search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puberty Transition"

    • ஒரு மனிதனின் முழுமையான ஆயுட் காலம் என்பது 120 வயது.
    • மனித உடலினைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

    இன்றைய கட்டுரையில் மனிதனின் வயது கூடும் போது ஏற்படும் மாற்றங்களை பார்ப்போம்.

    கருவில் வளரும் காலத்தில் இருந்தே மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் வயது கூடிக் கொண்டுதான் இருக்கின்றது. அதனை குழந்தை பருவம், விடலை பருவம், இளமை பருவம், முதுமை பருவம் என நம் முன்னோர்கள் பிரித்து வைத்தனர்.

    40 வயதில் நாய் குணம் என்றனர். 60 வயதில் ஓய்வு பெறும் காலம் என்றனர். 60-ம் கல்யாணம், 80-ம் கல்யாணம் என்றனர். ஒரு மனிதனின் முழுமையான ஆயுட் காலம் என்பது 120 வயது என்றனர்.


    பிறந்த நாளில் இருந்து வயது கூட கூட நம் வெளித் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படுவதினை நம்மால் பார்க்க முடிகின்றது. ஆனால் நம் உடலின் உள்ளே உள்ள உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தினை நம்மால் பார்க்க முடிவதில்லை.

    இன்று ஒவ்வொரு நாட்டிலும் மனித உடலினைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சில ஆய்வுகள் கூறுவது மனித உடலின் மூலக் கூறுகளிலும், நுண்ணுயிர்களிலும் இரண்டு கால கட்டத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். ஒன்று நாற்பது வயதில். மற்றொன்று 60 வயதில். இந்த கால கட்டங்களில் ஏற்படும் மாறுதல்களால் சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர்.

    மேலும் புரத அளவின் மாறுபாடு (குறைபாடு) சுமாராக 35 வயது, 60 வயது, 78 வயதுகளில் ஏற்படு வதாக குறிப்பிடுகின்றனர்.

    தலை முடி நரை, சரும சுருக்கம் இவை நமக்கு கண்ணுக்குத் தெரியும் ஒன்று என்றாலும் உடலினுள் உள்ள உறுப்புகள் திசுக்கள், செல்கள் இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தெரிவதில்லை. இந்த மாற்றங்கள்தான் உடல் நல பாதிப்புகளுக்கு காரணம் என்கின்றனர். இருதய பாதிப்பி னையும் குறிப்பிட்டே சொல்கின்றனர்.

    இந்த ஆய்வுக்காக 25 முதல் 75 வயது வரையுள்ள நபர்களை பல வருடங்கள் ஆய்வு செய்தனர். பல ரத்த பரிசோதனைகள் ஒவ்வொரு நபருக்கும் செய்யப்பட்டது.

    வயது கூடுதல் காரணமாக ஏற்படும் மாறுதல்களையும் கண்டறிய முடிந்தது. ஆக முதுமை எப்படி, எதனால் ஏற்படுகின்றது. நோய்களின் பாதிப்பு எப்படி இருக்கும் என பல பிரிவுகளில் கண்டறிய முடிந்தது.

    மூலக்கூறுகளும், நுண்ணுயிர் மாற்றங்க ளும் 81 சதவீதம் வரை 40 வயதிலும், 60-ஐ நெருங்கும் போதும் ஏற்படுவது உறுதி செய்ய முடிந்தது. பொதுவில் 60 வயதில் ஏற்படுவதற்குக் காரணம் அவர்கள் வாழ்வின் பொறுப்புகளை, சவால்களை சந்திக்கும் காலம் என்பதால்தான். மேலும் முறையான உணவு, உடற்பயிற்சி இன்மையும் முக்கிய காரணம் ஆகின்றது என்றனர்.

    ஆய்வில் அவர்கள் மேலும் குறிப்பிட்டு உள்ளது 40 வயதிலேயே மாறுதல்கள் ஏற்படுவதற்கான காரணம் மது, டீ, காபி, அதிக கொழுப்பு இவைகளை அதிகமாக எடுத்து கொள்வதினை காரணமாக சுட்டிக் காட்டினர். சதை, சருமம், இருதயம் இவை பாதிப்பினை அடைவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.


    60 வயதில் மூலக் கூறுகளில் ஏற்படும் மாறுதல்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இருதய பாதிப்பு, சிறு நீரக செயல்பாடு, மாவு சத்து உணவு அதிகம் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு உள்ளனர்.

    ஆரோக்கியமான முதுமை என்ற கருத்தினைக் கொண்டுதான் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் தொடர்கின்றன. சர்க்கரை நோய், மறதி நோய் இவைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடித்து விட்டால் பாதிப்புகளை மிக அதிக அளவில் குறைத்து விடலாம் என்கின்றனர்.

    'நம் உடலில் மூலக் கூறுக ளும், நுண்ணுயிர்களும் ஏராள மான வேகமான மாறுதல்களை மேற்கொள்கின்றன. காரணம்- வளர்ச்சி, வாழும் முறை, சூழ் நிலை, மரபு, நோய் ஆகியவை ஆகும். இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. உணவு முறை குடல் நுண்ணுயிர்களுக்கு பாதுகாப்பானதாக அல்லது பாதிப்பானதாக அமையலாம்.

    பாதிப்பானதாக அமையும் போது ஹார்மோன் சுரப்பதில் குறைபாடுகள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். இதனால தான் உடலை நோ யின்றி பாதுகாப்பது மிக முக்கியமாகின்றது.

    ஆயுளும், ஆரோக்கியமும் கூடிய வாழ்க்கையினை நாம் மேற்கொள்வது அவசியம் ஆகின்றது. ஆதி காலம் முதலே.

    இளமையின் அடிப்படை என்பது (இங்கு இளமை என குறிப்பிடப்படுவது ஆயுளும், ஆரோக்கியமும்தான்) மனித வாழ்வில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. சமீப கால ஆய்வுகள் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் எனும் வாழும் முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூல மாக அதிக நன்மைகளைப் பெற முடியும் என்கின்றன.

    இருதய ஆய்வு விஞ்ஞானிகள் 8 வகை யான மாற்றங்கள் உடலில் நல்ல மாற்றங் களை கொண்டு வரும் என்கின்றனர்.

    * சீரான எடை, புகையிலை தவிர்த்தல் (பீடி, சிகரெட் உள்பட), 7 முதல் 9 மணி நேர தூக்கம், சுகாதாரம், கொழுப்பு, உயர் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இன்றி இருத்தல்.

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருத்தல் ஆகியவையே அதிக நன்மைகளை தரும் என்று வலியுறுத்துகின்றனர்.

    2023-ல் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் நாம் பொதுவில் கூறும் பயிற்சிகளான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சற்று வேகமாக பயிற்சிகள் எடுத்தல், (உதாரணம்) ஓடுதல் போன்றவை தசைகளை வலுவாக, உறுதியாக வைக்கின்றன. எடை தூக்குதல் என்பது சிறிய அளவு எடைதான்.

    பயில்வான் போல் அல்ல? இவைகள், இப்பயிற்சிகள், இள வயதின் இறப்பு விகிதத்தினை வெகுவாய் குறைக்கின்றன என 10 வருட கால ஆய்வின் முடிவாக கூறுகின்றனர்.

    சுமார் 150 முதல் 225 நிமிடங்கள் ஒரு வாரத்திற்கு நடைபயிற்சி, சைக்கிள் போன்ற பயிற்சிகள், வாரத்திற்கு 75 நிமிடங்கள் வேகமான உடற் பயிற்சிகள், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் போன்றவை இருதய நோய் பாதிப்பு போன்றவற்றினை வெகுவாக குறைக்கின்றன. இவை அனைத்தும் விழிப்புணர் விற்காக கூறப்பட்டுள்ளவை. தானே மனம் போல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

    தகுந்த பயிற்சியாளரின் ஆலோசனை இன்றி எந்த பயிற்சியினையும் மேற்கொள்வது தவறு.

    வயது கூடும்பொழுது உடல் நலியத்தானே செய்யும். இது பலரது வாதம். ஆனால் இங்கு கூறப்படும் செய்திகள் ஆரோக்யமாய் வாழவும், தானே ஒழுக்கமின்றி வரவழைத்துக் கொள்ளும் நோய்களை தவிர்க்கவும் மற்றும் முறையாய் சில பயிற்சிகள் மூலம் உடலை பாதுகாக்கவும் இத்தகைய பாதுகாப்பு முறைகள் ஒருவரின் ஆயுளை 7.5 சதவீதம் அதிகரிக்க செய்யுமாம்.

    வயது கூடிய பொழுது சர்கார்டியன் ரிதம் அன்றாட செயல் சுழற்சிக்கான வட்டம் சற்று மாறுபடும். நாம் விழித்திருக்கும் பொழுது தூக்கம் வருகிறது என்று தூங்க சென்று விடுவோம். தூக்கத்தில் இனி விழித்துக் கொள்ளலாம் என்று தோன்றும் இந்த ரிதம் முறையில் இடையூறுகள் ஏற்படும் பொழுது அன்றாட சுழற்சி வட்டமும் மாறுபடும்.

    இது தூக்கத்தினையும் பாதிக்கும். இது தவிர முதியோருக்கு பொதுவில் காணப்படும் மூட்டு தேய்மானம், மூட்டுவலி போன்றவை உடல் நல பாதிப்பினை ஒருவருக்கு ஏற்படுத்து வதால் தூங்குவதற்கும், விழித்திருப்பதற்கும் அதிகமாக இயலாமை பிரச்சினைகள் ஏற்படலாம்.

    நுரையீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு இவையும் தூக்க முறையில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    வயதானவர்கள் உடல் நல பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் ஒரு சில மருந்துகளும் தூக்கத்தினை பாதிக்கலாம். பொதுவில் இரவில் 7 முதல் 9 மணி நேர உறக்கம் முதிய வர்களுக்கு அவசியமே.

    வயது கூடும் பொழுது எலும்பு பலவீனம் அடைகின்றது. இது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கின்றது.

    மூன்றில் ஒரு பெண்ணும், ஐந்தில் ஒரு ஆணும் எலும்பு பலவீனம் காரணமாக எலும்பு முறிவுகளை சந்திக்கின்றனர். இன்று கால்சியம் சத்து நிறைந்த உணவுகள், வைட்டமின் டி சத்து மாத்திரை என மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர்.


    சற்று ஞாபகம் மறந்து விட்டது என்பது வேறு. மறதி நோய் என்பது வேறு. மறதி என்பது (Dementia) நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீர்குலைவு. Alzheimer நோய் என்பது நரம்பியல் சிதைவுகளால் ஏற்படுவது. இது காலம் கூடும்பொழுது அதிக பாதிப்பினைக் கூட உருவாக்கும்.

    இன்று மருத்துவத்தில் முன்னேற்றமான மருந்துகள், இதற்காக வந்துள்ளன. சிறு வயது முதலே ஆரோக்கியமான உணவுகளை மருத்துவர், சத்துணவு நிபுணர் மூலம் அறிவுரை பெற்று கடைபிடிப்பதே இதற்கு சிறந்த தீர்வு.

    60 முதல் 65 வயதில் இருதய நோய் பாதிப்பு என்ற காலம் மாறி 4 முதல் 10 சதவீத மக்களுக்கு 45 வயதிற்குள்ளாகவே மாரடைப்பு நோய், இருதய பாதிப்பு என ஏற்படு கின்றன.

    இவற்றையெல்லாம் தடுக்கவே இன்று மிக அதிகமாக உணவு முறைகள், உடற்பயிற்சி முறைகள் பற்றி பேசப்படுகின்றது. எழுதப்படுகின்றது. அறிந்து பலன் பெற வேண்டியது அனைவரின் கடமையாகும்.

    ×