ஆய்வாளர் ராகுல் ஜக்டேல் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் விஸ்வநாத் டோட்காரி ஆகியோர், இந்த வழக்கில் இரவு பணியில் இருக்கும் போலீஸ் துணை கமிஷனருக்கு - அவர்களின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் நெறிமுறையை பின்பற்றாததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    ×